தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 21 - சுபஸ்ரீ

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடக்கப் போகுது” என்று கூறிய ஆகாஷை இளகாரமாக பார்த்த சாரு “அவங்க ரெண்டு பேரையும் உட்கார வெச்சி அட்வைஸ் பண்ணப் போறியா?” எனக் கேட்கவும் செய்தாள்.
“கரெக்டா சொல்லிட்ட தாத்தா” என ஆகாஷ் வம்படியாக சாரு தாத்தாவை கட்டிப் பிடித்தான்.
“விடுடா எல்லாரும் பாக்கறாங்க” என்றாள் வெட்கம் கலந்தவளாய்
“தாத்தாவ பேராண்டி கட்டிப்பிடிச்சா தப்பா?” முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கேட்டான்.
“அது சரி” என முணுமுணுத்தாள்.
“தாத்தா நீங்க சொல்றது ரொம்பவும் சரி . . இந்த மூலிகைகள் எல்லாம் நம்ம நாட்டு பொக்கிஷம். அதை நாமதான் காப்பாத்தணும்.” என்றான் ஆகாஷ்.
ஆசிரமத்தில் இருந்த மூலிகை கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் காதையும் இச்சொற்கள் சென்றடைந்தது என்பதை அவர்கள் முக பாவத்தை வைத்தே கண்டுக் கொண்டான் ஆகாஷ்.
“நா எப்படா சொன்னேன் . . என்னை ஏன்டா கோத்துவிடற ” சாரு அவன் காதுகளில் உஷ்ணமாய் கிசுகிசுத்தாள்.
அவளுக்கு மட்டுமே கேட்கும்படி “ரிவால்வர் ரீட்டா இப்படி பேசலாமா?” என நக்கலாய் பதிலளித்தான்.
“அடிங்க ரிவால்வராவது ரீட்டாவாவது . . போடா” என நழுவி விட்டாள்.
“ஏ இருடி . .ஸாரி தாத்தா” என அவளை வம்பிழுத்தான். இந்த நாடகம் அவ்வப்பொழுது அரங்கேறியது.
இவன் இத்தனை பேசியும் அந்த இருவரும் பதில் பேசாமல் இருந்தது சாருவிற்க்கு வியப்பாகவே இருந்தது. “ரெண்டுக்கும் காது கேட்காதோ” என தானே கேள்வியும் கேட்டு பதிலையும் சொல்லிக் கொண்டாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
பாடனிஸ்ட் பத்ரிநாத்திடம் பணிபுரிபவர்கள் நான்கைந்து பேர் ஆசிரமத்திறக்குள் நுழைந்துவிட்டனர்.
ஆகாஷின் கட்டளைகளை சிரமேற் செய்தனர். சாரு அதிகம் ஆசிரமத்திறக்கு வருவதை ஆகாஷ் விரும்பவில்லை. சுவாதி சாரு இருவரில் ஒருவரால் மற்றொருவருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்பட்டான். ஆனால் சாரு அவ்வப்பொழுது வெவ்வேறு அவதாரத்தில் வந்துக் கொண்டுதான் இருந்தாள்.
வாரங்கள் மாதங்களாகின. ஆகாஷ் இங்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆகாஷ் ஏதோ செய்கிறான் எனறு மட்டும் சாருவிற்க்கு புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை. பலமுறை அவளும் கேட்டாகிவிட்டது. “இங்க மரம் செடிக்கு கூட காது இருக்கும் சும்மா இரு” என்று மட்டும் பதில் வரும்.
இப்பொழுதெல்லாம் அவளிடம் ஆகாஷ் எந்த வேலையும் கொடுப்பதில்லை. பத்ரிநாத்தின் சிஷ்யகோடிகளை வைத்தே சிலபல வேலைகளை நடத்துக்கிறான்.
ஒரு நாள் சுவாதி முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே பதுங்கியபடி காட்டுப் பகுதிக்குள் செல்ல தொடங்கினாள். இதைப் பார்த்த சாரு மெல்ல அவளை பின் தொடர்ந்தாள்.
சுவாதி சற்று வேகமாகவே நடந்தாள். சாருவிற்கோ மனம் பதைபதைத்தது. இப்படி ஒரு தேச துரோக செயலில் தன் அக்கா ஈடுபடுவாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. தன் அக்கா மீது கட்டுக் கடங்காத கோபம் மூண்டது. இருப்பினும் அவள் நடவடிக்கையை கண்காணிக்கும் பொருட்டு அமைதி காத்தாள்.
குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அங்கே கடத்தல் கூட்டத்தை சேர்ந்த மூவர் இருந்தனர். சாரு பாதுகாப்பாக ஓரிடத்தில் மறைந்தபடி அவர்கள் நடவடிக்கையை கவனிக்கலானாள்.
“எத்தின நேரமா வெயிட் பண்றது” ஒருவன் அலுத்துக் கொண்டான்.
“வேலய பாக்கலாமா?” வார்த்தைகளால் அடக்கினாள் சுவாதி.
அங்கிருந்த செடிகளை ஆராய்ந்தபடி சென்றாள். சில பூக்களின் இதழ்களை சேகரித்தாள் பின்பு மர பட்டைகள் வேர் என பலவும் சேகரித்தாள்.
“இது சக்கர வியாதிக்கு நல்லது”
“இது ஸ்கின் டிசீஸ்க்கு ஆரம்ப நிலையில இருக்கும் போது மட்டும் வேலை செய்யும்” என ஒவ்வொன்றாய் காண்பித்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“நாங்க இத மொத்தமா எல்லாத்துக்கும்னு சொல்லி வித்திடுவோம்” என ஒருவன் சிரித்தபடி சொல்ல மற்ற இருவரும் அவனுக்கு எசப்பாட்டு பாடினர்.
ஒருவரின் வேதனை வலியை எப்படி எல்லாம் காசாய் மாற்றுவது என நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அடுத்தவரின் நோய்தான் இவர்களின் மூலதனம்.
அசுரர்கள் மனித பிறவிகளாய் பிறப்பெடுத்துள்ளனர். சுவாதி அவர்கள் பேச்சை காதில் வாங்காமல் தன் வேலையில் மட்டுமே கருத்தாய் இருந்தாள்.
“நீஙக போகலாம்” என கட்டளை இடவும் அவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
இதைக் கண்ட சாருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவர்கள் இவள் பேச்சிற்க்கு கட்டுப் படுகிறார்கள். ஒருவார்த்தை கூட எதிர்த்துப் பேசவில்லையே.