தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 13 - சித்ரா. வெ
நித்யாவை எந்த கல்லூரியில் சேர்க்கலாம் என்று முடிவு செய்த கார்த்திக், அவளை அழைத்துச் சென்று அந்த கல்லூரியில் சேர்த்தும் விட்டான். அதற்கு முன் குழப்பத்தில் இருந்த வஞ்சியிடமும் அவர் பயப்படுவது போல் எதுவும் நடக்காது என்று ஆறுதலாக பேசி சம்மதிக்க வைத்திருந்தான்.
கல்லூரி திறந்து நித்யா கல்லூரிக்கு செல்ல ஒரு மாதம் இருந்தது. அதுவும் அவள் கல்லூரிக்கு பேருந்தில் தான் செல்ல வேண்டுமென்று கார்த்திக் முடிவு செய்திருந்தான்.
"எதுக்கு கார் தான் இருக்கே, நித்தி அதிலேயே போகட்டுமே," என்று குறிஞ்சியம்மாள் கூட கூறினார்.
"இல்ல பாட்டி ஒரு வருஷமாவது அவ பஸ்ல போகட்டும், அப்போ தான் அவளால பலவிதமான மனுஷங்களை பார்க்க முடியும், யார் எப்படி? அவங்கக்கிட்ட எப்படி நடந்துக்க முடியும்? எல்லாம் தெரிஞ்சிக்க முடியும், அதனால அவ பஸ்ல தான் போய் பழகணும்," என்று தீர்மானமாக கூறியவன்,
"ஏன் நித்தி, உனக்கு நம்ம காரில் போகணும்னு இருக்கா?" என்றுக் கேட்டான்.
அவளுக்குமே பேருந்தில் செல்ல வேண்டுமென்றதும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. பள்ளி செல்லும்போது கூட வீட்டிலிருந்து பத்து நிமிட நடைபயணம் தான், அதுவும் தோழிகளோடு சென்றிருக்கிறாள். அதனால் அவளுக்கு அது பெரிதாக தெரிந்ததில்லை. ஆனால் இப்போது பேருந்தில் தனியாக பயணிக்க வேண்டுமே என்ற யோசனை ஒருபுறம் இருந்தாலும், கார்த்திக் சொல்வதும் சரியென்று பட, "நான் பஸ்லயே போயிட்டு வரேன் மாமா," என்று கூறினாள்.
ஆனாலும் அவள் முகம் தெளிவில்லாததை பார்த்து, "இங்கப்பாரு நித்தி, கொஞ்ச நாளைக்கு தான் நீ தனியா போக வேண்டியிருக்கும், அடுத்து யாராச்சும் ஃப்ரண்ட் கிடைச்சிடுவாங்க, அப்புறம் அவங்களோட நீ பஸ்ல வரது போல தான் இருக்கும், அதிலும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் எப்படி இருக்குமோன்னு ஆரம்பத்தில் தான் பயமா இருக்கும், அதுக்குப்பிறகு அதில் இருக்கும் பயம் போயிடும், அதனால நீ தேவையில்லாம குழப்பிக்காத," என்று கார்த்திக் அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசினான்.
அடுத்து கல்லூரிக்கு போகும்போது உடுத்துவதற்காக சில ஆடைகள் எடுக்க, ஷாப்பிங் அழைத்துச் சென்றான். இதுவரை தன் அன்னை எடுத்துக் கொடுத்ததை தான் அவள் உடுத்தியிருக்கிறாள். அவளாக இப்படி ஷாப்பிங் சென்று தேர்ந்தெடுத்து வாங்கியதில்லை.
திருமணத்தின் போதும் ஞானசெல்வம் வரவழைத்திருந்த தையல் நிபுணர் தான் அவளுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்று தேர்வு செய்து தைத்து கொடுப்பார். இப்போது தைத்து தயாராக விற்பனையில் இருக்கும் ஆடைகளை பார்க்கவும், அதுவும் பலவிதமான ஆடைகளை