தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 11 - ஸ்ரீ
“மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்”
அன்றைய ஷீட்டிங் முடித்து ரினிஷாவிடம் மட்டும் வீட்டிற்கு செல்வதைப் பற்றி கூறிவிட்டு மற்றவர்களிடம் எமர்ஜென்ஸி என்றும் மறுநாளே வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு கிளம்பிவிட்டான் ரேஷ்வா.
மாலையில் கிடைத்த ப்ளைட்டில் ஏறி அமர்ந்தவனுக்கு என்னவென்று கூற முடியாத ஒரு மனநிலையில் இருந்தான்.வீட்டை விட்டு சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
நடுவில் அவ்வப்போது தன் பெயரில் இருக்கும் ஷேர்கள் சம்மந்தமாக எதாவது வேலையாக சென்றாலும் பெரிதாய் தாயோடு அமர்ந்து பேசியதெல்லாம் இல்லை.அவரும் கம்பனி பொறுப்புகளை நம்பிக்கையானவரிடம் கொடுத்துவிட்டு சற்று ஓய்வில் தான் இருக்கிறார் இப்போதெல்லாம் என்பதை அறிந்திருந்தான்.
ஹைதராபாத்தை அடைந்தவன் தன் வீட்டை அடைந்த நேரம் அவனது தாய் சந்திரிகா சமையலறையில் ஏதோ வேலையாய் இருந்தார்.அமைதியாய் சமையலறையின் வாயிலில் நின்றவன் இரு நொடிகள் மௌனம் காத்திருந்து பின் அவரை மெதுவாய் அழைத்தான்.
“ம்மா..”
சட்டென தன் கையிலிருந்த கரண்டியை கீழே தவற விட்டிருந்தார் அவர்.எத்தனை வருடத்திற்கு பின்னான அழைப்பு இது.ஒரு கட்டத்தில் அவர் ஏங்கியதும் இந்த அழைப்பிற்காகத் தான் அல்லவா. இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் அவனை ஏறிட்டார்.
“எப்படியிருக்கீங்க?”
“ந..நல்லாயிருக்கேன் ரேஷ்வா..நீ எப்படியிருக்க?”
“ம்ம்..”
“எதுவும் வேணுமா?”
“பசிக்குதும்மா சாப்பிட எதாவது தறீங்களா?”
“ஓ..இதோ அஞ்சே நிமிஷம் எல்லாம் தயார் ஆய்டும் பா..நீ போய் ரெப்ரெஷ் ஆய்ட்டு வா..”
“ம்ம் ஓ.கே மா..”,என்றவன் அங்கிருந்து நகர சந்திரிகாவின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.எப்போதும் அவன் வீட்டிற்கு வரும் நாட்களிலெல்லாம் தானே பார்த்து பார்த்து சமைத்து வைத்து சமையல்கார பெண்மணியிடம் கொடுத்து பரிமாறும்படி கூறுவார்
அவன் உண்டு முடித்து எழுந்து செல்லும் வரை தனதறையிலிருந்து அவனையே பார்த்திருப்பார்.இப்போது அவனே வாய் திறந்து அவரிடம் கேட்டதை இன்னுமும் அவரால் நம்ப முடியவில்லை.
மாலையில் அவன் வரும் செய்தி தெரிந்தவுடனேயே அவனுக்குப் பிடித்த சப்பாத்தியோடு பாலக் பன்னீரும் செய்து முடித்திருந்தார்.சப்பாத்தியை சூடாக போட்டு எடுத்தவர் அவனுக்காக தட்டில் வைத்து உணவு மேஜையில் காத்திருந்தார்.
சில நிமிடங்களில் வந்தவன் அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.ஒரு நிமிடம் மௌனத்திலேயெ கரைய அவன் தட்டில் இருந்து பார்வையை அகற்றாது,
“நீங்க சாப்டீங்களா ம்மா?”
“!!!”
பதிலில்லாமல் இருக்கவும் நிமிர்ந்து சந்திரிகாவை பார்த்தவன் அவரது கண்ணீரில் மனமுடைந்து போனான்.
“ம்மா!!!”
“அம்மாவை மன்னிப்பியாடா கண்ணா?”
“ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க?!”
“இல்ல ரேஷ் எனக்குத் தெரியும் நா எத்தனை பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு.உனக்கு ஒரு நல்ல அம்மாவா நா இருந்ததேயில்ல கண்ணா!”
“ம்மா அப்படியெல்லாம் எதுவும் இல்ல..வாழ்க்கையின் போராட்டத்துல சில விஷயங்களை இழந்தாதான் சிலதை பெற முடியும் மா..”
சற்றே தன்னை தேற்றியவறாய்,”உண்மை தான் ரேஷ்..வாழ்க்கைல ரொம்ப அனுபவப்பட்ட பிறகு தான் இந்த அறிவு எனக்கு வந்தது.உங்கப்பா டிவோர்ஸ் பத்தி சொன்னப்போ வாழ்க்கையே ஒருநொடி நின்னு போச்சு ரேஷ்.