"அது அவரோட விருப்பம். நானும்தான சம்பாதிச்சிருக்கேன்"
"எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். இது பண பிரச்சினை இல்லை. மரியாதை பிரச்சினை.. அவ்வளவு அசிங்கப்பட்டவளோட பொண்ணை அந்த கற்பகம் தன்னோட பையனுக்கே பொண்டாட்டி ஆக்கி இருக்கா.."
"அது நல்ல விஷயம்தானே.. இதெல்லாம் உன்னை ஏன் பாதிக்கணும்?. நமக்கும் பிள்ளைங்க இருக்கு… அதுங்களோட நல்லதை பார்க்கணும்"
"அதிதி இருந்தா அதுவும் நடக்காது."
"அதுக்காக அவளை என்ன செய்யப் போற"
"நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். அவள் எப்படி போனா எனக்கென்ன.. "
"மருது தம்பிட்ட நீ என்ன பேசினே.."
"அவனோட அண்ணனை அவளோட புருஷனை வைத்து அடிச்சிருக்காளாம். அவன் ஆஸ்பத்திரியில கோமா வந்து படுத்து கிடக்கிறானாம். "
"ஒரு தப்பும் செய்யாம அடிப்பாங்களா.. இவன் ஏதாவது குரங்குதனம் செய்திருப்பான். நீ சமாதானமா பேசாமல் அவனை சீண்டி விடற மாதிரி பேசுனது தப்பு. அதிதிக்கு ஒரு பிரச்சனையும் உன்னால வரக்கூடாது." கோபமாக பேசினார்.
"அது..'
"வாயை மூடு.. இனி நான் அமைதியாக இருக்க மாட்டேன். " எச்சரித்தார்.
அஞ்சலை அவருடைய கோபத்தை கண்டு பயந்து போனதுபோல தலையை அசைத்து சென்று விட்டாள்.
ஆனால் மறுநாள் காலையில் அஞ்சலை அந்த மருதுவின் தம்பியிடம் ரகசியமாக பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து ஒரு முடிவிற்கு வந்தார். அதிரதனிடம் இதுபற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்…!.
அப்போது..
அதிதியின் வீட்டில் அதிரதன் யோசனையுடன் அமர்ந்திருந்தான். கடந்து சென்ற நிகழ்வுகள் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.
காட்டுக்கு சென்றது முதல்… கடத்தப்பட்டு மீண்டது வரை பல கேள்விகள் அவனுக்குள் இருந்தன. கடத்தி சென்றவர்கள் அஞ்சலையின் ஆட்கள்… ஓகே.. அஞ்சலைக்கு அதிதிமீது என்ன கோபம்…? அப்புறம் அந்த கிரியேச்சர்… அது யார் என்று பார்க்க வேண்டும். அதிதியை ஏன் சுற்றி வருகிறது என்பதையும் தெளிவாக்க வேண்டும்.