தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 05 - சாகம்பரி குமார்
காலையில் கண்.விழிக்கும் போதே ரேச்சலுக்கு மனு குட்டி நினைவு வந்தது. உடனேயே ஓடி போய் அவளை தூக்கி கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது. சட்டென எழுந்தவள்…
'நோ… நோ… அந்த பூக்காரன் இப்போது இருப்பான். அவனை பார்க்கக் கூடாது' என்று அழுத்தமாக மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
நிதானமாக தன்னுடைய வேலைகளை செய்தாள். அதற்குள் ஷீலா தயாராகி விட்டார்.
"ரேச்சல்.. நீ இன்னும் கிளம்பவில்லையா? நாம் இன்றைக்கு மயில்பாறைக்கு போகணும். வாராந்திர மெடிக்கல் கேம்ப்… மறந்துட்டியா?"
"நான் கொஞ்சம் தாமதித்து வர்றேன்மா. ஸ்கூட்டியில் வந்தடறேன்."
"வண்டியை தொடக் கூடாதுனு சொல்லியிருக்கேன்."
"இன்னிக்கு மட்டும்மா ப்ளீஸ்"
"இன்னும் குளிக்ககூட இல்லை… இன்னிக்கு ஒரு தொண்டு நிறுவனத் தலைவியோட முக்கியமான மீட்டிங் வேற இருக்கு.. நான் கிளம்பறேன். நீ சீக்கிரமாக வா"
"சரிம்மா…. அப்புறம்…"
"என்ன விஷயம்?"
"நான் நந்தினியை பார்த்து பேசிட்டு வரேன்."
"எதுக்கு?"
"அவங்க பாவம் ஃப்ரண்டு யாருமே இல்லை.. லோன்லியா இருக்காங்க"
"ம்… சாயங்காலம் போயிட்டு வா"
"நோ… ஈவினிங் எல்லாரும் இருக்காங்க. எனக்கு கம்ஃபர்டபிளா இல்லை."
"யாரு…"
"அந்த அண்ணன்… நந்தினியோட அண்ணன்… அவங்க அப்பா… ஒரே ஜென்ட்ஸ் கூட்டமாக இருக்கு"
"அந்த தாத்தாவை விட்டுட்ட. அவர் கோவிச்சுக்க போறாரு. இந்த லிஸ்ட்ல நானும் இல்லையே அப்படி என்று வருத்தப்பட போறாரு" கிண்டலாக ஷீலா சொல்ல
"விளையாடாதீங்கம்மா" என்று அவரை கொஞ்சினாள்.
"என்னமோ உன்னுடைய பிஹேவியர் இன்னைக்கு வித்தியாசமா இருக்கு. என்னனு தெரியல… நீ ஒரு இடத்துக்கு போக தயங்குவது இதுதான் புதுசு. சரி… எனக்கு நேரமாச்சு. கிளம்பறேன். " என்று சொல்லி கிளம்பினார். அம்மாவின் கார் கிளம்பிய சப்தம் கேட்கவும்… ரேச்சல் தன்னுடைய வேலைகளை தொடர்ந்தாள்.
குளித்து முடித்து உடை மாற்றி காலை டிபனை முடித்து விட்டு அமைதியாக காத்திருந்தாள்.