அந்நேரம் அங்கே வந்த தாத்தா குடும்பத்தினர் யாரும் செல்ல வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட அவர்கள் பாப்பா கேட்ட அந்த ஆடையை ப்ராஸ்ளினுக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த உடையை அணித்து கொண்டு கப்பலுக்குள் பிரவேசித்த வெரோனிக்காவின் மீதே மற்ற பயணிகளின் பார்வை பட பாரீஸில் ஆடை நிறுவனத்தை நடுத்தும் அந்தப் பெண்மணி கயலின் புதிய டிசைனா எப்படிக் கிடைத்தது என்று அவளிடம் வந்து விசாரித்தார்.
இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சிபியின் செவிகளில் இன்னும் ஆதி சொன்னதே ஒலித்துக் கொண்டிருந்தது.
“யாரிவள் யாரிவள்” என்றக் கேள்வியே அவன் மனதை துளைத்துக் கொண்டிருந்தது.
தனது அறைக்குச் சென்று இணையத்தை உயிர்பித்து ‘டிசைனர் கயல்’ என்று தேடியவனுக்கு அவன் விரும்பிய செய்திகள் எதுவும் கிட்டவில்லை.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு விடையாக கதவின் டொக் டொக் ஒலி கேட்க யாரது இந்நேரத்தில் தொந்தரவு செய்வது என்று சலிப்போடு திறந்தவன் அங்கே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து தனது கேள்விகளை எல்லாம் மறந்து அவனை அணைத்துக் கொண்டான்.
“கேப்டன் செல்வா இவன் என் நண்பன்” என்று சிபி பெயரைச் சொல்லும் முன் “ஹலோ மிஸ்டர் கவின்” என்று கைகுலுக்கினார் செல்வா.
“உனக்கு எப்படி தமிழ் தெரியும்” நண்பனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“அவர் என்னை கெவின் என்று சொல்லாமல் கவின் என்று சொன்னாரே. அதை நீ கவனிக்கவில்லையா” என்று கேட்ட கெவின் எ கவின் கேப்டனை நோக்கிக் கண்ணடித்தான்.
“காரிபியன் பயணத்தில் பார்த்தது கேப்டன். அங்கே உங்களை அனைவரும் மிஸ் செய்வார்கள்” கவின் சொல்ல
“உங்கள் நண்பர் தான் இங்கே கடத்திக் கொண்டு வந்துவிட்டாரே” என்றார் கேப்டன்.
கவின் தங்கவதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்குமாறு மேனேஜரிடம் சொன்னவர் பயணிகள் குறிப்பேட்டில் கவின் பற்றிய விவரங்களை சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.
நண்பனோடு கப்பலின் மேல் தளத்திற்கு வந்த சிபி உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தான்.
“ஜர்னலிஸ்ட் சார், இது உங்க வெகேஷன். அதனால் இங்க உங்க ஜர்னலிஸ்ட் மூளைக்கு ஓய்வு கொடுத்து இயற்கையின் அழகை ரசித்து மகிழணும்” என்று கவினின் தோள் மீது கை போட்டு இரவு வானின் நிலவின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்த கடலைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
கப்பல் அல்டாப்ரா தீவுக் கூட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஆப்ரிக்க கண்டத்தின் மடகாஸ்கரின் அருகே இருந்த அல்டாப்ரா தீவு கூட்டங்கள் செஷலஸ்ஸை சார்ந்தது.
உலகில் உயரத்தில் முதாலவதும் பரப்பளவில் இரண்டாவதுமான அல்டாப்ரா அடோல் (ALDABRA ATOLL) இந்தத் தீவுகளைச் சேர்ந்தது.
மோதிர வடிவில் பவழப்பாறைகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகளால் கடலின் நீர்மட்டத்தில் இருந்து உயர்ந்து சிறு குன்று போல இருப்பதை ‘அடோல்’ என்பர்.
இந்த அடோல்லுக்கு நடுவில் இருக்கும் நீர்பரப்பு ஆழம் குறைந்து காணப்படும். கடலுக்கும் இந்த நீர்பரப்புக்கும் சிறு பாதைகாளால் தொடப்பு இருக்கும். அவ்விடம் மிகப் பெரிய அலைகள் காணப்படும்.
அல்டாப்ரா அடோலின் பலப் பகுதிகள் இன்னும் மனிதனின் கால் தடம் பதியாத பகுதிகள். சுமார் நாற்பது சிறு தீவுகளும் நான்கு பெரியத் தீவுகளும் உள்ளடிக்கியது அல்டாப்ரா.
பல அரிய வகை கடல் ஆமைகள் ஆயிரக்கணக்கில் இங்கே உலாவிடும் காட்சி காணக்கிடைக்காத அற்புதம்.
இரண்டு நாட்கள் முழுவதும் கடலிலேயே பயணம் செய்து மூன்றாம் நாள் காலையில் அல்டாப்ரா சென்றடைவோம் என்று கேப்டன் பயணிகளிடம் முன்னரே தெரிவித்திருந்தார்.
“அது யார் சிபி இந்நேரத்தில் அங்கே நிற்பது” கீழ்த்தளத்தில் முகப்பில் நின்று கொண்டிருந்தவளை சுட்டிக் காட்டினான் கவின்.
“இரண்டு நாட்களாக என்னைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் பெண்” என்று சொன்ன சிபி முதல் நாள் அவள் கடலில் குதித்த செயலை விவரித்து கூடவே டிசைனர் கயலின் ஆடையை தருவித்ததையும் சொன்னான்.
“தேன்மொழியா. மை குட்னஸ். அவங்க திரும்ப வந்துட்டாங்களா. அவங்களுக்குப் பேச்சு திரும்பிடுச்சா சிபி” கவின் பரபரப்புடன் கேட்க ஆச்சரியமாய் பார்த்தான் சிபி.
சிபி அவள் பெயரை அவனிடம் கூறவே இல்லை. மேலும் அன்று மாலை “அவங்களால பேச முடியாது” என்று ஆதி சொன்னதையும் குறிப்பிடவில்லை.
தேன்மொழியை கவின் அறிந்திருக்கிறான், அதிலும் பேச்சு திரும்பி விட்டதா என்று வேறு கேட்கிறான் என்று வியப்புடன் பார்த்த சிபியை தட்டிக் கொடுத்தவன் அங்கே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.