முடியலை...”, துளசி கூற மைத்தி தன் சட்டையில் இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்...
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்ணின் தந்தை இவர்கள் அருகில் வந்தார்...
“ரொம்ப நல்லா பௌலிங் பண்ற பாப்பா... சுத்தி நடந்துட்டு இருக்கும்போது நீ விளையாடுறதை பார்த்தேன்... ரெகுலரா விளையாடுறியா....”
“இல்லை மாமா... இன்னைக்குதான் வந்தேன்...”
“அப்பா... நான் இந்த அக்காக்கிட்ட எனக்கு பௌலிங் கத்துத் தர சொல்லி இருக்கேன்... தினம் என்னை இங்க கூட்டிட்டு வர்றீங்களா...”
“அச்சோ துளசி... நான் தினம்லாம் விளையாட மாட்டேன்... இன்னும் சொல்லப்போனா இன்னைக்குத்தான் முதல் தடவையா வெளில விளையாடியே இருக்கேன்... இந்த அண்ணாலாம்தான் ரெகுலரா விளையாடுவா... நீ வேணும்ன்னா அவாக்கிட்ட கத்துக்கோ...”, மைத்தி சொல்ல துளசியின் முகம் கூம்பிவிட்டது....
“அடடே துளசி அதுக்குள்ள சோகமாகிடாத... நான் பத்ரி... இவளோட அண்ணா... இனி வாரக்கடைசில இவளை விளையாட கூட்டிண்டு வரேன்... அவளோட சேர்ந்து நீயும் விளையாடு சரியா...”, பத்ரி கூற தினம் இல்லாவிட்டாலும் கிடைத்தவரை லாபம் என்று சந்தோஷமானாள் துளசி...
வார நாட்களில் தோட்டத்திலும், வார இறுதியில் கடற்கரையின் அருகிலும் மைத்தியின் கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்தது... துளசியும் சரியாக மைத்தி சொன்ன நேரத்திற்கு கடற்கரைக்கு ஆஜராகிவிடுவாள்... துளசியின் அப்பாவும் இவர்களுடன் சேர, அதன் பின் இவர்களின் ஆரவார ஆட்டம் தொடரும்...
மைத்தி எப்படி பௌலிங்கில் சிறந்தவளோ, துளசி பாட்டிங்கில் சிறந்து விளங்கினாள்.... முன்பு வீட்டிற்கு போவதற்கு முன் கடைசி இரண்டு ஓவர் இவர்களுக்கு கொடுத்தது போய், பத்ரியின் டீமில் அவர்களின் ரெகுலர் ஆட்டக்காரர்களாக இருவரும் மாறி விட்டார்கள்...
ஒரு ஞாயிறன்று இவர்களின் குடும்ப ஜமா எப்பொழுதும் போல் அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந்து காப்பி அருந்தியபடியே பேசிக்கொண்டிருக்க அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் சோஷியல் கிளப் வைத்திருக்கும் திரு. கஸ்தூரிரங்கன், சுப்பிரமணியம் தாத்தாவை பார்க்க வந்தார்...
“வாங்கோ வாங்கோ கஸ்தூரி... காப்பி குடிக்கறேளா....”
“வணக்கம் சார்... இப்போதான் வீட்டுல குடிச்சுட்டு வந்தேன்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல வந்தேன்... நம்ம கிளப் பத்தி தெரியும் இல்லையா... அடுத்த சனிக்கிழமை ஆல்