தொடர்கதை - சிவகங்காவதி - 13 - ஸ்ரீ

“தொண்டிப் பத்து
தொண்டி என்பது ஒரு கடற்கரை நகரம். இந்நகரம் பெண்ணின் அழகுக்கு உவமையாகும் வகையிலும் நகரின் நிகழ்வுகளைக் கூறும் வகையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தொண்டிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சு கொண்டோளே- (171)
(மறுகு = தெரு)
என்ற பாடலில், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன், தலைவியின் அழகை, தொண்டி நகரத்தால் உவமிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.”
அன்றைய முன்னிரவில் நித்திரையின்றி சிவகங்காவதி வெளியே நின்றுகொண்டு பால் நிலவின் குளிரை தனக்குள் கிரகித்து மனதின் புழுக்கத்தை தணிக்க முயன்றாள்.சற்றுநேரம் அப்படியே கழிய தன் பின்புறம் கேட்ட அரவத்தில் நினைவுப் பெற்றவள் தலையைத் திருப்பாமலேயே வந்தது யாரென கண்டுகொண்டாள்.
அவன் தான்!! அவனின் ப்ரத்யேக மணம் கூட அவளுக்குப் பழகியிருந்தது.அவன் உபயோகப்படுத்தும் வாசனை திரவியமும் அவனின் ப்ரத்யேக வாசனையும் அவனுக்கு முன் அவள் நாசியை தீண்டியிருந்தன.அவளின் பக்கவாட்டில் வந்து நின்றவன் அவளைப் போன்றே வானில் நிலவை வெறித்தான்.
சில நிமிடங்களின் மௌனம் அந்த அமைதியை இன்னுமாய் அழகாக்கியிருந்ததைப் போன்ற உணர்வு நஸீமிற்கு.அவனே இருவருக்குமான மௌனத்தை கலைத்தான்.
“எப்படி இருக்கிறாய் கங்கா?”
“நலம்.தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”
“உண்மையை கூற வேண்டுமானால் மனம் ஒருவித அமைதியை தழுவியிருக்கிறது.அதற்கு காரணம்…”
ஒன்றும் கூறாமல் அவனை சற்றே திரும்பி பார்வையிட்டவள் அவனின் பதிலுக்காக காத்திருக்க முதன்முதலாய் அவனின் அதரங்களின் ஓரத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு.
“காரணம் உனையன்றி யாராய் இருக்க முடியும்.”,கூறி முடித்தவன் அவளை திரும்பிப் பார்க்க அவனின் விழி வீச்சை தாங்க முடியாதவளாய் அவனிடமிருந்து பார்வையை அகற்றிக் கொண்டாள்.
உண்மையில் அவள் மனம் அவளுக்கே புரியவில்லை.சமீராவின் பேச்சும் இப்போது நஸீமின் நடவடிக்கைகளும் அவளை வெகுவாய் சிந்தனையில் ஆழ்த்தியிருந்தன.சூழ்நிலையை மாற்ற எண்ணியவளாய்,
“தங்களை சந்தித்து நான்கைந்து தினங்கள் ஆகிவிட்டன.கேட்க வேண்டுமென்று நினைத்தேன்.அரசவையில் மத குரு தங்களிடம் கடுமையாக பேசியாதாக கேள்வி!”
“ஆம் நிச்சயம் இது சாதாரண விடயம் இல்லை தான் ஆனாலும் அவரின் பேச்சு சற்று அதிகமாகவே வரம்பு மீறிவிட்டது.அதனால் நானும் அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டேன்.”
“இதெல்லாம் தேவைதானா?தங்களின் கோபத்தை குறைத்து சற்று சிந்தித்திருந்தால் இந்த திருமணமும் நடந்திருக்காது.தாங்களும் இப்படி தலைகுனிந்திருக்க வேண்டிய அவசியம்….”
“போதும்!!!நிறுத்துகிறாயா உன் அறிவுரைகளை..கேட்கப்படாத அறிவுரைகள் நிச்சயம் மனதிற்கு உவப்பான ஒன்றாக இருக்காது அதை முதலில் புரிந்து கொள்.என்ன கூறினாய் கோபத்தால் நடந்த திருமணமா??அதையும் கடந்த என்…”
“வேண்டாம் எதையும் நான் கூறி நீஅறிந்து கொள்ள வேண்டாம்.வருகிறேன் நேரம் கடந்துவிட்டது சென்று உறங்கு..”,என்றவன் நிற்காமல் சென்றுவிட சிவகங்காவதிக்கோ மனம் ஓய்ந்து போனது.
“அவனாகவே வந்தான் இயல்பாய் உரையாடினான் அந்த நினைவில் என் மனதில் இருப்பதை நான் உரைத்தால் கோபம் கொள்கிறான்.ஆனால் ஏதோ கூறினானே!!அவன் கூறி நான் எதையும் தெரிந்து கொள்ள வேண்டாமென!!
அப்படியானால் என்னிடம் கூறாத ஏதோ ஒன்று அவனிடம் இருக்கிறதா?என்னவாக இருக்கும்!!ஈசனே மனம் மொத்தமாய் களைப்படைந்து விட்டது.இதில் அவனின் பாராமுகம் எனை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்குகிறதே”
என்று ஏதேதோ சிந்தித்தவளுக்கு நித்திரை விழிகளை தழுவும் என்ற நம்பிக்கை இல்லாமல் போகவே தன் விருப்பமான ஓய்வு நேர பணியை செய்யலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.
அங்கிருந்த ஓர் அறையின் சுவற்றின் அருகே சென்றவள் தனக்காக வைத்திருந்த மை கொண்டு சுவற்றில் தன் சிந்தையிலிருந்த ஈசனை வரைய ஆரம்பித்திருந்தாள்.லிங்க வடிவமான ஈசனை வரைந்து அருவருக்கான கருவறை மண்டபத்தையும் தீட்டி முடித்திருந்தாள்.
அதைப் பார்த்தவளுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.அதையே பார்த்திருந்தவள் அப்படியே அமர்ந்தவாறு உறங்கியும் போயிருந்தாள்.
மறுநாள் அதிகாலையில் ஆயிஷா அவளை சந்திப்பதற்காக அங்கு வர தரையில் உறங்குபவளைக் கண்டு பதறியவளாய் அருகில் வந்து எழுப்பினாள்.சுவற்றில் இருந்த ஓவியத்தை கண்டவளுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.