"சுவீட் கேர்ள்" என நிலாவின் கன்னத்தை தட்டிய ஃப்ராங்க்ளினின் கண்கள் அமேலியாவை நோக்கின. அவர் கண்கள் அகல விரிந்தன.
அமேலியா தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
"வசந்த்" மெல்லமாய் அழைத்தார்.
"சார்"
"இந்த கேர்ள் யாரு?"
வசந்த் மேகலாவையும் அப்பாவையும் பார்த்தான், என்ன பதில் கூறுவது என வசந்த் விழித்தான்.
"இதுக்கு தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன்" என நாராயணன் மேகலாவின் காதில் மெதுவாய் ஓதினார்.
"சார், நீங்க எப்படி இங்க? அதுவும் இந்த நேரத்துல?" வசந்த் பேச்சை மாற்றினான்.
"இது என்னுடைய ரெஸ்டாரண்ட் தான் வசந்த்"
வசந்த் அதிர்ச்சியானான். "சார் நீங்க எவ்வளவு பெரிய வசதியான மனிதர். ஒரு சாதாரண ரெஸ்டாரண்ட்டை வாங்கிருக்கிங்க"
ஃப்ராங்க்ளின் சிரித்தார். "இதை நான் வாங்கல வசந்த். இது என் அப்பாவோட ரெஸ்டாரண்ட்"
வசந்த் ஆச்சர்யம் அடைந்தான். "ரெஸ்டாரண்ட்டை பெருசா டெவலப் செய்யாம இருக்கிங்க சார்"
"கொஞ்சம் அந்த டேபிளுக்கு வாங்க வசந்த். பிரீயா பேசலாம்" என ஃப்ராங்க்ளின் முன்னே எழுந்து சென்றார்.
"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்திடுறேன்" என வசந்த் எழுந்து சென்றான்.
"நல்ல நேரத்துல அந்த ஆளு வந்து சேர்ந்தான்" என தலையில் அடித்துக்கொண்டார் நாராயணன்.
ஃப்ராங்க்ளினின் எதிரே அமர்ந்தான் வசந்த்.
"இந்த ரெஸ்டாரண்ட் முழுக்க என் கனவுகள் கற்பனைகள் நிறைஞ்சிருக்கு வசந்த். பலதரப்பட்ட மக்கள் பல மனநிலைகளோட இங்க வருவாங்க. உதாரணத்துக்கு சொல்ல போனா, ஒருத்தன் சந்தோசமா காபி சாப்பிட வருவான், இன்னொருத்தன் வருத்தத்தோட சாப்பிடுவான், இன்னொருத்தன் பசிக்காக சாப்பிட வருவான்"
"சார் அதெல்லாம் இருக்கட்டும், எதுக்கு என்ன வர சொல்லி பாக்காம அவாய்ட் பண்ணீங்க அத சொல்லுங்க" என்றான் வசந்த்.
ஃப்ராங்க்ளின் சிரித்தார். "ஏன் வசந்த் அவசரப்படுற? சொல்ல வரதை பொறுமையா கேளு. உன் அவசரத்தால தான் நிம்மதியில்லாம தவிச்சிட்டு இருக்க"
வசந்த் அமைதியானான். அவர் சொல்வது உண்மை தான் என அவன் மனம் கூறியது.
"கனவை அடையறதுக்கு நமக்கு தேவை பொறுமை. நம்ம கனவு நாம எதிர்பார்த்த உருவத்திலேயே வந்திடாது. அது பல ரூபத்துல வரும். பக்குவமா கையாளணும். நீ இப்போ பக்குவப்பட்டுட்டியா வசந்த்?"
"எனக்கு புரியல சார்"
"அன்னிக்கு என் லட்சியத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்கமாட்டேன்னு சொன்னியே. இப்போவும் அதையே சொல்லுவியா?"
வசந்த் யோசித்தான். "எனக்கு தெரியல சார்"
"நான் உன் தன்மானத்தை சீண்டிப் பாத்தேன். உன்னை வர சொல்லி உதாசினப்படுத்தினேன், என் மேல கொலவெறியில இருப்ப. ஆனாலும் பொறுமையா பேசிட்டு இருக்க. அதுக்கு என்ன காரணம் தெரியுமா வசந்த்?"
"தெரியல சார்"
"இன்னும் அந்த வாய்ப்புக்காக ஏங்கிட்டு இருக்க வசந்த். இப்போ அந்த வாய்ப்பு உனக்கு திரும்ப கிடைக்குதுன்னு சொன்னேன்னா நான் சொல்லுற கண்டிஷனுக்கு எல்லாமே நீ சரின்னு தான் சொல்லுவ"
வசந்த் அமைதியாக அவரை பார்த்தான்.
"உண்மையா இல்லையா?"
வசந்திற்கு என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. காலச் சூழல் அவன் வார்த்தைகளை கட்டிப்போட்டு விட்டது.
"உன்னை எனக்கு பத்து நாளா தான் தெரியும்? அதுக்கு முன்னாடி உன்னை யாருன்னே தெரியாது. திடீர்னு நீ வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்னு சொல்லுற. அதை நான் எப்படி நம்புறது?"
அவர் கூறியது வசந்தை மேலும் யோசிக்க வைத்தது.
"ஆரம்பத்துல என் குடும்பமும் சாதாரணமானது தான் வசந்த். இந்த ரெஸ்டாரண்ட்டை என் அப்பா கஷ்டபட்டு உருவாக்கினாரு. ஒரு நாள் எங்க ரெஸ்டாரண்ட் எதிரே இன்னொரு ரெஸ்டாரண்ட் வந்துச்சு"
ஃப்ராங்க்ளின் வசந்தின் முகத்தை உற்று நோக்கினார். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. மேற்கொண்டு பேசினார்.