அந்தக் காட்சியைத் தான் ஒளிப்பதிவாளர் கண்டு ஆச்சரியக் குரல் எழுப்ப தேன்மொழி வந்த திசையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது.
“இதோ இதோ இதைத் தான் நான் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்” இயக்குனர் கூச்சலிட சிபியோ நடந்து வந்து கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.
அலைகள் ‘போகாதே எங்களிடம் வந்துவிடு’ என்று பின்னாலே ஓடி வர அவைகளை நோக்கித் திரும்பி ‘உங்களிடம் தானே வரப் போகிறேன் பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்’ என்பதான ஒரு பாவனையோடு கரையின் மணலில் பாதங்கள் பதிய கீழே குனிந்து மண்ணைக் கண்டு ஒரு உவகைக் கொண்டு காற்று உரிமைக் கொண்டாடிய முடிக் கற்றைகளை செவிமடல்களில் சிறைவைத்து காற்றைப் பார்த்து பரிகாசம் செய்து வந்து கொண்டிருந்தவளின் வதனதிலும் விழிகளிலும் ஒரு ஏக்கத்துடன் கலந்த மகிழ்ச்சி.
இயக்குனர் அதை அப்படியே விவரிக்க வினியோ தேன்மொழியின் மீது மீண்டும் சீற்றம் கொண்டாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“இவள் நிச்சயம் கடல் தேவதை தான்” சிபியின் எண்ணத்தை அவன் உதடுகள் தமிழில் முணுமுணுத்தது அவர்களின் அருகில் வந்துவிட்ட தேன்மொழியின் செவிகளில் தெளிவாக விழுந்தது.
அவள் நேராக வினியிடம் சென்று அவள் கரங்களில் தான் கொண்டு வந்திருந்த பையைக் கொடுத்தாள்.
ஒரு திகைப்புடன் கையில் இருந்தப் பையை நோக்கிய வினி மெல்ல அதனைப் பிரித்துப் பார்க்க பிரமிப்பில் விழி விரித்தாள்.
பையில் இருந்த அந்த அழகிய ஆடையைக் கையில் ஏந்தியவளுக்கு அது போலியில்லை என்று தங்க மீனைப் பார்த்ததுமே புரிந்து போனது.
மார்கெட்டில் நகல்கள் நிறைய உலவினாலும் இந்தத் தங்க மீனை மட்டும் அதே போல பிரதி செய்ய எவராலும் முடியவில்லை.
விழிகளில் நீர் கோர்க்க தேன்மொழியை ஆரத் தழுவிக் கொண்டாள்.
மகிழ்ச்சியில் நிறைந்திருந்த வினியின் மனதில் வேறெந்த எண்ணமும் எழவில்லை எனினும் சிபியின் மனதில் தேன்மொழியைப் பற்றிய ஆர்வமும் சந்தேகமும் அதிகரித்தது.
“இது புத்தம் புதிய டிசைன். எவ்வளவு அழகு. இது எனக்கே எனக்கா” தேன்மொழியைப் பார்த்து வினி கேட்க ஆம் என்பது போல இமை மூடி அவளது தோளில் தட்டிக் கொடுத்தாள் தேன்மொழி.
“நான் இப்போதே இதை அணிந்து கொண்டு வருகிறேன். இந்த ஆடையிலே ஷூட் செய்யலாம்” என்று ஓடிச் செல்ல சிபி தேன்மொழியின் அருகில் வந்தான்.
“ஒரு வருடமாக ஆடை வடிவமைப்பதையே நிறுத்தி இருந்தவரின் புதிய டிசைன் எப்படி இவ்வளவு துரிதமாக இவள் கையில் வந்தது. இவள் யார்” அவனுக்குள் ஐயம் வலுத்தது.
சிபி அவளிடம் கேள்விகளைக் கேட்க முற்படும் முன் அங்கே வந்து சேர்ந்த வினி தேவதை போலவே தோன்றினாள்.
ஒரே டேக்கில் மிகத் திருப்தியாக ஷாட் ஒகே ஆகிவிட குழுவினரும் தேன்மொழியின் மீது நன்றியுணர்வு கொண்டனர்.
அவர்களது நன்றிகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டவள் கப்பலுக்குத் திரும்ப எத்தனிக்க “தேன்மொழி” என்ற சிபியின் அழைப்பு அவளை நிறுத்தியது.
மனதில் இருந்த கேள்வியை அவளிடம் கேட்டே விட்டான் அவன்.
அதற்கும் ஓர் புன்னகையையே பதிலாக தந்தாள் அவள்.
அவளது புன்னகைகளில் ஒரு வித விரக்தியின் சாயல் படிந்திருந்ததை கவனிக்கவே செய்தான் சிபி.
“நீங்க எதற்குமே பதில் பேசாம இப்படியே சிரித்து மழுப்பினால் என்ன அர்த்தம். நீங்கள் உண்மையில் யார் என்று எனக்குப் பதில் சொல்லிவிட்டு தான் போகணும்” அவள் வழியை மறித்துக் கொண்டு நின்றான் சிபி.
அவன் தமிழிலேயே உரையாடியதால் மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை எனும் போதும் அவன் உடல் மொழி மற்றும் செயலின் மூலம் யூகம் செய்தனர்.
அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று எதிர்ப்பார்ப்போடு காத்திருந்த சிபியின் செவிகளில் ஒலித்த வரிகளில் திகைத்துப் போய் நின்றான்.
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}