ரூபினிக்கே என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. அர்ச்சனாவோடு அனுப்பி விடக் கூடாதென்று யாதவி மனதில் வேண்டிக் கொண்டிருந்தாள்.
“தனியா எல்லாம் பார்த்துக்க முடியல ரூபினி அதான் கேக்கறேன்.. ஈவ்னிங் அனுப்பிவிட்டுட்றேன் என்ன சொல்றீங்க..” என்று விடாப்பிடியாக அர்ச்சனா கேட்கவும், ரூபினியால் மறுக்க முடியவில்லை. விபாகரனின் தங்கை தானே கேட்பது அதனால் பாலா ஒன்று சொல்லமாட்டான் என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவள்,
“தேவி அர்ச்சனா கூட அவங்க வீட்டுக்கு போய் கூடமாட உதவி செய் போ..” என்று கூறினாள்.
“அண்ணி எனக்கு அங்க போக விருப்பம் இல்லண்ணி.. ப்ளீஸ் என்னை அனுப்பலன்னு சொல்லிடுங்க..” என்று யாதவி ரூபினியிடம் மெதுவாக பேசி கெஞ்சவும்,
“ஒரு வீட்ல வேலைக்காரியா இருந்தும் திமிர் அடங்குதா பாரு..” என்று அர்ச்சனா மனதில் நினைத்துக் கொண்டாள்.
“இங்கப்பாரு தேவி.. பாலாவும் அர்ச்சனா அண்ணாவும் பிஸ்னஸ் பார்டனர்.. இப்போ நான் அவங்க கூப்பிட்டு உன்னை அனுப்பலன்னா அதனால உங்க அண்ணனுக்கு ஏதாச்சும் பிரச்சனை வரும்.. நீ வேலைக்காரின்னு மனசுல நினைச்சுக்கிட்டு போகாத.. நமக்கு தெரிஞ்சவங்களுக்கு உதவி செய்ய போறதா நினைச்சு போ..” என்று யாதவியை அர்ச்சனாவோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தாள்.
பின் வாங்கிய பொருட்களை பில் போட போகும்போது அங்கே வீட்டு உபயோக பொருட்கள் இருக்கும் பிரிவில் விற்பனைக்களுக்கான தொலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. அதில்,
பிரபல ஜிம் ஒன்றில் மந்திரியின் மகளுக்கு அடிபட இருந்து நூலிழையில் தப்பித்தார். அங்கு உடற்பயிற்சி செய்வதற்காக வைத்திருக்கும் இயந்திரங்கள் அரசு முத்திரை பெற்ற தரமான இயந்திரங்கள் இல்லை என்பதாக சொல்லப்படுகிறது. அதை ஆய்வு செய்ய குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அது பாதுகாப்பில்லாத உடற்பயிற்சி கூடம் என்று மக்கள் பீதியில் உள்ளனர் என்று செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அது அவர்களுக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடம் என்பதால்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
செய்தியை பார்த்ததும் தன் அன்னைக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை அறிந்துக் கொண்டவள், அடுத்து உடனே பாலாவை தொடர்பு கொண்டு பேசினாள்.
ரூபினி சொல்வதற்கு முன்பே பாலாவிற்கும் அந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்தான். முழுக்க முழுக்க இது ராகிணியின் நிர்வாகத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடம். அதில் அவரது கணவரோ இல்லை மருமகன் பாலாவின் தலையீடு இருந்ததில்லை. இப்போது அங்கு பிரச்சனை என்று வரவும் பயந்து போன ராகிணி உடனே பாலாவை தான் அழைத்தார்.
பிரபலங்கள் வந்து போகும் அளவிற்கு பிரபலமான அந்த உடற்பயிற்சி கூடத்தில் இதுவரை இப்படி ஆனதே இல்லை. அப்படியிருக்க இன்று இப்படி ஒரு சம்பவம் நடக்க என்ன காரணம் என்று பாலா ஆராய தொடங்கினான்.
இது யாருடைய சதி வேலையாகவும் இருக்கும் என்று சந்தேகமும் பாலாவுக்கு வர, இதை யார் செய்திருப்பார் என்று ரகசியமான முறையில் அவனுக்கு இருந்த செல்வாக்கின் மூலம் கண்டுப்பிடிக்க முயற்சித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அதற்கு யார் காரணம் என்று அறிந்தவனோ அதிர்ச்சியில் உறைந்துப் போனான்.
யாதவியோடு அர்ச்சனா வீட்டுக்கு வரவும் மஞ்சுளாவிற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. அர்ச்சனாவை விட மஞ்சுளா முன் நிற்க தான் யாதவிக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.
அர்ச்சனாவை தனியாக அழைத்துச் சென்ற மஞ்சுளா, “என்ன அர்ச்சனா யாதவியை இங்க ஏன் கூட்டிட்டு வந்திருக்க..” என்றுக் கேட்டார்.
“இன்னைக்கு வீட்டு வேலை செய்ய ஆள் வரல இல்ல.. அதான் என்னோட ப்ரண்ட் ரூபினிக்கிட்ட சொல்லி உதவிக்கு அவங்க வீட்டு வேலைக்காரியை கூட்டிட்டு வந்திருக்கேன்..” என்று அர்ச்சனா யாதவிக்கு கேட்கும்படி சத்தமாகவே கூறினாள்.
“என்ன அர்ச்சனா இது.. எதுக்கு இப்படியெல்லாம் செய்ற.. முதலில் யாதவியை வீட்டுக்கு அனுப்பு..” என்று மஞ்சுளா கோபப்பட்டார்.
“அம்மா எதுக்கு கோபப்பட்ற.. நான் என்னோட ப்ரண்ட் அனுமதியோட தான் இவளை கூட்டிட்டு வந்துருக்கேன்.. மெதுவா சாயந்தரம் அனுப்பினா போதும்.. நான் என்னோட உதவிக்காக கூட்டிட்டு வந்துருக்கேன்.. நீங்க உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க..” என்று அனுப்பி வைத்தவள்,
“ப்ரிட்ஜ்ல இருக்க காய்கறியை எடுத்து கட் பண்ணி வை தேவி..” என்று பெயரில் அழுத்தம் கொடுத்து சொன்னப்படியே அர்ச்சனாவும் அவளது அறைக்குச் சென்றாள்.
“நான் செஞ்ச தப்புக்கு எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுக்கிற கடவுளே..” என்று மனதில் ஒருமுறை நினைத்து கண்ணீர் சிந்திய யாதவி, பின் கண்களை துடைத்துக் கொண்டு அர்ச்சனா சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
அதேநேரம் வீட்டின் முன் காரை நிறுத்திய விபாகரன் வீட்டுக்குள் வரவும் அவனது அலைபேசி ஒலியெழுப்பியது.
அவன் சொன்ன வேலையை வெற்றிக்கரமாக முடித்த விஷயத்தை மறுமுனையில் இருப்பவர்கள் கூறவும், வெற்றி புன்னகையோடு உள்ளே வந்தவன், தண்ணீர் அருந்த உணவு மேசையை நோக்கிச் சென்றான், அங்கே தண்ணீர் இல்லாததால் நேராக சமையலறை சென்றவன், அங்கே யாதவியை கண்டு இன்பமாக அதிர்ந்தான். முன்பு கண்ட கனவு நிஜமானது போல் ஒரு தோற்றமாக யாதவி அவன் வீட்டுச் சமையலறையில்..
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}