“அதைவிடுங்கம்மா.. அப்புறம் சொல்லுங்க போன விஷயம் என்னாச்சு.. மொழி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க.. என் மேல இருக்க கோபத்தை உன்கிட்ட காண்பிச்சாங்களா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
“இருடா.. ஒரேடியா இத்தனை கேள்விக் கேட்டா எப்படி? எல்லா கேள்விக்கும் சேர்த்து ஒரே பதிலா சொல்லணும்னா, அந்த குடும்பத்துல இருக்கவங்க தங்கமானவங்க, அந்த குடும்பத்தோட நமக்கு சம்பந்தம் அமையறதுக்கு நாம ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும்.. எந்த பிரச்சனை வந்தாலும் அடுத்தவங்கக்கிட்ட முகச்சுளிப்பை காட்டாத அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா.. நாளைக்கே எனக்கு ஏதாச்சு ஆனாலும் உன்னை ஒரு நல்ல குடும்பத்தில் சேர்த்திட்டோம்ங்கிற நிம்மதி எனக்கு இருக்கும்..” என்றதும்,
“என்னம்மா இப்படி பேசறீங்க.. நீங்க நல்லப்படியா குணமாகி வாடா லண்டன்க்கே போகாலாம்னு சொல்லப் போறீங்க பாருங்க.. நீங்க சொல்றதிலேயே மொழி வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கன்னு தெரியுது.. ஆனா மொழி ஒத்துக்கிட்டாளாம்மா..”
“அவங்களுக்கு இந்த கல்யாணப் பேச்சுல தயக்கம் தான், ஆனாலும் நான் கேட்டதும் அவங்களால மறுக்க முடியல.. ஆனாலும் அருள் முடிவு தான் கடைசி முடிவுன்னு சொல்லிட்டாங்க.. அருள் சரின்னு சொல்லணுமேன்னு எனக்கு தவிப்பா இருந்துச்சு.. ஆனா என்னை ரொம்ப தவிக்க விடாம அருள் வந்து சம்மதம் சொல்லிட்டா.. அவ சம்மதம் கிடைச்ச அடுத்த நொடியே கல்யாண தேதியை முடிவு செஞ்சுட்டோம்.. அடுத்த மாசம் உங்க கல்யாணம்.. இந்த வாரத்திலேயே நிச்சயதார்த்தம்னு முடிவு செஞ்சாச்சுடா..”
“என்னம்மா கல்யாணம் அடுத்த மாசமா, இப்போ நிச்சயம், ஒரு மாசம் கழிச்சு கல்யாணம்னு எதுக்கும்மா மெதுவா போகணும்.. இந்த மாசத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண தேதியை குறிச்சிருக்கலாமே..” என்று அவன் கேட்க,
“அடப்பாவி இந்த அவசரம் கூடாதுடா.. எல்லாம் சம்பிரதாயப்படி தான் செய்யணும்.. ஆனா இப்போ இத்தனை அவசரம் காட்டுறவன், எதுக்குடா முன்ன அருளை வேண்டாம்னு சொன்ன, அப்பவே ஒத்துக்கிட்டு இருந்தா, இன்னேரத்துக்கு கல்யாணம் நடந்திருக்குமில்ல..” என்று ஆனந்தி வியப்பாக கேட்டார்.
“அதுக்கு என்ன செய்றது ம்மா.. உருவத்தில் தான் அப்படியே உங்களை கொண்டு இருக்கேன்னா, குணத்திலேயும் உங்களை கொண்டே இருக்கேன்.. அப்பா எவ்வளவு அழகா உங்கக்கிட்ட லவ் ப்ரோபோஸ் செஞ்சிருக்கார்.. ஆனா உடனே நீங்க பதில் சொல்லாம அவரை தவிக்க விட்ருக்கீங்க.. அந்த ஜீன் தான் நானும் இப்படி இருக்கேன் போல.. அய்யோ இந்த நேரம் எங்க அப்பா போல் இருந்தா, கண்டிப்பா லவ்வர் பாயா அருள் மனசுல இடம் பிடிச்சிருப்பேன்.. எல்லாத்தையும் சொதப்பிட்டேன்..
ஆனா அதான் என்னோட ஸ்வீட் அம்மா என்னோட தப்பையெல்லாம் சரி செஞ்சு கொடுத்திட்டீங்கல்ல.. இனி பாருங்க எப்படி கலக்கிறேன்னு..” என்றவன், அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தியவன்,
“நான் மொழிக்கிட்ட பேசப்போறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
மனம் முழுதும் பாரமாக இருந்தாலும், அதை சுடரொளியிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தப்படியே மகிழ்வேந்தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
எழில், ஆனந்தி இருவரும் ஏற்கனவே சுடரொளிக்கு அமுதன், அருள் திருமணம் முடிவாகிய விஷயத்தை கூறி, அடுத்து அவளுக்கும் மகிக்கும் தான் திருமணம் என்று அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
பூங்கொடியும் அவளுக்கு அழைத்து அதே விஷயங்களை கூறியவர், நிச்சயதார்த்ததிற்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார். அதை கேட்டு சுடர் ஒருப்பக்கம் மகிழ்ந்தாலும், மகிழ் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வான் என்ற கவலையும் அவளுக்கு இருந்தது.
அருள் விஷயத்தில் நடந்ததற்கு மகி கண்டிப்பாக சார்லி மீது கோபமாக இருப்பான். ஏன் அவளுக்கே இன்னும் அவன் மீது உள்ள கோபம் குறையவில்லையே, ஆனந்தி ஆன்ட்டி ஆசை என்பதால் தான் மகிழ் வீட்டில் பேச வேண்டும் என்றதும் அவளும் ஒத்துக் கொண்டாள். ஆனால் இந்த விஷயம் கேட்டு மகிழ் என்ன சொல்வானோ என்ற சிந்தனையில் இருந்தாள்.
உள்ளே நுழையும் போதே முகத்தில் மகிழ்ச்சியை காட்டியப்படி வந்தவன், “சுடர் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அருளுக்கும் அமுதனுக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க.. எல்லாம் உங்க ஆனந்தி ஆன்ட்டியோட முயற்சி தான்..” என்றான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“ம்ம் தெரியும்.. ஆனந்தி ஆன்ட்டியும் சித்தியும் போன் செஞ்சு சொன்னாங்க..” என்று அவள் சொன்னதற்கு,
“உனக்கு சந்தோஷமா?” என்றுக் கேட்டான்.
“முதலில் உனக்கு சந்தோஷமான்னு சொல்லு..” என்று அவள் திருப்பி கேட்ட போது அவன் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை.
இது முறையான திருமணம் கிடையாது, முறைப்படி திருமணம் செய்து கொள், அப்போது தான் நான் உன் மனைவி என்று சொல்லிக் கொண்டிருப்பவள், இப்போது ஒரு மனைவியாக அவன் மனதை அறிந்து இப்படி ஒரு கேள்வி கேட்கும் போது, அதை விட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. அப்படியே அவளை கட்டித் தழுவி அவன் காதலை வெளிப்படுத்தும் ஆசையை அடக்கிக் கொண்டவன்,
“ம்ம் பின்ன சந்தோஷம் இருக்காதா? இந்த கல்யாணம் நடந்தா தானே, அடுத்து நமக்கு கல்யாணம் நடக்கும்..” என்று அவளுக்காக கூறினான்.