உயிரினங்கள் நோய்வாய்பட்டு விடும். அவற்றை கொன்று புதைத்தாக வேண்டும். இல்லையெனில் அவை தொற்று வியாதியை பரப்பும் வாய்ப்பு அதிகம்”
“ இது எப்போதும் நடப்பதுதான். ஆரம்ப காலத்தில் குரங்குகளை வைத்தும் ஆராய்ச்சிகள் செய்தார்கள். அவை வைரஸாலோ பாக்டீரியாவாலோ பாதிக்கப்பட்டால் புதுபுது வியாதிகள் பரவ ஆரம்பித்து விடும். அதனால் அவற்றை கொன்று புதைத்து விடுவார்கள். எரிக்ககூட அனுமதிக்க மாட்டார்கள்” வினய் சொன்னான்.
“எனக்கு அந்த வேலையை செய்வதில் உடன்பாடு இல்லை தம்பி. ஆனால் வயிற்று பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே அதுக்காக செய்வேன். சில சமயம் டஜன் கணக்கில் இவற்றை கொல்ல நேரிடும்போதுதான் மனம் வலித்து போகும்”
“அப்புறம் என்னாச்சு சொல்லுங்க…”
“அப்போது புத்து நோய்காக ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. நல்ல எலிக்கு வியாதியை வரவச்சு அப்புறம் அதுக்கு ட்ரீட்மெண்ட் தந்து குணபடுத்தினாங்க. அதுல சில செத்து போச்சு. பிழைச்சுகிட்ட எலிகளை வைத்து ஆராய்ச்சி வெற்றின்னு சொன்னாங்க”
“இதெல்லாம் செய்தால்தானே பல ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம் செய்ய முடியும். அதனால் எத்தனை உயிர்களை காப்பாற்ற முடியும் தெரியுமா. சில சமயம் நீங்க சொல்றதுபோல மரணத்தை தவிர்க்க முடியாது. ஏன் அப்படி ஆச்சுன்னு காரணத்தை கண்டுபிடிச்சு சரி செய்து மீண்டும் மீண்டும் செய்தால்தான் ஒரு வெற்றிகரமான முடிவை கண்டுபிடிக்க முடியும்”
“அது சரி… ஆனால் எலி… தவளை… கோழி இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சின்ன குழந்தையை வைத்து செய்தால்…”
“என்ன சொல்றீங்க… அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது” அதிர்ச்சி அடைந்தான்.
“அரசு பரிசோதனை கூடத்தில் செய்யத்தான் அனுமதி வேண்டும். இவங்கதான் சொந்தமா பரிசோதனை கூடமே வச்சிருந்தாங்களே. திருட்டுத்தனமாக செய்யலாமே”
“என்ன ஆச்சு மாணிக்கம். “
“அவங்க என்ன செய்தாங்கன்னு எனக்கு தெரியாது தம்பி. ஒருநாள் அவங்க பரிசோதனை கூடத்தை சுத்தம் செய்ய போனபோது ஒருத்தன் வந்தான். அவன் கையில ஒரு பெண் குழந்தை இருந்துச்சு. பத்து வயசிருக்கும்… மயங்கி இருந்துச்சோ இறந்து போயிருந்துச்சோன்னு தெரியலை. அவன் ஜேக்குகிட்ட ரகசியமா ஏதோ பேசினான். நான் அந்த இடத்தை சுத்தம் செய்துட்டே இதை கவனிச்சிட்டு இருந்தேன்.”
“செத்துபோன உடல்மீது ஆராய்ச்சி செய்ய நினைத்தார்களா? அந்த குழந்தை யார்?”