தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 27 - சுபஸ்ரீ
ஆகாஷ் என்ன செய்தான் என்பதை தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்னும் ஆர்வம் ரவிக்கு பண்மடங்கு அதிகரித்தது.
ஆதனால் விடாமல் “அமெரிக்காவிட்டு நீங்க வந்தது சூனியம் வெக்கவா? சரி நம்பிட்டோம் பாஸ் . . எப்படி சூன்யம் வெச்சிங்க? விவரமா சொல்லுங்களேன்” கிண்டலாக கேட்டான்.
சாரு மற்றும் சுவாதி முழுமையாக தெரியாத்தால் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆகாஷ் பத்ரிநாத்தை பார்க்க . . அவர் சொல்லிவிடு என்பதைப் போல ஜாடை செய்தார்.
ராமமூர்த்திக்கு அனைத்தும் ஆகாஷ் மற்றும் பத்ரிநாத் மூலம் முன்பே தெரியும். இதில் அவர் பங்கும் உண்டு.
ராமமூர்த்தியும் பத்ரிநாத்தும் வெளியே சென்றுவிட . . இரண்டு ஜோடிகள் மட்டுமே இப்போது வீட்டில்.
ஆகாஷ் ரவியிடம் “பில்லி சூன்யம் இதெல்லாமே அறிவியலோட ஒரு பகுதி பாஸ் என” தொடங்கினான்.
மூவரும் அவனை பார்க்க . . பார்வைகள் வேறுபட்டன. ஒருவர் ஆச்சரியம் என்றால் மற்றொருவர் அவநம்பிக்கை இன்னொருவர் ஏளனம்.
“சூன்யம் பத்தி உனக்கு என்ன தெரியும் ரவி?” ஆகாஷ் கேள்வி தொடுக்க
“சிலருக்கு பிடிக்காதவங்க நல்லா இருக்க கூடாதுனு சூன்யம் வெப்பாங்க”
“எப்படி?”
“அது .” முழித்த ரவி பின்பு “நீங்கதான் சொல்லணும் . . இப்ப நீங்க இதுல எக்ஸ்பெர்ட் ஆகிடிங்களே” என கூக்ளி போட்டு நழுவினான்.
சாரு மற்றும் சுவாதி ரவியை முறைக்க . . ரவி பெரிய கும்பிடுப் போட்டு ”தெய்வமே எனக்கு சத்தியமா தெரியாது” என சரண்டர் ஆனான் . . அனைவருமே சிரித்துவிட்டனர்.
“மக்களுக்கு தீங்கு இழைக்கிற மனிதன் இல்ல தீவிரவாதிகள் இவங்களுக்கு ஏன் சூன்யம் வெக்கிறதில்ல? இவங்களும் பிடிக்காத லிஸ்டல இருக்கறவங்கதானே?” ஆகாஷ் தொடர்ந்தான்.
“ஆமா” என அனைவரும் ஏற்றுக் கொண்டனர் . . உன்னிப்பாக அவனை கவனித்தபடி . .
“சூன்யம் வெக்கறவன் பெரும்பாலும் தன் எதிரிக்கு பக்கத்துலயே வசிப்பான். அதாவது ஈசியா எதிரியை அனுகக் கூடிய இடமாக இருக்கும்..”
ஆகாஷின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மற்றவர்கள் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“சூன்யம்ங்கறது அமானுஷ்யமோ . . மந்திர மாயமோ . . சாத்தானோ இல்லவே இல்ல . . இது முழுக்க முழுக்க அறிவியலின் ஒரு பக்கம். திஸ் இஸ் கால்ட் ஹெர்பல டாக்ஸிகாலஜி.” என ஆகாஷ் முடித்த நொடி
“என்ன? அப்படியா?” என ரவி சுவாதி மற்றும் சாரு தங்கள் எண்ணங்களை ஆச்சரியமாய் வெளிப்படுத்தினர்.
“உங்கள மாதிரிதான் நானும் முதல்ல ஆச்சரியப்பட்டேன்” என சிரித்தபடி சொன்னவன்.
“இதுக்கு விஷபோஜனம் . . இடுமருந்து . . செய்வினை . . கைமருந்து இப்படி பல பேர் இருக்கு”
ஆகாஷ் “மூலிகைகள் மருத்துவ குணம் கொண்டது போல நச்சு தன்மை கொண்டது உண்டு. அரளி விதை தின்றால் உயிர் போகும். கள்ளிச்செடி ஊமத்தைசெடி பார்தினியம் இதெல்லாம் ரொம்ப ஆபத்தானது.”
“தலைசுருளி . . கற்றாமரை … ஆடைஓட்டி … பின்துடரி …. பொற்றிலை இப்படி 180க்கு மேல விஷமூலிகை இருக்கு. சில மூலிகைகள்ல இருக்கும் டாக்சின் உடல் திரவங்களையும் உள்உறுப்புகளையும் கடுமையா பாதிக்கும். உதாரணத்துக்கு குன்றமணியில் உள்ள ஆப்ரின் விஷம் . . இசப்பு கோல்விதையில் உள்ள ரைசின் விஷம் … ஊமத்தை – ஆல்பமின் … ஆடைஓட்டி – அம்ப்ரோசின். இப்படி நிறைய கடுமையான விஷம் உடலை சல்லடையா ஆக்கிடும்”
“என்ன மருந்து மாத்திரை ஸ்கேன் எடுத்து பார்த்தாலும் இதுதான் கரெக்டான டிபக்ட்னு கண்டுபிடிக்க முடியாது. அதுதான் இதோட பெரிய பிளஸ். இந்த மூலிகை இரத்தத்தோட கலந்து உடல் முழுக்க பரவிடும்.”
“ சுமார் 1400 கிராம் விஷ மூலிகைய அரைத்து பொடியாக்கி நீர் சத்தை வெளியேத்தி 200 கிராம் அளவிற்கு மாத்திட முடியும். கொஞ்சமா சாப்பிட்டாலே பெரிய பாதிப்பு ஏற்படும். இதுல கலர் அண்ட் டேஸ்ட் சுத்தமா இருக்காது. சோ சாப்பாட்டுல கலந்து கொடுத்தா . . தெரியவே தெரியாது.”
ஒன்பதாவது உலக அதிசயத்தை கேட்ட ரியாக்ஷன் அவர்கள் முகங்களில் தெரிந்தது. (கணக்கு தப்பா சொல்றேன்னு நினைக்காதீங்க . . அவங்வங்க காதலர்களும் அவங்களுக்கு உலக அதிசயம்தானே)
“இதுக்கே வாயபிளந்தா எப்படி? இன்னும் எத்தன விஷயம் இருக்கு தெரியுமா?” என்ற ஆகாஷ் ஆரஞ்ச பழரசத்தை கிளாசில் ஊற்றி மற்றவர்களுக்கு கொடுத்து தானும் அருந்தினான்.
“இதுல என்ன இருக்கு?” என சாரு சந்தேகத்துடன் கையில் உள்ள கிளாசை ஆராய்ந்தபடி கேட்டாள். ஆகாஷ் அப்போதுதான் மற்றவர்களும் அருந்தவில்லை என்பதை உணர்ந்தான். புன்னகையுடன் “பயப்படாதீங்க இது வெறும் ஜீஸ்தான்” என்றான்.