"அது... நம்ம ஆஸ்ரமம் இப்போ இருக்குற இடத்து மேல ஒரு ஆள் கேசு கொடுத்துருக்காரும்மா. அந்த இடம் அவருடையது. அவருடைய சம்மதம் இல்லாம இங்க ஆஸ்ரமம் நடக்குதுன்னு. அதுக்கான நோட்டீஸ் வந்துருக்கு. யாருகிட்ட போறதுன்னு தெரியல. நம்ம சகுந்தலா அம்மாவுடைய வக்கீல் கிட்ட போலாம்னு பார்த்தா அவரு பெங்களூரு போயிட்டாராம். அதான் உனக்கு போன் பண்ணுனேன். என்னம்மா பண்றது? இங்க ஆஸ்ரமத்துல இருக்கறவங்க எல்லாம் பயப்படறாங்க. திடிர்னு வெளிய போக சொல்லிட்டா எங்க போறதுன்னு சொல்லி அழறாங்க. " முருகன் சொல்ல, என்ன சொல்வதென்றே தெரியவில்லை பவித்ராவுக்கு. இது என்ன புது பிரச்சனை என அவளுக்கு குழப்பமாக இருந்தது. அதை பற்றி யோசிக்க நேரமில்லை, இப்போது அவர்கள் பயப்படாத வண்ணம் ஒரு பதில் சொல்ல வேண்டும் என யோசித்தவள் "அண்ணா பயப்படாம இருக்க சொல்லுங்க. நான் அங்க வரேன் அண்ண. அந்த நோட்டீஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும். அதுக்கு அப்பறம் நல்ல ஒரு வக்கீலா பார்த்து யோசனை கேக்கலாம்" என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
"என்ன பவிம்மா, ஏதாவது பிரச்சனையா?" அதுவரை அவள் பேசுவதையும் அவள் முகமாறுதலையும் கவனித்த லட்சுமிக்கு ஏதோ பிரச்சனை என புரிந்தது.
அவரிடம் சுருக்கமாக விவரத்தை சொன்னவள் கண்கள் அவளறியாமலே சத்யாவின் புறம் போனது. அவனோ இங்கு நடக்கும் பேச்சுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல சாப்பிட்டு கொண்டிருந்தான். அதே சமயம் லக்ஷ்மியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தார்.
"என்னவாயிற்று இவனுக்கு? பவித்ரா அவளுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது இவன் இப்படி விட்டேத்தியாக இருக்க மாட்டானே!!!" அவர் மனம் துணுக்குற்றது. அவன் இரண்டு நாட்களாக இப்படி தான் இருக்கிறான் என்பது அவருக்கு அப்போது தான் புரிந்தது. தன்னுடைய யோசனையில் சத்யாவை மறந்துவிட்டோமோ என்று யோசனையுடன் அவனை பார்த்தார்.
"அம்மா நான் ஆஸ்ரமம் வரைக்கும் போகணும். நான் போயிட்டு வந்துடவா?" பவித்ராவின் கேள்வியில் தன் யோசனையை விட்டு வெளியே வந்தவர் மீண்டும் சத்யாவின் புறம் பார்த்தார். இப்போதும் அவனிடம் எந்த மாறுதலும் இல்லை. நான் கூட்டி கொண்டு போகிறேன் என்று கூட சொல்லாமல் ஏன் இப்படி இருக்கிறான் என அவருக்கு குழப்பம் வந்தது. பவித்ரா தன் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து அவள் புறம் திரும்பினார்.
"சரி பவிம்மா. நீ போயி ரெடி ஆயிடு. நானும் வரேன் உன் கூட" லட்சுமி சொல்ல, "இல்லைம்மா, பரவால்ல. இப்போ நான் போயி என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டு வரேன்.