“தேவி, இந்தக் கரணி மாதா தாய் துர்காவின் அம்சமாகக் கருதப் படுபவள். சத்ருக்களை அழித்து, நல்லவர்களைக் காத்திட அருள் புரிபவள். நம் மகாராஜ் மீண்டும் இந்தப் பக்கம் வரும் சந்தர்ப்பம் அமையுமோ என்பதால் தான் அவரின் வெற்றிக்கும், லட்சியத்திற்கும் இந்தத் தாய் துணை இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இங்கே மகராஜை அழைத்தேன்” என்று கூறவும்.
அங்கிருந்த போர் வீரர்கள் அனைவரும் “ஜெய் பவானி” என்று கூவினர். மீண்டும் மீண்டும் மூன்று முறை கோஷம் போட்டு விட்டு, ராணாவின் பின் சென்றனர்.
அந்த கரணிமாதாவின் முன் நின்ற ராணா , தங்களது சுதந்திர ராஜ்ஜியத்திர்கான போர் வெற்றி பெற வேண்டும் மனமுருகி கோரிக்கை வைத்தார்.
ப்ரித்விராஜ்ஜின் கோரிக்கையும் அதுவாகவே இருக்க, கிரண் தேவியோ அந்த அன்னையின் முகத்தையே பார்த்தாவாறு நின்று இருந்தாள். சிறப்புப் பூஜைகள் முடிந்தவுடன் , ராணாவின் வாளுக்கு திலகம் இட்டு, துர்கா தேவியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர். பின் வாளை ரானாவிடம் ஒப்படைத்து,
“ஜெய் விஜயீ பவ” என்று வாழ்த்தினார்கள்.
பூஜை முடிந்து வெளியே வரவும், அனைவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
கிரண் தேவி ரானாவிடம் அனுமதி வாங்கி, பல்லாக்கை விடுத்து தானும் ஒரு புரவியில் அமர்ந்து பயணம் மேற்கொண்டாள்.
வீரர்கள் சீரான அணிவரிசையில் வந்து கொண்டு இருந்தாலும், அவர்களின் வசதி, எண்ணங்களைக் கவனிக்கும் பொருட்டு, அந்த அணிவகுப்பைத் தாங்கம் தளபதிகள் படையின் உள்ளே சென்று பார்த்து வருவார்கள்.
அதைப் போல் ப்ரித்விராஜ்ஜும் தன் படைப் பிரிவினரை சரிப் பார்த்து வருகையில். ஓர் வீரனுக்குப் பதில் இளவரசி கிரண் தேவி வருவதைக் கண்டு கொண்டான்.
சற்றுத் தயங்கினாலும், ப்ரித்விராஜ் ராணி கிரண் தேவியோடு இணைந்து நடந்தான். அமைதியாக நடந்து கொண்டு இருந்த கிரண் தேவி.
“இளவரசே .. தாங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில் திகைத்த ப்ரித்விராஜ்,
“தேவி, தங்களின் செல்வாக்கு அறியாதவன் அல்ல நான். தாங்கள் கட்டளை இடலாமே” என்று கேட்டான்.
“இது அப்படி இல்லை இளவரசே. நிச்சயமாக உதவியே தேவை” என்று கூறவும்,
“என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“முஹலாய பேரரசர் அக்பர் நடத்தும் நவரோஜ் மேளா திருவிழாவிற்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும்”
இவ்வாறு கிரண் தேவி கூறவும் ,
“இளவரசி , இது என்ன விபரீத ஆசை?” என்று திகைத்து நின்றான் ப்ரித்விராஜ்.
தொடரும்!