"ம்ம் நீங்க சொல்றது போலவே நடந்துக்க முயற்சி செய்றேன். என் மாமாவும் அப்படித்தான் சொல்வாங்க, உங்க அறிமுகம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்," என்று நித்யா கூறவும்,
"நான் சீனியரா இருந்தாலும் கிட்டத்தட்ட ரெண்டுப்பேருக்கும் ஒரே வயசு தானே, அதனால என் பேரைச் சொல்லியே கூப்பிடு, இந்த நீங்க வாங்க போங்கல்லாம் வேண்டாம், அப்புறம் சீனியர்ஸ் திரும்ப ஏதாச்சும் ரேகிங்கிற பேர்ல தொல்லை செய்தால் என் பேரைச் சொல்லு, என்னோட பேர் ரமா. சரி ஈவ்னிங் பார்ப்போம்," என்று பேசிக் கொண்டே அவர்களது டிபார்மெண்டிற்கு வந்துவிடவும்,
"இதுதான் நம்ம டிபார்ட்மெண்ட், இதுதான் எங்க க்ளாஸ் ரூம், ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் ரூம் அதோ அங்க இருக்குப் பாரு, இன்னைக்கு தான் உங்களுக்கு முதல் நாள் இல்லையா? அதனால் எல்லோரையும் ஆடிட்டோரியம்க்கு வரச் சொல்லுவாங்க, இந்த பில்டிங்க்கு பக்கத்து பில்டிங்க் தான் ஆடிட்டோரியம், அங்க போ," என்று சொல்லவும்,
"ரொம்ப நன்றி ரமா," என்று சொல்லிய நித்யாவும் ஆடிட்டோரியத்திற்கு சென்றாள்.
அங்கு அறிமுகப் பேச்சுக்கள் முடிந்து அனைவரும் வகுப்பிற்கு வரவும் ஆசிரியர்கள் வந்து வகுப்பு எடுக்க ஆரம்பிக்க, ஆங்கிலத்தில் நடத்தியது கொஞ்சம் புரிந்து புரியாமலும் இருக்க, அதை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தாள். அதேபோல் உடன் படிக்கும் மாணவிகளும் அவளுக்கு திருமணம் ஆனதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சகஜமாக பேச, காலையில் மனதில் இருந்த பயம் நீங்கி இலகுவாய் உணர ஆரம்பித்தாள்.
மாலை வீடு திரும்பியதும் அனைத்தையும் கார்த்திக்கிடம் பகிர்ந்துக் கொள்ள மனசு துடித்தது. ஆனால் அவனோ அலுவலகத்தில் இருக்கிறானே, அவன் வரவுக்கு நித்யா ஆவலாக காக்க ஆரம்பிக்க, அவனுமே அவளின் கல்லூரியின் முதல் நாள் அனுபவத்தை கேட்பதற்காக சற்று முன்னதாகவே வீட்டிற்கு கிளம்பி வந்தான்.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் நித்யாவை தேட, "அவ ரூம்ல இருக்கா கார்த்தி," என்று குறிஞ்சியம்மாள் சொல்லவும்,
"ம்ம் சரி பாட்டி, நான் அவளை பார்த்துட்டு வந்துட்றேன்." என்று சொல்லிவிட்டு அவன் வேகமாக படியேறி அவர்களது அறைக்குச் செல்ல, அங்கே நித்யா புத்தக்கதிற்குள் மூழ்கி எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
"ஹாஹா முதல் நாள் காலேஜ்க்கு போனதுக்கே என்னோட பொண்டாட்டி செம படிப்ஸா மாறிட்டா போலயே," என்று கேலி செய்தப்படி அவன் உள்ளே வர,
"மாமா," என்று அவனை எதிர்பார்த்திருந்ததால் உற்சாகமாக அழைத்தவள்,