"ஏதேது, எனக்கு அடி வாங்க வைக்காம அமைதியா இருக்க மாட்ட போல, ரெண்டு நாளைக்கு முன்ன வர என்கிட்ட பேசவே யோசிப்ப, இப்போ இப்படி தயங்காம என்கிட்ட எல்லாம் பேசி, இப்படி பிரச்சனையில் மாட்டிவிட பார்க்கிறீயே," என்று அவள் போலியாக பயப்படவும்,
அவள் அதை உண்மை என்று நினைத்து, "சாரி மாமா," என்று கூறினாள்.
"ஹே சும்மா சொன்னேன். இப்படி நீ எதையும் தயங்காம என்கிட்ட கேட்கணும், அதுதான் எனக்கு வேணும், சரியா? ம்ம் அப்புறம் மத்த ட்ரஸ்ல்லாம் சரியா இருந்துச்சா?"
"ம்ம் சரியா தான் இருந்துச்சு மாமா, அதை நமக்கு ட்ரஸ் காட்டினாங்களே ஒரு லேடி அவங்க வாங்கிக்கிட்டாங்க,"
"ம்ம் அதை சரியா பேக் செய்து பில் போடஎடுத்துட்டு வருவாங்க," என்று சொல்லவும், அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடைகள் வரவும் சரியாக இருக்க, அதற்கான பணத்தை கட்டி ஆடைகளை வாங்கிக் கொண்டு வந்தனர்.
அப்படி இப்படி என்று நாட்கள் வேகமாக சென்று நித்யா கல்லூரிக்கு செல்லும் நாளும் வந்தது. வீட்டிலிருந்து கிளம்பும்போது தனது காரிலேயே கார்த்திக் அவளை அழைத்துச் சென்றவன், வீட்டிலிருந்து கிளம்பும் போது எந்த பேருந்து நிலையத்தில் ஏற வேண்டும், எந்த எண் கொண்ட பேருந்தில் ஏற வேண்டுமென்பதெல்லாம் காட்டியப்படியும் சொல்லியபடியும் அழைத்துச் செல்ல அவளும் அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டாள்.
பின் மாலை ஆனால் கல்லூரியிலிருந்து எந்த பேருந்து நிலையத்திலிருந்து வந்து பேருந்து ஏற வேண்டும் என்பதையும் காட்டிவிட்டு தான் அவன் அவளை கல்லூரியில் கொண்டு சென்றுவிட்டவன், "ஈவ்னிங் நீதான் பார்த்து பத்திரமா வரணும் நித்தி, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?" என்றுக் கேட்டதும், ஞாபகம் இருப்பதாக அவள் தலையாட்ட,
"அப்படியே மறந்துட்டாலும் பயப்படாத, கூட படிக்கிற ஸ்டூடண்ட் கிட்டேயோ இல்ல புரொபஸர் கிட்டேயோ கேட்டுக்கலாம் தப்பில்ல, அவங்க ஏதாச்சும் நம்மள குறைவா நினைப்பாங்க? அது நமக்கு அசிங்கம்னு நினைச்சா, அப்புறம் நாம இப்படியே இருக்க வேண்டியது தான், சில விஷயங்களை நாம் தெரிஞ்சிக்க மத்தவங்க உதவி தேவைப்படலாம், அதுல நாம இறங்கி போயிட மாட்டோம் புரியுதா?" என்று சொல்ல,
"சரி மாமா, எனக்கு நீங்க சொன்னது நல்லா ஞாபகம் இருக்கு, இல்லன்னாலும் யாரிடமாவது கேட்டுக்கிறேன். நீங்க என்னைப்பத்தி நினைச்சு கவலைப்படாதீங்க," என்று அவனிடம் தைரியமாக கூறினாள்.
"குட்," என்றவன்," அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு புறப்பட்டு செல்ல,
"உன்னோட டிபார்ட்மெண்ட் எங்கன்னு விசாரிச்சு அங்க போ," என்று கார்த்திக் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு யாரிடம் விசாரிப்பது என்று சுற்றும் முற்றும் தேட, அங்கு கூட்டமாக மாணவிகள் நின்றிருப்பதை பார்த்து அவர்கள் அருகில் செல்ல,
மூன்றாமாண்டு மாணவிகள் புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவிகளை ஈவ்டீசிங் செய்துக் கொண்டிருக்க, பெண்கள் கல்லூரியில் அதெல்லாம் இருக்குமென்பதை அறியாமல் தானாகவே நித்யா அவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.
தொடரும்..