தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 06 - சித்ரா. வெ
கை குலுக்குவதற்காக கை நீட்டியும் விபாகரன் பதிலுக்கு கை கொடுக்காதது சாத்விக்கிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில மாநிலங்களிலும் ஓரளவிற்கு பிரபலமானவனாக திகழ்பவனை இப்படி மரியாதை குறைவாக யாரும் நடத்தியதில்லை. அதற்காக அவன் இதுவரை கர்வம் கொண்டு சுற்றியதில்லை. இருந்தாலும் முதன்முறையாக தன்னை பார்ப்பவன் இப்படி நடந்துக் கொள்வதற்கான காரணம் புரியாமல் அவன் திகைக்க,
அருகில் நின்றிருந்த பாலா, அஜய்க்கும் கூட விபாவின் செயல் திகைப்பை ஏற்படுத்தியது!! “விபா என்னடா?’ என்று பாலா விபகரனிடம் மெதுவாக கேட்க,
உடனே சாத்விக் மீது இருக்கும் தனிப்பட்ட தன் மன உணர்வுகளை மீட்டுக் கொண்டு நடப்புக்கு வந்தவன், “ஹாய் நைஸ் மீட்டிங் யூ..” என்று கை குலுக்கினான்.
சாத்விக் அடுத்து ஏதோ பேச வருவதற்குள், அஜயிடம் திரும்பிய விபாகரன், “அஜய் அர்ச்சனாவும் அம்மாவும் உன்னை இங்க அனுப்பி வச்சாங்களா? சரி நான் பாலா கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு அதுக்குப்பிறகு வீட்டுக்கு போறேன்.. நானே அம்மாக்கிட்ட சொல்லிக்கிறேன்.. நீ உன் வீட்டுக்கு கிளம்பு..” என்று கூறினான்.
அஜய் அதற்கு சரியென்று தலையாட்ட, ஏனோ விபாகரனுக்கு தன்னிடம் பேச பிடிக்கவில்லை என்பதை சாத்விக்கும் உண்ர்ந்துக் கொண்டான். ஆனால் அதற்கான காரணம் தான் அவனுக்கு தெரியவில்லை.
“சரி போலாமா பாலா..” என்று விபாகரன் கேட்கும் நேரம், பதட்டத்தோடு அங்கு வந்த பன்னீர்,
“என்ன தம்பி ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன் தம்பி..” என்று சாத்விக்கை பார்த்து விளக்கமளித்தார்.
“பரவாயில்ல அங்கிள்.. இவங்க கூடல்லாம் பேசிக்கிட்டு இருந்ததுல வெய்ட் பண்ணது பெருசா தெரியல..” என்று சாத்விக் கூறவும், அவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்தவர், கடைசியாக விபாவை பார்த்து கண்களில் அதிர்ச்சியா! வியப்பா! என்ற புரியாத பாவனையை காட்டியப்படியே,
“நீ.. என்று சொல்ல வந்து அவனின் கம்பீரத்தில் அவரது வாய் தானாக, “நீங்க நீங்க” என்று மரியாதையோடு அழைத்து அவர் அடுத்த வார்த்தை சொல்வதற்குள்,
“பாலா டைம் ஆச்சு வா” என்று அவசரப்படுத்திவிட்டு விபா சாத்விக்கை பார்க்க,
“ஓகே மிஸ்டர் விபாகரன் இன்னொரு முறை சான்ஸ் கிடைச்சா பார்க்கலாம்” என்று அவன் கூற,
“ஓகே சாத்விக் நாமும் அப்புறம் மீட் பண்ணலாம்..” என்று பாலாவும் சாத்விக்கிடம் விடைபெற, அதற்குள் விபாவும் சிறிது தூரம் சென்றுவிட்டான். பாலா அவனை நெருங்க கொஞ்சம் வேக நடை போட வேண்டியதாக போயிற்று,
பாலாவும் விபாவும் கிளம்பியதுமே சாத்விக் சுஜனாவை பார்த்தான். “சாரி சுஜனா நீங்க வர்றது தெரிஞ்சிருந்தா முன்னமே நான் வேண்டாம்னு சொல்லியிருப்பேன்.. இப்போ நீங்க எப்படி தனியா போவீங்க..” என்றுக் கேட்கவும்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“பரவாயில்ல ட்ரைவரோடு தான் வந்தேன்.. அதனால ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க கிளம்புங்க..” என்றாள். அவன் முன்பு சொன்னபோதே அவள் கிளம்பியிருப்பாள் தான், இருந்தும் அஜய் இன்னும் இங்கு இருப்பதால் தான் அவளும் அங்கு இருக்க நினைத்து இருந்தாள்.
