தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 20 - சாகம்பரி குமார்
"வேண்டாம் அஞ்சலை.. அதிதிக்கு நீ ஏதோ தப்பா செய்யப் போறேன்னு புரியுது. விட்டுடு" செல்வா கெஞ்சினார்.
"நான் என்ன செய்யப் போறேன்னு உனக்கு எப்படி தெரியும்?"
"அந்த மருதுவின் தம்பியிடம் நீ பேசியதை கேட்டேன்."
"நான் ஒண்ணும் தப்பா பேசலை. அவன் அண்ணன் அடிபட்டு கிடக்க அதிதிதான் காரணம்னு உண்மையத்தான சொன்னேன்."
"அதிதிக்கும் மருதுக்கும் என்ன பிரச்சினை யாம்?. அதுக்கு காரணம் நீதான்னு தெரியும். அங்கே என்ன நடந்ததுன்னும் தெரியும்"
"அதான பார்த்தேன். குரல் ஓங்கி இருக்கே என்ன விஷயம்னு பார்த்தேன்"
"சொல்லு அவமேல உனக்கு என்ன கோபம்?"
"கோபம் இல்ல… வெறுப்பு…"
"யாருமே இல்லாத அநாதை பொண்ணு.. அவ மேல உனக்கு பரிதாபம்தான் வந்திருக்கணும்."
"பரிதாபமா…. இன்னும் உசுரோட இருக்காளேன்னு ஆத்திரம்தான் வருது. அவளோட அம்மாவால உன்னை கட்டி கிட்டேன். கிராமத்துல வந்து வாழற மாதிரி ஆச்சு.."
"உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு அண்ணிட்ட நான்தான் சொன்னேன். அதனால அவங்க நம்ம கல்யாணத்தை பேசி முடிச்சாங்க."
"நான் எப்படியோ வாழனும்னு நினைச்சேன்… இங்கே வந்து கூட நிம்மதியா வாழ முடியலை. அவள் அசிங்கபட்டு செத்து போனப்பிறகுகூட மாமா அவளைதான் ஒசத்தியா சொன்னார்."
"உண்மைதானே. துளசி அண்ணி தப்பு செஞ்சிருக்க மாட்டாங்க… இது எனக்கும் அப்பாவுக்கும் நல்லா தெரியும்."
" அவளாலதான் அவமானம் தாங்காம எங்கம்மாதான் நெஞ்சு வெடிச்சு செத்து போச்சு"
"அது அவங்க தப்பு. அண்ணிமேல நம்பிக்கை இருந்தா அப்படி நடந்திருக்காது."
"இன்னும் ஒப்புக்க மாட்ட.. நம்புனவங்களுக்கு துரோகம் பண்றது அவங்க ரத்தத்துலயே ஊறிப் போனதுன்னு எல்லாருக்கும் ஒருநாள் புரியும்."
"அப்போ பார்த்துக்கலாம். அப்பா அதிதிக்கு சொத்து எழுதி வச்சிட்டது உனக்கு பிடிக்கலை. அவளுக்கும் ஒரு பங்குதானே தந்தார்..அதைவிட நிறைய நம்ம பிள்ளைங்களுக்கு எழுதியிருக்கார் "
"ஒரு பங்குனாலும் அது பரம்பரை வீடு. என்னை அங்கே வாழ விடலை.. என் பிள்ளைங்களுக்கும் அந்த கொடுப்பினை இல்லாம போச்சு. அவரு வேணும்னுதான் இப்படி செஞ்சிருக்கார்."