தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 15 - சித்ரா. வெ
இன்னும் தெளிவில்லாத நித்யாவின் முகத்தைப் பார்த்த ரமா, "ஹே ரொம்ப பயந்துட்டியா? அதான் சும்மா விளையாட்டுக்குன்னு சொன்னேனே, அப்புறம் என்ன இன்னும் பயந்துக்கிட்டு," என்று கேட்டதும்,
"பயமெல்லாம் ஒன்னுமில்லையே," என்று சொல்லி நித்யா புன்னகைத்தாள்.
"பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்னு சொல்ற, ஆனா அதுக்குள்ள கல்யாணம் ஆகிடுச்சா? உன்னோட பேர் என்ன? அப்புறம் உன் வயசு என்ன?" என்று ரமா சந்தேகமாக கேட்கவும்,
"என்னோட பேர் நித்யபூரணி. நித்யா, நித்தின்னு எல்லோரும் என்னை கூப்பிடுவாங்க, எனக்கு 19 வயசு முடிஞ்சு 20 நடக்குது, அப்பாக்கு உடம்பு சரியில்லன்னு அவரை கூட இருந்து பார்த்துக்க அம்மா என்னை ஸ்கூலோட நிறுத்திட்டாங்க, அப்புறம் அப்பா இறந்ததும், இங்க பாட்டி வீட்டுக்கு வந்துட்டோம், எங்க மாமாவை தான், அதாவது தாய்மாமன் பையனை தான் நான் கல்யாணம் செய்துருக்கேன். பாட்டி தான் எங்க கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டாங்க, ஆனா மாமா நான் படிக்கணும்னு விரும்புறாங்க, அதான் அவங்க என்னை காலேஜில் சேர்த்துருக்காங்க," என்று நித்யா பதில் கூறினாள்.
"சூப்பர். இந்த பாட்டிங்க தான் நமக்கெல்லாம் வில்லிங்க போல, நானும் +2 முடிச்சுட்டு இருக்கும்போது என்னோட பாட்டிக்கு ரொம்ப சீரியஸா ஆகி ஹாஸ்பிட்டலில் சேர்த்தாங்க, என்னோட பேத்திக்கு ஒரு கல்யாணம் நடக்காம செத்துடுவேன் போலன்னு ஹாஸ்பிட்டலில் ஒரே புலம்பல், அதை சீரியஸா நினைச்சு எங்க வீட்டிலும் சீரியஸா மாப்பிள்ளை பார்த்தாங்க,
ஆனா என்னோட ஆளு, அதான் என்னோட ஹஸ்பண்ட், 18 வயசுக்கு முன்ன கல்யாணம் செய்யக் கூடாதுன்னு சொல்லி வெறும் நிச்சயதார்த்தம் முடிச்சாங்க, அப்புறம் என்னோட பாட்டியும் சரியாகி வந்துடுச்சு,
அதோட சும்மா இருந்துதா, எனக்கு எப்போ பதினெட்டு வயசு முடியும்னு காத்துக்கிட்டு இருந்து, திரும்ப ஹாஸ்பிட்டல் போய் படுத்து விடாப்பிடியா கல்யாணத்தை முடிச்சிடுச்சு, ஆனா இப்போ நல்லா நடமாடிக்கிட்டு கிடக்கு,
அப்போதும் சும்மாவா இருக்கு, என் மூலமா ஒரு கொள்ளுப் பேரனோ, பேத்தியோ பார்க்கணுமாம், அதுக்கு அடிப்போட்டுட்டிருக்கு, ஆனா என்னோட ஆள் தான் நான் ஒரு டிகிரி முடிச்சு தான் அதெல்லாம்னு என்கிட்ட சொல்லிட்டாங்க,
இப்போ என்னோட பாட்டி ஆசைன்னு ஒரு குழந்தை பெத்துக்கிட்டேன்னு வச்சிக்கோயேன், அது பெண் குழந்தையா பிறந்தா, அந்த குழந்தை பெரிய மனுஷியாகறதை பார்ப்பேனா, அப்புறம் அதுக்கு ஒரு கல்யாணம் ஆகறதை பார்ப்பேனா, எப்போ எள்ளுப் பேரனை பார்ப்பேன்னு புலம்ப ஆரம்பிச்சிடும், நம்மள குடும்ப சிறைக்குள்ள தள்ளுவதில் இந்த