தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 06 - ரவை
வசந்தா எனும் பெயரில், பரமசிவன் தெருவில் சிலரை சந்தித்ததை கடந்த பகுதியில் பார்த்தோம்
வசந்தாவின் மனதில் ஒரு திருப்தி! எல்லோருமே நாடு கெட்டுவிட்டது என நம்பவில்லை; சிலர்தான் அப்படி நினைக்கிறார்கள். மற்றவர்கள் வாய் திறந்து நாட்டில் நிறையவே நல்லதும் நடக்கிறது என வெளிப்படையாக தெரிவிக்க தயங்குகிறார்கள் என்பதே பிரச்னை!
சரி, இன்றைக்கு இது போதும், நாளை பார்ப்போம்! என எண்ணி வீடு திரும்புகையில், எதிரே ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தவள், வசந்தாவை பார்த்ததும், டூவீலரை நிறுத்தி, வசந்தாவிடம் பேசினாள்.
" ஹலோ, வணக்கம்! உங்களோட கொஞ்சம் பேசலாமா? ரொம்ப அவசரம்!"
வசந்தா தலையசைத்ததும், டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகிலிருந்த பஸ் குடை கீழே இருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.
" என்னாலே நம்பவே முடியலைங்க! கடவுள் சோதிப்பார், ஆனா கைவிடமாட்டார்னு சொல்வாங்க, அது நூற்றுக்கு நூறு உண்மைங்க!"
" எதை வைத்து சொல்றீங்க?"
" சொல்றேன்.....உங்க பேரு?"
" வசந்தா! உங்க பேரு?"
" நர்மதா! நம்மிடையே, பெயரிலேகூட ஒரு பொருத்தம் பார்த்தீங்களா? நீங்க வசந்தா, நான் நர்மதா! ரெண்டு பெயரும் தலையெழுத்து ரெண்டை தவிர, கடையெழுத்து மூணும் ஒண்ணா இருக்கு! இறைவா! உன் கருணையே கருணை!"
" நீங்க ரொம்ப பரவசப்படற அளவுக்கு, அந்த கடவுள் என்ன செய்தாரு?"
" இன்றோடு, கெடு முடியுதுங்க! நம்பிக்கையெல்லாம் இழந்து, கைவிடப்போன நேரத்திலே கடவுள், நான் எதிர்பாராத நேரத்திலே, உங்களை என் கண்முன்னாலே நிறுத்திட்டாரு!"
" அப்படி மற்றவங்களிடம் இல்லாத எதை என்னிடம் பார்க்கிறீங்க?"
" தெய்வீக களைனு சொல்வாங்களே, அதை! உங்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிடத் தோன்றுதுங்க! விஷயத்தை சொல்றேன்!
நான் ஒரு சினிமா தயாரிப்பாளர் கம்பெனியிலே வேலை பார்க்கிறேன், அந்தக் கம்பெனி இப்போ ஒரு பக்திப் படம் எடுக்க முடிவு பண்ணி, அதிலே பார்வதியாக நடிக்க புது முகத்தை தேடறாங்க! என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்து ஒரு வாரம் கெடு வைச்சிருக்காங்க, அந்த கெடு இன்றோடு முடியுது! உங்களை பார்த்தவுடனே புரிந்துவிட்டது, தெய்வமே உங்களை அந்த வேடத்தில் நடிக்க அனுப்பியிருக்கிறார்னு!