சாவதற்கு தயாராகத்தான், இதுவரை வாழ்கிறேன்........"
" தங்கச்சி! உன் வாழ்வில் இத்தனை பெரிய விபரீதமா? அதையும் மீறி நீ என்னை அழைத்துவந்து உன்னுடன் தங்க வைத்திருக்கிறாயா? தங்கச்சி! உன் காலில் விழுந்து உன்னை நான் வணங்கும் அளவுக்கு நீ உயர்ந்துவிட்டாய்! எந்தப் பெண்ணுக்கு இந்த துணிச்சல் வரும்?"
" ஐயா! சத்தியம் என் பக்கம் உள்ளவரையில் நான் ஏன் பயப்படவேண்டும்?"
" உண்மைதான், இருந்தாலும், உன்மீது கதைகட்டி உன் வாழ்வை சூறையாடியவர்கள், இப்போது நான் உன்னுடன் தங்கியிருப்பதை உனக்கு எதிராகத் திருப்பி, உன் கணவரிடம் சொல்லியிருப்பார்களே...."
" நிச்சயமாக! அவர் ஆத்திரத்தின் உச்சத்தில், என்னை கொலை செய்யவும், துணியலாம், அதற்குப் பயந்து நான் ஓடினால், கட்டிவிடப்பட்ட கதை உண்மையாகிவிடுமே! வருவது வரட்டும்! எதிர்காலத்தைப்பற்றி நினைக்காதே! என்று நீங்கள் சொல்லித் தந்திருக்கிறீர்களே......."
நிகழ்காலத்தில் இருவரையும் நிலைத்துவைக்க, வாயிற்புறத்தில் நிழலாடியது!
இருவரும் திரும்பிப் பார்த்தனர்!
கையில் கம்பு, கத்தியுடன் பத்துபேர், நடுநாயகமாக கண்ணகியின் கணவன், கையில் கத்தியுடன்!
" பார்த்தீங்களா? இவன்தான் நான் சொன்ன அந்த அவன்! தைரியமா எப்படி ரெண்டுபேரும் ஜோடி சேர்ந்து பேசிக்கிட்டிருக்காங்க, பாருங்க!
இங்கே அவங்களோட வாழற, என் ரெண்டு மகளையும், இதே வழியிலே பெற்றவ இழுத்துண்டு போகமாட்டான்னு சொல்லமுடியுமா? இந்த ஒழுக்கங் கெட்டவளை, அடித்து நொறுக்கி, என் மகள் ரெண்டு பேரையும் காப்பாத்துங்க!"
என்றவுடன், அந்த பத்துபேர் வீட்டுக்குள் நுழைய வந்தனர்.
சகாதேவன் அவர்களை தடுக்க முன்வந்தபோது, கண்ணகி அவனைப் பின்னே போகச் சொல்லிவிட்டு, கையில் செல்போனுடன் வாயிலை மறித்துக்கொண்டு நின்றாள்.
" இதோ பாருங்க! போலீஸ் கமிஷனர் ரஞ்சித் என் சொந்தக்காரன்! அவருக்கு போன் பண்றேன், ஊரடங்கு உத்தரவை மீறி, பத்துபேரா இங்கு கத்தி, கம்புடன் கூடியிருக்கிற உங்களை கைதுபண்ணச் சொல்லட்டுமா? நீங்களே கலைந்து போயிடறீங்களா?"
அடுத்த வினாடியே, அந்தப் பத்துபேரை காணவில்லை!
கணவனைப் பார்த்து, கண்ணகி சிரித்தாள்.
" ஏன்யா! கட்டின பெண்டாட்டியை, பெற்ற பெண்களை, வீட்டைவிட்டு அடிச்சு துரத்திட்டு, இன்னொருத்தியை சட்டவிரோதமா கட்டிக்கிட்டு, வாழற நீ ஒழுக்கத்தைப் பற்றி பேசறியா?