அதை பெரியவர்களிடம் கேட்ட போது எல்லோரும் ஒரு வயதில் இல்லாவிட்டால் மூன்று வயதில் குழந்தைகள் சுறுசுறுப்பாகி விடும் என்று கூறவே அவனும் விட்டு விட்டான்.
இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூலில் விட்ட போது தான் அங்கிருந்த ஆசிரியர்கள் இவள் ஸ்லொ பிக்அப் என்று கூறினர்.
அதனால் ஒரு வருடம் கழித்தே அவளை எல்.கே.ஜி சேர்த்து இருந்தனர். ஆனால் அது பெரிய பள்ளி ஆதலால் அவர்கள் பாடங்களை தவிர மற்றவகையிலும் நிறைய அக்டிவிடீஸ் செய்ய சொல்ல, அதை எல்லாம் செய்ய மித்ரா மிகவும் திணறினாள்.
அதிகம் ஓடி விளையாட மாட்டாள் என்பதால், அவள் குட்டி டால் போல் சற்று குண்டாகவே இருப்பாள். அதே சமயம் அவளின் உடலில் தெரியும் முதிரிச்சி செயலில் இருக்காது.
அதனால் கூடப் படிக்கும் குழந்தை அப்படி சொன்னாள் என்று புரிந்து கொண்டான்.
ஷ்யாம் அவளிடம் சமாதானமாக “இதுக்கு போய் யாரவது அழுவாங்களா? உனக்கு தான் வீட்டில் பெரிய ஊஞ்சல் இருக்கே. ஸ்கூலில் நீ தனியா இருக்கணும் .இங்கே பார் எத்தனை பேர் உன்னோடு விளையாடுகிறோம்” என்று கூறினான்.
அழுது கொண்டே “ம்ம்” என்று கூறியவள் “அப்புறம் என்னை லேசி கேர்ள் சொல்றா? நான் அக்டிவிடீஸ் பண்றது இல்லை. மிஸ் சொல்ற எல்லா ஹோம் வொர்க்கும் முடிக்கறது இல்லை. அதனால் நான் பேட் கேர்ள்ளாம்”
இதைக் கேட்ட வீட்டினருக்கு சற்று அதிர்ச்சியே. அவர்கள் அவள் திணறுவதை சில காலமாக உணர்ந்து கொண்டாலும், அதற்கு என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தனர்.
ஆனால் இன்றைக்கு ஒரு குழந்தை சொன்னது போல் மற்றவர்களும் சொன்னால், மித்ரா எப்படி தாங்குவாள். அதோடு அதற்கு பதில் அவள் வயொலேன்ட்டாக மாறி விட்டால் என்ன செய்வது என்று பயம் ஏற்பட்டது.
இப்போதும் ஷ்யாம் “அவளுக்கு உன்னைப் பற்றி ஒன்றும் தெரியாமல் சொல்கிறாள். நீதான் குட் கேர்ள் ஆச்சே. எவ்ளோ சமத்தா நம்ம சுமிய பார்த்துக்கறே. “ என்று சமாதானப்படுத்தவும்,
இப்போது “நான் குட் கேர்ள். அம்மா அத்து சொல்றா நான் குட் கேர்ள்” என்று குதித்து கொண்டு வரவும், சபரி அவளை அணைத்துக் கொண்டு
“ஆமாடா செல்லம் .. நீங்க குட் கேர்ள் தான்” என்று கூறினார்.
பெரியவர்கள் எல்லோரும் இத்தனை நேரம் அவள் அழுகையை சமாதனப் படுத்த நினைத்தார்களே தவிர, அவளை டைவேர்ட் பண்ண வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை.
ஷ்யாமிற்கு அப்போது பதிமூன்று வயது தான். மித்ராவிற்கு ஆறு வயது. ஆறு வயது மித்ராவிடம் ஐந்து வயது சுமியை பார்த்துக் கொள்ள சொல்லவும், அவள் தன் கோபத்தை விட்டு சமாதானமாகி விட்டாள்.
அன்றைக்கு வீட்டிற்கு போகும் போது மித்ரா
“அத்து, எனக்கு அந்த பொம்மை தா” என்று கேட்க, ஷ்யாமும் கொடுத்து விட்டான். அது பிங்க் கலர் டெட்டி பொம்மை.
சுமித்ரா அழுகைக்கு தயாராகவே வேகமாக சென்ற சபரி புது பார்பி செட் எடுத்து அவள் கையில் கொடுத்து விடவே அவள் அதை வாங்கிக் கொண்டாள்.
சுமி எப்போதும் பார்பி செட் வைத்து தான் விளையாடுவாள். அதற்கு வைத்தியம் பார்த்து ஊசி போடுவது தான் அவள் வேலையே.
மித்ரா அப்படி எல்லாம் இல்லை. ஏதோ ஒன்று வைத்துக் கொள்வாள். அப்படி இல்லா விட்டாள் தோட்டத்தில் உட்கார்ந்து பட்டாம்பூச்சி, பறவை எல்லாம் பார்ப்பாள்.
ஆனால் அந்த டெட்டி வந்த பின், அதோடு ஐக்கியமாகி விட்டாள். இத்தனைக்கும் அவள் வீட்டிலும் டெட்டி பொம்மைகள் சைஸ் வாரியாக உண்டு. அவள் அதை எல்லாம் பார்ப்பதோடு சரி. இதைதான் கையில் வைத்துக் கொண்டு தோட்டத்திற்கும் செல்வாள்.
எத்தனை பேனா நாம் வைத்து இருந்தாலும், நம்மை பாராட்டி ஒருவர் பரிசாக பேனா கொடுத்தா அதைதான் நாம் உபயோகிப்போம். அது போல் இந்த டெட்டி அவளுக்கு கிடைத்த பரிசு.
அது சற்று கிழிந்து , மங்கி போனது. அப்போதும் அதே போல் டெட்டி தான் வேண்டும் என்று அடம் பிடித்து அதையும் ஷ்யாமிடமே கேட்டு வாங்கிக் கொண்டாள். அதுதான் இந்த வின்னி.
அதற்கு பிறகு தான் ஷ்யாம் நெட்டில் சேர்ச் செய்து தன் அம்மா, அப்பாவிடம் சொல்லி அவர்கள் மூலமாக வேறு பள்ளியில் சேர்த்தனர். அதற்கும் போக மாட்டேன் என்று அழவே , ஷ்யாம் தான் இந்த ஸ்கூலில் எல்லோரும் உன்னை கேலி பண்றாங்க இல்லியா? புது ஸ்கூலில் அப்படி பண்ண மாட்டங்க அதோட புது ஸ்கூலில் நிறைய நேரம் விளையாட விடுவாங்க என்று கூறவே, அதற்கு பின் தான் அந்த பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள்.
அது ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப் படும் பள்ளி. கிட்டத்தட்ட அவள் மாதிரியே நிறைய பேரைப் பார்க்கவே அவளால் அங்கே பொருந்திப் போக முடிந்தது.
ஐந்தாம் வகுப்பு வரை அவளை அங்கேயே படிக்க வைத்தனர். அதற்கு பின் அவளை வேறு பள்ளிக்கு மாற்றினார்கள். ஆறாம் வகுப்பிற்கு மேல் பாடத்தில் மட்டுமே எல்லோரும் கவனம் செலுத்துவதால் , மித்ராவிற்கு கஷ்டமாக இல்லை.