“என்ன அரசியாரே பஞ்சணையில் உறங்காமல் இப்படி இந்த நிலையில் உறங்குகிறீர்களே!”
“ஹா..வெகுநேரமாய் நித்திரையின்றி தவித்தேன் அதனால் ஓவியம் வரைய முடிவெடுத்து அதை முடித்ததும் அப்படியே உறங்கிவிட்டேன்”
“ம்ம் புதிதாய் நிக்காஹ் முடிந்த பெண் போன்றா இருக்கிறீர்கள் !!தாங்கள் இங்கு இப்படி , ஷாகின் ஷா வோ எப்போதும் தங்கள் சிந்தனையில் தான் பொழுதை கழிக்கிறாராம்”
“உன் போக்கில் எதையேனும் பிதற்றாதே ஆயிஷா..அனைத்தும் விளையாட்டு தான் உனக்கு”
“என்ன நான் பிதற்றுகிறேனா?சரிதான் உண்மையைத் தான் கூறுகிறேன் அதோ அங்கிருக்கும் அவரின் அறையின் வெளியில் இருந்து பல நேரம் அவர் இங்கு தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஓரிரு முறை நானே கூட அதைக் கண்டிருக்கிறேன்.அது மட்டுமல்லாது நம் மத குரு அவர்கள் தங்களை ஏதோ கூறிவிட்ட காரணத்திற்காக அவரையே எதிர்த்து வாதாடியிருக்கிறார்.
அதைவிட முக்கியமாய் உங்களுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.இதை விட என்ன வேண்டும் நான் கூறுவதனைத்தும் மெய் என்பதை உணர்த்துவதற்கு?!”
“இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று உனக்கு ஏதேனும் விளங்குகிறதா?”
“சரியாய் போயிற்று இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் அல்ல..காதல்,அன்பு,நேசம்,ப்ரியம் என பல அர்த்தங்கள் இருக்கிறது.எனக்குத் தெரிந்த வரையில் ஷாகின் ஷா அதில் தெளிவாகத் தான் இருக்கிறார்.தாங்கள் தான் ஏதோ குழப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.”
சிவகங்காவதி அவளை முறைத்தவாறே அங்கிருந்து நகர அவளை வேகமாய் பின் தொடர்ந்தவள்,”அரசியாரே கோபம் வேண்டாம்,அதிகப்ரசங்கி தனமாகத் தான் பேசுகிறேன் இருந்தாலும் பரவாயில்லை தங்களின் நலம் எனக்கு எப்போதும் முக்கியம்.
அனைத்திலும் தீர்க்கமாய் சிந்திக்கும் தாங்கள் இந்த விடயத்தில் ஏதோ ஒரு கலக்கத்தில் இருக்கிறீர்கள்.அது என்னவென்று கண்டறிந்து தெளிவு கொள்ளுங்கள்.எனைப் பொறுத்தமட்டில் ஷாகின் ஷா தங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.”
“நீ கூறுவது மிகச் சரியே!!ஏதோ ஒரு குழப்பமும் கலக்கமும் மனதில் மண்டிக் கிடக்கின்றது.நானும் அதை தெளிவு படுத்தவே விழைகிறேன்.பார்க்கலாம் எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறதென்று.
சரி நான் சென்று நீராடி வருகிறேன்.இங்கேயே காத்திரு.”,என்றவள் சென்ற சிறிது நேரத்தில் நஸீம் அவளிடத்திற்கு வந்திருந்தான்.நன்றாக குனிந்து கைகளை முன்நெற்றி வரை கொண்டு சென்று சலாம் வைத்து நிமிர்ந்தாள் ஆயிஷா.
“அரசி நீராடச் சென்றிருக்கிறார்.இப்போது வரும் நேரம் தான் ஷாகின் ஷா”
“ம்ம் நான் காத்திருந்து சந்தித்துச் செல்கிறேன்”
“அப்படியே ஆகட்டும் நான் வருறேன்.”,என்று அவள் அங்கிருந்து நகர்ந்த பின் அறைகளை விழிகளால் துழாவியவாறு நடந்தவனின் கண்களில் அவள் வரைந்த ஓவியம் பட்டது.என்ன ஒருதத்ரூபமான சித்திம் என அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சில நொடிகளில் தன் நீள் கார்கூந்தலை விரித்து விட்டவாறு மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி வகிட்டில் செந்தூரத்தை வைத்தவாறு அங்கு வந்தவள் அவனை அங்கு எதிர்பாராமல் திகைத்தாள்.
“மன்னிக்க வேண்டும்.வெகு நேரமாக காத்திருக்கிறீர்களா?தாங்கள் வரும் செய்தி அறியாததால்..”,ஏனோ நேற்றைய இரவு போல் அவனை கோபப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணம் வந்திருந்தது சிவகங்காவதிக்கு.
“இப்போது தான் வந்தேன்.இந்த ஓவியம் நீ வரைந்ததா மிகவும் அருமையாக இருக்கிறது.”
“நன்றி என் ஓய்வுநேர பொழுதுபோக்கில் இதுவும் ஒன்று விழிகளை மறைத்தவாறு கூட அந்த நொடி மனதில் தோன்றும் பிம்பத்தை வரைந்துவிடுவேன்.”
“சபாஷ்!!எனக்கு கலைகளில் மிகுந்த ரசனை உண்டு.அப்படி மாற்றியமைக்கப்பட்டது தான் இந்த அரண்மனை கூட!!”
“நானும் இதன் கட்டிடக் கலையை கண்டு வெகுவாய் வியந்திருக்கிறேன்.”,என்றவள் சிநேகமாய் புன்னகைத்து நிற்க நஸீமின் மனமோ வெகுவாய் இலகுவாகியிருந்தது.
முந்தைய நாளின் எதிர்பாரா கோபத்தால் அவள் மனம் புண்பட்டிருக்குமோ என்ற எண்ணத்தில் தான் அவளை காலையிலேயே சந்திக்க முடிவெடுத்து வந்தான்.ஆனால் அவளும் அதை மறந்து தன்னுடன் இயல்பாய் உரையாடுவதில் பூரண திருப்தி அடைந்துவிட்டிருந்தான்.அந்த எண்ணத்தோடே அவளிடம்,
“இதே போன்று எனக்காக ஒரு ஓவியம் வரைந்து தருகிறாயா?”
சிவகங்காவதியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.தன்னிடம் இத்தனை இலகுவாய் அவன் உரையாடுவது முதன்முறையாய் சற்று மகிழ்ச்சியை அளித்ததை உணர்ந்தாள்.
“நிச்சயம் வரைந்து தருகிறேன்.மாலை தாங்கள் வருவதற்குள்..”
“இல்லை இங்கு இல்லை.என்னுடன் வா நான் அழைத்துச் செல்கிறேன்.”,என்றவனோடு எந்தவித எதிர்ப்பும் இன்றி சென்றவளின் கண்களில் முதன்முதலாய் நாணம் குடிக்கொண்டது.