தொடர்கதை - காரிகை - 11 - அமுதினி
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவெறு மனம் சொல்லுதே
உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
அந்த டைனிங் டேபிளின் ஒரு புறம் பவித்ராவும் உமாவும் அமர்ந்திருக்க, மறுபுறம் லக்ஷ்மியும் சத்யாவும் அமர்ந்து இருந்தனர்.
அந்த இடமே அமைதியாக இருந்தது பவித்ராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக இப்படி தான் இருக்கிறது. ஒரு வேலை லட்சுமி அம்மா என் கடந்தகாலத்தை பற்றி அறிந்து கொண்டதால் தான் இப்படி இருக்கிறாரோ...ஆனால் சத்யாவுக்கு என்னவாயிற்று??? அவர்கள் இருவரும் நண்பர்களை போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் கலாட்டா செய்து கொண்டும் இருப்பதை பார்க்கவே அவளுக்கு ஆசையாக இருக்கும். ஒரு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்குமோ என்று எண்ணுவாள். முதலில் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து உணவு உண்ண தயங்கியவள் அதற்க்கு பின் அவர்கள் இருவரின் கலாட்டாவை பார்ப்பதற்காகவே மறுக்காமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். இன்னும் சொல்ல போனால் ஒன்றாக உண்ணும் தருணத்தை அவள் மனம் எதிர்நோக்கியது என்றே சொல்ல வேண்டும். ஒரு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்குமோ என்று அவள் மனம் அவளையறியாமலேயே ஏங்கியது அவர்களை கண்டு. ஆனால் இந்த இரண்டு நாட்களாக என்னவாயிற்று?? பவித்ரா யோசிக்க, அதே நேரம் அவளின் கைப்பேசி அழைத்தது.
முருகன் என்ற பெயரை கண்டதும் அதை எடுத்து பேசினாள் பவித்ரா.
"ஹலோ அண்ணா சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?" -பவித்ரா
"நல்லாருக்கேன் மா. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். இப்போ பேசலாமா? " - முருகன்
"சொல்லுங்க அண்ணா" -பவித்ரா
"ஆஸ்ரமத்துல ஒரு சின்ன பிரச்சனை மா. அதான் உன்னை தொந்தரவு பண்ண வேண்டியதா போய்டுச்சு" முருகன் சிறிய பிரச்சனை என்று சொன்னாலும் ஏதோ பெரியதாக வர போகிறது என புரிந்தது பவித்ராவுக்கு.
"தொந்தரவு எல்லாம் இல்லை...நீங்க சொல்லுங்க அண்ணா" -பவித்ரா