தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 17 - ஸ்ரீ
“ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தனடி
கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் வருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி”
ரேஷ்வாவிற்கு ஏனோ மனம் லேசானதைப் போன்றதொரு உணர்வு.ரினிஷாவிடம் தன்னையும் மீறி அப்படி கூறியது அவனுக்கே சற்று சங்கடமாய் இருந்தபோதும் கூறிய விஷயம் என்னவோ உண்மைதான் என்பதால் அதை மறுத்தோ சமாதனப்படுத்தும் வகையிலோ எதுவும் கூறாமல் இருந்தான்.
ஆனால் ரினிஷாவும் அதை அத்தனை இலகுவாய் எடுத்துக் கொள்வாள் என்று சற்றும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.ஜீவிகா கூறிய போதெல்லாம் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டதாய் காட்டினாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் இதை அனைத்தையும் ரசிக்கத் தான் தோன்றியது.
இத்தனை வருடத்தில் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான் தான்.அதுவும் ஒரு காலத்தில் அவனுக்கான பெண் விசிறிகளே அதிகம்.இப்பவும் கூட அவனின் அழகிற்கு நிச்சயம் விசிறிகள் இருக்கிறார்கள் தான்.
ஆனாலும் எந்த ஒரு தருணத்திலும் யாரையும் தன்னை நெருங்க விட்டதில்லை.அதற்கான முயற்சியிலும் இறங்கியதில்லை.அப்படியிருக்க ரினிஷாவின் முதல் நாள் சந்திப்பு தொடங்கி அத்தனை அத்தனை நிகழ்வுகள் அவன் மனதில் அழகிய நினைவுப் பெட்டகமாய் இருந்து வருகிறது.
திருமணம் மனைவி என்பதையெல்லாம் கடந்த வாழ்வு முழுமைக்குமான ஒரு நட்பையே அவன் மனம் வெகுவாய் நாடியது.அதிலும் தன் அன்னை திருமணத்தால் காதலால் பட்ட எந்த ஒரு மனகசப்பும் தன்னால் இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திருமணத்தைப் பற்றி யோசித்திருக்கவில்லை.
அத்தனையும் கடந்து அவன் வாழ்வில் நுழைந்தவள் அவனின் ரினிஷா.எந்தவொரு சூழலிலும் தன்னால் அவளுக்கு ஒரு எதிர்வினையும் ஏற்படாது என்பதில் இருநுறு மடங்கு நம்பிக்கையும் இருக்கிறது இப்போது.
அங்கு ரினிஷாவுமே இதே மனநிலையில் தான் இருந்தாள்.அவளறியாமலே ரேஷ்வாவிடம் ஒருவித ஒட்டுதல் ஏற்பட்டிருந்தது அவளுக்கு.அதற்கு மிக முக்கிய காரணம் எந்தவித ஈகோவும் இன்றி பழகும் அவனின் குணம்.வெகு இயல்பாய் பணக்காரன் நடிகன் என்ற எந்த தோரணையும் இல்லாமல் இருப்பது.
பல நேரங்களில் அவனைக் கண்டுகொண்டு அவனிடம் பேச வரும் நபர்களிடம் வெகு சாதாரணமாய் உரையாடுவான்.ஒரு சில நேரத்தில் ரினிஷாவிற்கே பொறுமை போய்விடும் அளவிற்கு அன்புத் தொல்லை கொடுப்பார்கள்.ஆனாலும் அவன் எப்போதும் எதையும் பெரிது படுத்தியதே இல்லை.
அவனின் பொறுமையை பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப் பட்டிருக்கிறாள்.ஏனெனில் பொறுமை என்றாலே அது பெண்ணிற்கு எனுமளவு பல ஆண்கள் அத்தனை கடினமாய் நடந்து கொள்வார்கள்.
அவளின் தமையனும் தந்தையும் கூட அப்படிதான்.இப்படி பலவாறு அவனைப் பற்றி சிந்தித்தவளுக்கு வாழ்வு முழுமைக்கும் எந்த ஒப்பனையுமின்றி சுயமிழந்து நடிக்க வேண்டிய கட்டாயமின்றி அவனோடு வாழ முடியும் என்றே நம்பினாள்.
அதிக குழப்பங்களின்றி சிறிது நேரத்திலேயே தெளிவான முடிவிற்கு வந்துவிட்டிருந்தாள்.பின் மாலையில் சற்றே தன்னை தயார்படுத்திக் கொண்டவளாய் அவனிடம் பேசுவதற்கு தயாரானாள்.
முதலில் குறுஞ்செய்தியை அனுப்பியவள் அவனிடமிருந்து பதில் வந்ததும்.அவன் எண்ணிற்கு அழைத்தாள்.