அமேலியா - 56 - சிவாஜிதாசன்
இரவுக்கு சில சக்திகள் உண்டு. பெரும்பாலானவர்களுக்கு பகலில் கிடைக்காத நிம்மதி இரவில் கிடைக்கலாம், பகலில் ஓடும் மனித வாழ்க்கை இரவில் அமைதியை நாடுகிறது. இரவை மட்டும் இறைவன் படைத்திராவிட்டால் மனித இனம் பைத்தியம் பிடித்து என்றோ அழிந்து போயிருக்கும்.
இரவு அமைதியைக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும், நிம்மதியின் மகத்துவத்தை புரிய வைக்கும், கற்பனைகளை உருவாக்கும். இரவு இன்பம் நிறைந்தது.
அந்த இரவு வேளையில் வசந்தின் கார் அந்த ரெஸ்டாரண்டை அடைந்தது. மணி பதினொன்றை தாண்டி சென்றுகொண்டிருந்தது. விரல் விட்டு எண்ணிவிடும் அளவே வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.
அமேலியாவை எப்படி அழைத்து செல்வது? திடீரென யாராவது அமேலியாவை விசாரித்தால் என்ன சொல்வது என பல ஒத்திகைகள் வீட்டினுள் செய்து ஒருவித பயத்துடன் கிளம்ப நேரமாகிவிட்டது.
துளி கூட விருப்பமில்லாமல் நாராயணன் அவர்களோடு சேர்ந்து வர வேண்டிய சூழல். அவர் முகத்தில் பதட்டம் அதிகரித்தது. இதற்கு முன் அவர் இது போல் பதட்டமான சூழ்நிலையை கையாண்டதில்லை. இந்த நாள் புதுமை என்றாலும் அவர் இதை விரும்பவில்லை.
"இந்த பொண்ணு ஏன் என்னை இளமையா வரஞ்சு தொலைக்கணும்?" என சலித்தபடி காரில் இருந்து இறங்கிய நாராயணன் ரெஸ்டாரண்டை ஒரு முறை நோக்கினார்.
மற்றவர்களும் ஒவ்வொருவராக இறங்க, அமேலியாவும் வசந்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"வசந்த்" நாராயணன் அழைத்தார்.
"சொல்லுங்கப்பா"
"எதாச்சும் வில்லங்கம் வந்திடுமோன்னு பயமா இருக்குப்பா"
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"பயப்படாதிங்கப்பா. ஒண்ணும் ஆகாது. ஜஸ்ட் டின்னர் சாப்பிட்டு கிளம்பப்போறோம். அவ்வளவு தான்"
"எல்லாத்தையும் சாதாரணமா நினைக்காதடா வசந்த். எனக்கும் பயமா இருக்கு" என்றாள் மேகலா.
"அக்கா நீயுமா? உன்னை எவ்வளவு தைரியமான மனுஷின்னு நினச்சேன். நீ போய் இப்படி பேசலாமா?"
மேகலா வசந்தை முறைத்தாள். "என்னடா கிண்டலா? திடீர்னு ஒரு போலிஸ்காரன் வந்துட்டான்னு வச்சிக்கோ. எப்படி சமாளிப்ப?"
"போலிஸ் வந்தா என்ன? நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பாக்க வேண்டியது தான்"
நாராயணன் நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தார். "சரி சரி வாங்க, பேசிட்டு இருக்க நேரத்துல இந்நேரம் பாதி வேலையை முடிச்சிருக்கலாம்"
எல்லோரும் ரெஸ்டாரண்டினுள் நுழைந்தனர். ரெஸ்டாரண்ட் காலியாக இருந்தது அவர்களுக்கு சற்று நிம்மதியை தந்தது.
முட்டை வடிவ மேஜையின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர்கள் அமர்ந்தனர். முதலில் மேகலா பின் நாராயணன், நிலா என வரிசையாக அமர்ந்தனர்.
வசந்தும் அமேலியாவும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். குடும்பத்தோடு வெளியே வந்தது, அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி நிறைந்த மனம், இவற்றோடு காதலனும் உடன் சேர வான் வீதியில் நடப்பதை போல உனர்ந்தாள் அமேலியா.
"டேய் என்ன செஞ்சுட்டு இருக்க?" மேகலாவின் குரல் கனவுலகில் மிதந்துகொண்டிருந்த வசந்தையும் நிஜத்திற்கு அழைத்து வந்தது.
அமேலியாவும் வசந்தும் நாற்காலியில் அருகருகே அமர்ந்தனர்.
அதைக் கண்ட நாராயணன் அதிர்ச்சியானார். "வசந்த், இங்க வா. எனக்கு இந்த இடம் சரியாப்படல. இடுக்கமா இருக்கு"
எந்த காரணத்திற்காக நாராயணன் அப்படி சொல்கிறார் என உணர்ந்துகொண்ட வசந்த். "அடிக்கடி இடத்தை மாத்தகூடாதுப்பா. மத்தவங்களுக்கு சந்தேகம் வரும்" என அவரை கட்டுப்படுத்தினான்.
நாராயணன் கோபத்தில் அனல் மூச்சை வெளியேற்றினார். வசந்த், அமேலியாவின் அருகில் அமர்ந்ததை சகிக்கவும் முடியாமல் எடுத்து சொல்லவும் முடியாமல் பயம் கலந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்.
பயம் மனிதகுலத்தை கட்டுப்படுத்த இறைவனால் உருவாக்கப்பட்ட ஆயுதம். எந்த தைரியசாலிக்குள்ளேயும் பயம் ஒளிந்திருக்கும். பயமில்லா மனிதன் என இங்கு யாருமில்லை. எல்லோரும் ஒவ்வொரு பயத்தை சுமந்துகொண்டு ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கிறோம்.
சாலையில் வேகமாய் சென்று விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவனை மெதுவாய் செல்ல வைக்கிறது. கொலை செய்தால் சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற பயமே ஒரு உயிரை இன்னொருவனிடமிருந்து காக்கிறது.
நம்மை சுற்றி போடப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பயமே. உண்மையை கூற வேண்டுமென்றால் பயமே இன்னும் மனிதகுலத்தை காத்துக் கொண்டிருக்கிறது.