அவனின் பார்வையைப் பின் தொடர்ந்தவர், முன் தினம் உதய்பூரில் இருந்து வந்து இருந்த வீரனிடம் நிலைத்து இருப்பதை உணர்ந்து கொண்டார்.
மற்ற வீரர்களை அனுப்பி விட்டு, பஜரங்கை அழைத்தார். அவன் அருகில் வரவும்,
“நேற்று நீ சொன்ன செய்தி தவிர வேறு எதுவும் இருக்கிறதா?” என்றார்.
பஜ்ரங் இன்னும் அமைதியாகத் தலைக் குனிந்து நிற்க,
“பஜ்ரங் “ சற்று உரக்க அழைக்கவும், நிமிர்ந்தான்.
“சொல்” என்ற கட்டளை வரவே,
“மகாராஜ், தங்கள் சகோதரர் அங்குள்ள நிலவரத்தைத் தங்களிடம் அப்படியே சொல்லச் சொல்லிவிட்டு, என்னை மீண்டும் ரகசியாமாக சந்தித்தார்”
“ரகசியமாகவா? ஏன்?”
“தங்கள் இளைய சகோதரர் மான் சிங் , தற்போது அக்பர் கீழ் பணி புரியச் சென்று விட்டார். அவரைத் தடுக்க முற்பட்ட சக்தி சிங் மகாராஜாவை அவமதித்து விட்டார். “
கேட்ட ராணா சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
“வேறு எதுவும் சொன்னாரா?
“தற்போது அக்பர் மீது போர் தொடுப்பதை விட, நம் ராஜபுத்திர சமஸ்தானத்தை இணைப்பது தான் முக்கியம். அது தங்களால் தான் ஆகக் கூடிய காரியம் என்றும் தெரிவித்தார்”
“மான் சிங் எப்படி அக்பரிடம் சேர்ந்தான்?
“அக்பர் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை குழுக்களாக அனுப்பி, மான்சிங் ஜி உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இரண்டு, மூன்று முறை நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைக்குப் பின் மான் சிங் அக்பர் கீழ் சென்று விட்டார்”
மேலும் சற்று நேரம் யோசித்தவர்,
“ப்ரித்விராஜ் , இதைப் பற்றி நீ அறிவாயா?” என்று வினவினார்.
“பஜ்ரங் வந்தவுடன் நீங்களும், நம் வீரர்களும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டீர்கள். ஆனால் பஜ்ரங் இந்த ஆரவாரத்தில் கலந்து கொள்ளவில்லை. அதைக் கண்டதும் எனக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவன் மீது கண் வைத்து இருந்தேன். நேற்றைக்கு பஜ்ரன் தங்கள் உத்தரவுப் படி தன் குடிலுக்குச் சென்ற போது, அவனைத் தொடர்ந்து சில பேர் செல்வதைக் கண்டேன். அவனும் சேர்ந்து தங்களுக்கு எதிராகச் சதி செய்கிறானோ என்று எண்ணினேன். அதனால் இளவரசியிடம் கேட்டு சில வீரர்கள் பெற்றுக் கொண்டேன். அவர்கள் எல்லாப் பக்கமும் சென்று வருவார்கள். அவர்கள் பஜ்ரங்கையும் வேவு பார்த்தார்கள். ஆனால் பஜரங்கைப் பின்தொடர்ந்தவர்கள் அவனைச் சந்திக்கவில்லை.”
அவனின் முன்யோசனையைக் கண்டு ராணா
“இன்னொரு ராணா உருவாகி வருகிறான் போலவே” என்றார். அவரின் பாராட்டில் சற்று வெட்கமடைந்தாலும், ப்ரித்வி அதைக் கண்டு கொள்ளவில்லை.
“பஜ்ரங் , இந்த விஷயம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். படை வீரர்களுக்கு சிறிது கூட தெரியக் கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தான்.
பஜ்ரங் ரானாவைப் பார்க்க, அவர் கண் மூடித் திறக்கவும்,
“ஆகட்டும் இளவரசே” என்றவன், சற்றுத் தயங்கி “தங்களுக்கும் ஒரு தகவல் இருக்கிறது இளவரசே” என, ஆச்சரியமாகப் பார்த்தான் ப்ரித்விராஜ்.
“என்ன?”
“தங்கள் மருமகன் ப்ரித்விபா இறந்து விட்டார்” எனவும், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டான் ப்ரித்விராஜ்.
கனவில் வந்த ப்ரித்விராஜ் அதிர்ந்ததை விட, அதிகமாக அதிர்ந்து விழித்தாள் கிருத்திகா தேவி.
“அடக் கடவுளே. நம்ம கனவில் ப்ரித்விராஜ், கிரண் தேவி ரொமான்ஸ் செய்வாங்கன்னுப் பார்த்தா, ராஜேஷ்குமார் நாவல் மாதிரி இப்படித் த்ரில்லிங்கா இருக்கு. விவேக் ரூபலா தான் மிஸ்ஸிங்” என்று எண்ணினாள்.
அப்போது மீண்டும் அந்த நாகாபானியின் ஒலிக் கேட்க, அந்த ஒலியில் அப்படியே அமர்ந்து விட்டாள் ப்ரித்வி.
அதே சமயம் , நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த ப்ரித்வி, அந்த நாகாப் பாணியின் ஒலியில் திடுக்கிட்டு விழித்தவன், அந்த இசையில் கட்டுண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.
அந்த இசை நிற்கவும் தான் சுற்றுப் புறம் உணர்ந்தவன், எல்லோரும் உறங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.
தன் செல்லில் மணிப் பார்க்க, காலை ஐந்தரை மணி எனவும், இப்போது எழுந்துக் கிளம்ப ஆர்மபித்தால் சரியாக இருக்கும் என்று எண்ணித் தன் காலை வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
கிருத்திகாவும் அதையே எண்ணியவளாக முதல் ஆளாகக் கிளம்பினாள். மற்றவர்கள் எல்லோரும் வரும் முன் தயாரகியவள், ரூம் விட்டு வெளியே வந்து நின்றாள்.
அப்போது அங்கே வந்த ப்ரித்வி
“ஹாய், குட் மார்னிங் கிருத்திகா” என்றான்.
“ஹாய் பிரின்ஸ், குட் மார்னிங்” என்று பதில் கூறினாள்.