தொடர்கதை - வாழ்வே மாயம்! - 09 - ரவை
சகாதேவன் தியானத்தில் இருந்தார்!
கண்ணகி, காயத்ரி, மாதவி வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்தனர்.
கொரோனா ஊரடங்கு சட்டத்தினால், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், கண்ணகிக்கு பள்ளிக்குச் செல்லும் அவசரமேதும் இல்லாத காரணத்தால், அவள் வீட்டு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தாள்!
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்ததால், துப்புரவு பணியாளர்கள், வீட்டுவேலைக்காரி, பேப்பர் போடும் பையன் எவரும் வருவதில்லை!
காயத்ரி, மாதவிக்கும் பள்ளி இல்லை!
சகாதேவன் தியானத்திலிருந்து எழுந்ததும், கண்ணகி அவரிடம் ஓடிவந்தாள்.
" குடிக்க காபி கொண்டு வரட்டுமா?"
" தங்கச்சி! வேண்டாம்மா! இல்லாத பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்."
கண்ணகியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது!
பதறிய சகாதேவன், அவளைக் கேட்டான்.
" என்னாச்சு? ஏன் கலங்கறே?"
"வாழ்க்கையிலே முதன்முறையா என்னை ஒருத்தர் பாசத்தோட 'தங்கச்சி'ன்னு கூப்பிட்டதும், மனசு கலங்கிடுத்துய்யா!"
" ஓ, அதுவா? தங்கச்சி! குடும்பம், உறவு இதெல்லாம் ரத்தபந்தம் மட்டுமல்ல, யார் உனக்கு தேவைப்படுகிறபோது, உதவிக்கரம் நீட்டுகிறார்களோ, அவர்களே உறவினர்கள்!
அந்த உறவை நீர் ஊற்றி வளர்ப்பது, அன்பு, உதவும் நேசம், பரிவு, நல்லெண்ணம்!
இவைகளை நீயும் உன் பெண்களும் தாராளமாக தருகின்றீர்கள்.
பதினெட்டு ஆண்டுகள் வரண்டு கிடந்த இதயத்துக்கு, புதிதாக நீங்கள் ஊற்றுகிற நீர், பயிர் துளிர்விட உதவுகிறது!
என் பெற்றோரும் உடன்பிறந்த மூத்த சகோதரிகள் நால்வரும் என்மீது பாசத்தைப் பொழிந்தனர். ஆனால் நான்தான் தவறான நட்பால், அதை மதிக்கத் தெரியாமல், அவர்களுக்கு பெரிய அவமானத்தையும் தீங்கையும் இழைத்துவிட்டேன்!
அதுசரி, நான் வந்ததிலிருந்து உன் கணவரை சந்திக்கவே இல்லையே, வெளியூர் போயிருக்கிறாரா?"
இந்தக் கேள்வி, காதில் விழுந்ததும், காயத்ரி, மாதவி இருவரும் தாயை அணைத்தவாறு நின்றனர்.
கண்ணகி திடீரென மௌனமாகி, பூஜையறையை நோக்கி பார்வையை செலுத்தினாள்.