அதேபோல தான் அஜயும், சுஜனா இன்னும் கிளம்பாததால் விபாகரன் கிளம்பியும் அவன் இன்னும் கிளம்பாமல் அங்கேயே நின்றிருந்தான்.
சுஜனா அப்படி சொல்லவும், சாத்விக் சரியென்று சொல்லி கிளம்பிவிட்டான்.
அவர்களை விட்டு சாத்விக்கும் பன்னீரும் விலகி வந்ததும், “தம்பி இப்போ போனானே அவனை நீங்க என்ன பேர் சொல்லி கூப்பிட்டீங்க?” என்று சாத்விக்கை பார்த்து பன்னீர் கேட்கவும்,
“என்ன மரியாதை இல்லாம பேசறீங்க அங்கிள்.. அவர் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் தெரியுமா?” என்றுக் கேட்டான்.
“என்ன தம்பி சொல்றீங்க.. அவனை எனக்கு ஏற்கனவே தெரியும் தம்பி.. முழுப் பேர் தெரியாது.. ஆனா அவனை அவங்க வீட்ல விபுன்னு கூப்பிடுவாங்க.. என்னோட பெண்டாட்டி ரத்னாக்கு தெரிஞ்ச குடும்பம் தான், அப்போ சாதாரண கம்பெனியில் வேலை பார்த்தான்.. அவனோட அம்மா என்னோட பொண்டாட்டி கூட பருப்பு கம்பெனிக்கு வேலைக்கு போனாங்க.. இப்போ எப்படி இவன் எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனான்னு தெரியலையே..” என்று யோசனையோடு கூறினார்.
“அப்படியா? மிஸ்டர் விபாகரன் சில வருஷங்களா தான் சுதர்ஸ்ன் க்ரூப் ஆப் கம்பெனிக்கு சேர்மனா இருக்கார். அது அவர் தாத்தாவோட கம்பெனின்னு சொல்லியிருக்கார். அதை கூட ஒரு ஆர்டிக்கலில் தான் படிச்சேன்..
ஆனா அதுக்கு முன்ன மிஸ்டர் விபாகரன் எப்படி இருந்தார்னு எனக்கு தெரியாது.. நீங்க வேற யாரையோ இவர்னு சொல்றீங்க” என்று பன்னீரிடம் கூறினாலும்,
“விபாகரனின் நடவடிக்கை, பன்னீர் சொன்னதையெல்லாம் வைத்து பார்த்தால், விபாகரனுக்கு யாதவியை தெரிந்திருக்குமா? யாதவிக்கும் எனக்குமான சம்பந்தமும் தெரிந்திருக்குமா? அதுதான் விபாகரன் இப்படி நடந்துக் கொள்ள காரணமா?” என்று சாத்விக் யோசித்தான். ஆனாலும் பன்னீரிடம் விளக்கமாகவும் யாதவி சம்பந்தமாக எதுவும் கேட்க முடியாததால் அமைதியாகிவிட்டான்.
“சரி இப்போ எதுக்கு தம்பி அவனை பத்தி பேசிக்கிட்டு, வாங்க நேரமாச்சு கிளம்புவோம்..” என்று சொல்லிவிட்டு பன்னீரும் அதன்பின் அமைதியாகிவிட்டார்.