தொடர்கதை - காதலான நேசமோ - 23 - தேவி
மித்ரா தன் வின்னியோடு ஏதோ மெதுவான குரலில் பேச, அதிலும் பேசும்போது அவள் கண்களும், முகமும் மிளிர, அதைப் பார்த்த ஷ்யாமிற்கு புகைய ஆரம்பித்தது.
நாம பேசாம இருந்தா அவள் சோகமா உட்கார்ந்து இருப்பான்னு பார்த்தா, இப்போ தான் ரொம்ப மும்முரமா பேசிட்டு இருக்காளே. அவள் பேசுறதும் கேட்க மாட்டேங்குதே..
சிறு வயதில் மித்ராவிற்கு ஏதும் கோபம் அல்லது வருத்தம் என்றால் உம்மென்று அவள் வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருப்பாள். யார் கூப்பிட்டாலும் இறங்க மாட்டாள். சாப்பிட மாட்டாள். இன்னும் சொல்லப் போனால் ரொம்ப களைத்து இருந்தால் அதிலேயே தூங்கியும் விடுவாள். முதல் தடவை இப்படி செய்த போது சபரி, முரளி இருவரும் மிகவும் பயந்து விட்டனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.
சபரி பயந்து போய் தன் அண்ணன், அண்ணியை வரசொல்லி சொல்ல, அவர்களோடு ஷ்யாமும் வந்து இருந்தான்.
மித்ராவை விட சுமித்ரா ஒரு வயது தான் இளையவள். ஷ்யாமிற்கும் மித்ராவிற்கும் ஏழு வயது வித்தியாசம். ராம், மைதிலி, தங்கள் குழந்தைகளோடு அன்றைக்கு ஒரு திருமண வீட்டிற்கு சென்று இருந்தனர்.
சுமித்ரா சற்று நை நை. எனவே அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருள் ராமின் காரில் எப்போதும் இருக்கும்.
சபரி அழைக்கவே நேராக இங்கே ராம் குடும்பத்தினர் வந்தனர். காரில் இருந்து இறங்கும் போது சுமித்ராவின் பொம்மை கீழே விழவே, அதை ஷ்யாம் கையில் எடுத்துக் கொண்டு வந்தான்.
ராமிடம் முரளி மித்ராவைப் பற்றி சொல்ல, மைதிலியும் வந்து மெதுவாக அவளைக் கூப்பிட்டு பார்த்தாள். மித்ரா அந்த உம்மென்ற போஸை மாற்றவே இல்லை.
போதாத குறைக்கு யாரவது வந்து ஊஞ்சலில் அமர்ந்தாலும் அழ ஆரம்பித்தாள்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஷ்யாம் , மெதுவாக அந்த ஊஞ்சலில் அமர்ந்தான். அப்படியே சுமித்ராவையும் தன் அருகில் உட்கார வைத்தான்.
அவள் அழுகைக்கு தயாரகாவும், மற்றவர்கள் எல்லோரும் ஏன் அழற, ஏன் இங்கே உட்கார்ந்து இருக்க , இறங்கி வா என்று எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஷ்யாமோ
“மிது , நான் இந்த ஊஞ்சல் ஆட்டி விடறேன். நீ சுமி பாப்பாவையும், இந்த பொம்மையையும் பார்த்துக்கரியா? என்று கேட்டான்.
அவனிடம் “நான் ஏன் பார்த்துக்கணும்?” என்று மித்ரா கேட்டாள்.
“நீ பிக் கேர்ள் தானே. ஸ்கூல் எல்லாம் போறியே? ஆனால் இந்த சுமி பாப்பா குட்டி இல்லியா?
இதைக் கேட்டதும் மித்ரா “ஆமா நான் பிக் கேர்ள்” என்றவள், அவளுக்கு ஷ்யாம் என்று சொல்ல வரதாதால் வீட்டில் அத்தான் என்று சொல்லிக் கொடுத்து இருந்தனர். அதுவும் முழுதாக வராது.
“அத்து. நீ ஆட்டு” என்று கூறவே, மெதுவாக ஊஞ்சலை ஆட்டினான். சுமித்ரா அந்த ஆட்டலில் சிரிக்கவே, அவளைப் பார்த்த மித்ராவும் நன்றாக சிரிக்க ஆரம்பித்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சற்று நேரத்தில் அதை தானாக ஆட விட்டு , மெதுவாக ஷ்யாமும் அவர்கள் அருகில் அமர்ந்தான். அவனோடு அஷ்வினும் வந்து அமர்ந்தான்.
சுமித்ரா பேசாமல் தூங்கி விடவே, ஷ்யாம் மெதுவாக
“மிது பாப்பாவா நீ?
“இல்லை. பிக் கேர்ள்”
“அப்போ ஏன் இவ்ளோ நேரம் ஊஞ்சலில் இருக்க? நீ சாப்பிடலை. அம்மா கிட்டே பேசலை. இப்படி எல்லாம் குட் கேர்ள் பண்ண மாட்டாங்களே?
“நான் குட் கேர்ள் தான் அத்து. அந்த பிரபா சொல்றா நான் பேத் கேர்ள்ன்னு”
“நீ என்ன பண்ணின மிது?
“நான் ஒன்னும் பண்ணலை. இன்னிக்கு கிளாஸ்லே விளையாட கூட்டிட்டு போனாங்க. அப்போ நான் ஒரு ஊஞ்சலில் ஆடினா, அதில் நா ஆடக் கூடாது சொல்றா? ஏன் கேட்டா நான் பெரிசா இருக்கேன். நான் ஆடினா ஊஞ்சல் உடைஞ்சிடும் சொல்றா. ஆனால் இங்கே வந்து டென், ட்வென்டி , போர்ட்டி ஹௌர்ஸ் ஆச்சு. ஊஞ்சல் உடையல. அவ ஏன் அப்படி சொல்றா? என்று கேட்டாள்.
மித்ரா பிறக்கும் போதே சற்று எடை கூடிய குழந்தை தான். அதோடு அவள் எல்லாமே மெதுவாக தான் செய்தாள். அதை சபரி குடும்பம் உணரவே அவளுக்கு மூன்று வயது ஆகி விட்டது.
எல்லா குழந்தைகளும் எட்டு மாதம் முதல் ஒரு வயதிற்குள் உட்கார முயற்சித்து விடும். ஆனால் மித்ரா அதை செய்யவே இல்லை. எல்லோரும் சில குழந்தைகள் அப்படிதான் என்று கூறவே இவர்களும் விட்டு விட்டனர்.
அவள் ஒன்றறரை வயதில் உட்கார ஆரம்பித்து, இரண்டு வயதிற்கு பிறகு தான் நடக்க ஆரம்பித்தாள். இரண்டு வயது வரை அவள் பேசக் கூட முயற்சிக்க வில்லை.
சுமித்ரா பிறந்து எட்டு மாதத்தில் உட்கார்ந்து, அவளின் முதல் பிறந்த நாளில் நடக்கவே ஆரம்பித்து விடவே, ஷ்யாமிற்கு மித்ராவைப் பார்க்க வித்தியாசமாக தெரிந்தது.