கண்ணுக்குள்ள நிக்குது. யாருமில்லாத அநாதையா பொறக்கறது தப்பா தம்பி. அந்த உயிருக்கு பாதுகாப்பு கிடையாதா?”
“இதை எதிக்கல் வயலேசன்னுதான் சொல்லணும்”
“நீங்க சொல்றது எனக்கு புரியல. ஆனா ஒண்ணு அப்பா அம்மா இல்லாத குழந்தைகளுக்கு எத்தனை ஆபத்துகள் இந்த உலகத்துல இருக்குன்னு அதுக்கப்புறமும் நான் பார்த்துட்டேதான் இருக்கேன். ஒரு குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கி தரும் பொறுப்பு சமுதாயத்திற்கும் உண்டு. இதெல்லாம் எப்ப நடக்கும் தம்பி”
இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு வினய் அனுபவசாலி இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத உலகம்… குழந்தைகளை தெய்வங்களாக நினைக்காமல் வெறும் பொருளாக பார்க்கும் உலகம்… வாழத் தகுதியில்லாத நரகம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபற்றி அவரிடம் பேச அவனுக்கு நிறைய விசயங்கள் இருந்தன. அதைவிட அந்த பேப்பர்களில் இருக்கும் ஆராய்ச்சி முடிவினை தெரிந்து கொள்ள வேண்டும்.
அவரிடம் விடைபெற்று தன் இருப்பிடத்திற்கு திரும்பினான். அமைதியான தனிமையில் அந்த ரிப்போர்ட்களை படிக்க ஆரம்பித்தான். கணக்காளர்கள் பயன்படுத்தும் டே-புக் போலவே அதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற அப்சர்வேசன்ஸ் பதியபட்டிருந்தன..
முதலில் அந்த 'ஸ்பெஸிமென்' -அப்படித்தான் அந்த குழந்தையைபற்றி குறிப்பிட்டிருந்தனர், உடலில் புற்று நோயை உருவாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சில வகையான உணவுகள், காளான்கள், இறைச்சி வகைகள் … புற்று நோயை உருவாக்கும் கல்ச்சர் எனப்படும் புற்று நோய் செல்கள் போன்றவை புற்று நோயை உருவாக்கும் காரணிகளாக பயன்படுத்தப்பட்டன.
நாற்பது நாட்களில் புற்று நோய் உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்று சிகிச்சையாக சப்ரஸர் டிஎன்ஏவை ஜீன் மாற்றம் முறையில் ஸ்பெஸிமெனின் உடலில் உருவாக்க ஆரம்பித்திந்தார்கள். இதற்காக செயல் இழக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை பயன்படுத்தி இருந்தனர்.
அந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் நிலையில் எதிர்பாராமல் ஒரு விசயம் நடந்தது. வெக்டாராக பயன்படுத்தி இருந்த வைரஸ் உயிர் பெற்று விட்டது. அது தன்னுடைய இயல்பான வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்த மருந்துகள்… வைரஸ் உருவாக்க ஆரம்பித்த மாற்றங்கள்… அதை அழிக்க புறப் புற்று நோயை
அதாவது குளறுபடி நடக்க ஆரம்பித்து விட்டது. முதலில் ஸ்பெஸிமெனின் எலும்புகள் சுருங்க ஆரம்பித்து குள்ளமான உருவத்தை அடைய ஆரம்பித்தது.