தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 03 - மது
சென்னை திருவொன்மியூரில் பிரம்மாண்டமாக வீட்றிருந்த அந்தக் கடற்கரை பங்களாவில் நுழைந்தது வெள்ளை நிற ஆடி கார்.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவையே தன் இனியக் குரலால் மயக்கி வைத்திருப்பவளின் மனம் கவர்ந்தவனைக் காணவே அங்கே வருகை தந்தாள் அவள்.
“வாம்மா அமுதா” குரல் கேட்ட திசை நோக்கித் திரும்ப அங்கே தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் அவளின் வருங்கால மாமனார் முத்துக்குமரன்.
“என்ன மாமா இந்த வேலை எல்லாம் நீங்க செய்துட்டு இருக்கீங்க” என்றவள் அங்கே அழகாய் பூத்திருந்த ரோஜாவைப் பறிக்க முற்பட அவள் கரங்களைப் பற்றியது ஓர் வலிய கரம்.
“அது பாப்பாவோட ரோஜாச் செடி. அந்தப் பூவை பறிக்காதே” ஆணையிட்ட கம்பீரக் குரலில் சற்றே கிறங்கித் தான் போனாள். எனினும் குரல் சொன்ன செய்தி அவளுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.
நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டிருந்த நிலையில் இன்னும் திருமண தேதி குறிக்கப்படாமல் இருக்க அவளது மனம் மிகுந்த வருத்தம் கொண்டது.
“பாப்பா இல்லாம இந்தக் கல்யாணம் நடக்காது அமுதா” என்று அவள் தந்தையே உறுதியாக கூறி விட்டிருந்த போது அவளும் தான் என்ன செய்வாள்.
“அமுதா வா வா” போர்டிகோவில் அவள் காரைப் பார்த்து விட்டு ஓடி வந்து வரவேற்றாள் அந்த வீட்டு மூத்த மருமகள் வானதி.
“அக்கா, எப்படி இருக்கீங்க. அத்தை எப்படி இருக்காங்க” பற்றியக் கரத்தை விலக்கி வானதியை நோக்கிச் சென்றாள். தன்னவனின் மேல் இருந்த கோபத்தை வார்த்தையால் காட்டாமல் அவனை அலட்சியபடுத்தி செய்கையால் காண்பித்ததாள்.
“மாறா, மாமாவை கூட்டிட்டு வா. டிபன் எடுத்து வச்சிருக்கேன்” வானதி சொல்ல சரி என்று பதில் கூறி விட்டு தந்தையிடம் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்தவளை இளங்கோவின் கனிவான குரல் வரவேற்றது.
“உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு அமுதா”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“நீங்க தான் ப்ரொடக்ஷன் எல்லாம் முழுசா ஷட் டவுன் செய்துடீங்க. பொது நிகழ்ச்சி எதிலேயும் கலந்துக் கொள்வதில்லை. நான் ஸ்டூடியோ பக்கம் வந்துட்டு தான் இருக்கேன்” அவள் சொல்லி முடிக்கும் முன் “அமுதா” என்ற கோபக்குரல் அந்த வரவேற்பறையையே அதிரச் செய்தது.
அவனது சினத்தில் அமுதாவின் விழிகள் குளமாகி விட
“மாறா எதுக்கு இவ்வளவு கோபம்” இளமாறனை அதட்டினாள் வானதி. எனினும் அவளுக்குமே அமுதாவின் மேல் கோபம் தான். அவள் முக பாவத்திலேயே அதைக் கண்டு கொண்டான் மாறன்.
“வனாதி, அவ எல்லாம் தெரிஞ்சும் வேண்டுமென்றே பேசிட்டு இருக்கா. அதைக் கேட்டுட்டு என்னை சும்மா இருக்கச் சொல்றியா” அவன் முகம் சினத்தில் சிவந்து போயிருந்தது. .
“கோபம்ன்னா எந்தக் கடையில் கிடைக்கும்ன்னு கேட்பான் என் நண்பன். நீங்களும் தான் இருக்கீங்களே, சிடுசிடுன்னு” தனது கணவனிடம் ஊடல் கொள்ளும் போதெல்லாம் நண்பனும் கொழுந்தனுமான இளமாறனின் புகழைப் பாடுவாள் வானதி.
“அவன் மியுசிக்க லவ் பண்றான். அதான் அவனுக்குக் கோபம் வரதில்ல. நான் உன்னை லவ் பண்றேனே” கண்சிமிட்டும் கணவனை அடிக்கத் துரத்திய நினைவுகள் வந்து போயின.
“அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஸ்டூடியோல கூட யாரும் மிஸ்டேக் செய்தா கூட சுத்தமா கோபமே வராது அவருக்கு. நான் ரொம்ப லக்கிக்கா” என்ற அமுதாவே கடந்த ஒரு வருடமாக அவன் குணத்தில் தெரிந்த மாற்றங்களால் அதிர்ந்து தான் போயிருந்தாள்.
இந்த உலகத்தில் யாரை நாம் அதிகமாக நேசிக்கிறோமோ அவரைப் பற்றி அலட்சியமாக ஒரு வார்த்தையைக் கூட சகித்துக் கொள்ள இயலாது.
அமுதாவின் பேச்சு இளங்கோவிற்குமே வருத்தமாக இருந்த போதும் அங்கே இருந்த இறுக்கத்தைத் தளர்த்த எல்லோரையும் உணவு மேஜைக்கு வருமாறு அழைத்தான்.
“வானதி அம்மாவையும் தாத்தாவையும் அழைச்சுட்டு வா. நான் எடுத்து வைக்கிறேன்” என்றவன் சமையல் அறைக்குச் சென்றான்.
“மாறன் ஐ ஆம் சாரி” கண்ணீரோடு அமுதா அவனது கரத்தைப் பற்றினாள்.
அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் இளமாறன்.
“உன் மேல் உயிரையே வச்சிருக்கேன் அம்மு. ஆனா என் உயிரே எங்க பாப்பா தான்னு நீ புரிஞ்சுக்கணும். இந்த வீட்டில் எதையும் சகித்துக் கொள்வோம். எங்க பாப்பா பத்தி மறைமுகமாகக் கூட ஒரு வார்த்தை எங்களால தாங்கிக்க முடியாது” தன்னவன் சொல்ல இப்போது அவர்களின் பாப்பா மீது பொறமை எழவில்லை. இவ்வளவு பேரின் அன்புக்கு உரிமையானவள் மேல் அபிமானம் ஏற்பட்டது.
ஒரு வாரம் முன் தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைத்துப் பார்த்தாள்.
“அவங்களே ஒன்னும் சொல்லலை. நீங்க முந்திகிட்டு ஏன் மாமா கிட்ட கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லணும்” தந்தையிடம் சண்டை போட்டாள்.
லைட்பாயாக தனது பணியைத் தொடங்கிய சேகர் இன்று விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர் என புகழ் பெறக் காரணமே அவள் தானே.