அடிக்கடி இப்படி அவள் ஏதாவது தவறு செய்வதும், அவன் கோபப்படுவதும் என்று நிகழ்வதால், ஏதாவது விபரீத முடிவுக்கு சென்றிருப்பாளோ என்று அவனுக்கே பயம் ஏற்பட்டது.
"அவ மட்டும் இப்படி ஏதாவது செய்யட்டும், அப்புறம் அவளுக்கு இருக்கு." என்று மனதில் அவளை திட்டினான்.
ஏற்கனவே திட்டியதால் தான் இப்படி நடக்கிறது. இதில் இன்னும் வேறு அவளை திட்ட வேண்டுமா? முதலில் அவள் நல்லப்படியாக கிடைக்கட்டும் என்று நினைத்தப்படியே வீட்டிற்கு கிளம்பினான்.
போகும் வழியிலெல்லாம் எங்காவது அவள் தென்படுகிறாளா? என்று அவன் கண்கள் பார்த்துக் கொண்டே வந்தது. அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வேறு நித்யா வந்துவிட்டாளா? என்று கேட்டுக் கொண்டான்.
"இன்னும் வரல கார்த்திக், செல்வம் எதுக்கும் கோவிலில் பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான். நீயும் எங்கேயாச்சும் தேடிப் பாரு கார்த்திக். அவளை நீ கூட்டிட்டுப் போன இடத்துக்கு எங்கேயாச்சும் அவ போயிருக்காளான்னு யோசிச்சு பாரு, வஞ்சி வேற அழுதபடி இருக்கா.." என்று குறிஞ்சியம்மாள் சொன்னதும்,
"சரிப் பாட்டி." என்று அழைப்பை அணைத்தவனுக்கு, அவள் எங்கே போயிருப்பாள்? என்பது புரியாமல் குழம்பிப் போனான். கொஞ்சம் யோசித்துப் பார்த்த போது, எப்போதும் வேலை வேலை என்று அலுவலகத்திலேயே நேரம் போய்விடுவதால், தேனிலவு சென்று வந்ததிலிருந்து அவளை எங்கேயும் வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பது அவனுக்கே கொஞ்சம் மனதிற்கு உறுத்தலாக இருந்ததால்,
அப்போது புதிதாக வெளியாகி இருந்த ஒரு நல்ல திரைப்படத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். இருவரும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டனர். பின் அவளை அங்கு அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
அவளுடன் அதிகம் பேச கூட நேரமில்லாமல் இருக்கவே, அன்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, அவளோ அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
"ஹே நான் பேசறதை கேட்கிறீயா? இல்லையா?" என்று அவளைக் கேட்க, அவளோ திருதிருவென விழித்தாள்.
அதுவே அவள் அவன் பேசியதை முழுதாக கேட்கவில்லை என்பதை அவனிக்கு உணர்த்த,