அமைதி சைகை மரத்திற்கு புரியவில்லை போலும்… படக்கென்று அசைந்து வைத்தது…
மரத்திலிருந்து புளியம் பழம் கொத்தாக விழுவதுபோல இருவரும் கீழே விழுந்தனர்.
விழுந்த வேகத்தில் துள்ளி எழுந்தவள்… எடியை கை தூக்கி விட்டாள்.
"நாம நாளைக்கு பழம் பறிக்கலாம்டா" என்றபடி ஒன்றும் நடக்காததுபோல வண்டியை கிளப்பி அவனை பாராமலேயே கடந்து சென்றாள்.
"டேச்சல் அந்த ஆளு நம்மையே பார்க்கறாரு" எடி கிசுகிசுத்தான்.
"நீ அந்த பக்கம் பார்க்காதே…" என்றவள் விரைவாக வண்டியை ஓட்டினாள்.
கேம்பிற்கு வந்து சேர்ந்த பின்… எடி சொன்னான்…
"அந்த ஆளு பாவம்க்கா"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை… தப்பா அவன் மேல கல்லு பட்டாலும் சரியாதான் பட்டிருக்கு. நேத்து அவன் என்னை ஸ்டுப்பிட்னு திட்டினான்."
"அப்படியா… அப்படினால் நாளைக்கு அவன் மேல அரை செங்கலை வீசணும்." எடி சொல்ல…
அவனிடம் கல்பி கொஞ்சி கெஞ்சி நின்றது நினைவிற்கு அவள் வர..
"அந்த கல்பி மேலே அடுத்த முறை கோணி ஊசியை பறக்க விடணும்" என்று கடுகடுத்தாள்.
ஒருவழியாக 'ஸ்டுப்பிட்' என்று நாமாகரணம் செய்ததற்கு கல்லடி வாங்கி சமன்.செய்த சத்யன், அன்று மாலையே அவளை 'குரங்கு' என்று சொல்லி பாவ சுமையை ஏற்றிக் கொண்டான்.
அவனுக்கான கனமான முழு செங்கலை சுற்றுவட்டாரத்தில் ரேச்சல் தேட ஆரம்பித்தாள்.
அவன் எப்போது அவளை குரங்கு என்று சொன்னான் தெரியுமா?
அன்று மாலை ஷீலா மேத்யூஸிடம் அடிபட்ட காயத்திற்கு கட்டுபோட வந்தபோது…
"எப்படி அடி பட்டிச்சு"என்று சும்மா ஒரு பேச்சுக்கு டாக்டரம்மா கேட்டு வைக்க…
பாத்ரூம்ல விழுந்திடேன் என்றோ… நெடுநெடுனு இருக்கறதால வாசல் நிலையில் இடிச்சுகிட்டேன்னோ சொல்லிருக்கலாம்.. அதை விடுத்து…
"மேம்… ஒரு குரங்கு கல்லை எடுத்து அடிச்சிருச்சு" என்றானே பார்க்கலாம்… அடேய் குரங்காடா நான்… என்று குமுறினாள்.
"அதுகிட்ட என்ன வம்பு செஞ்சேப்பா?" என்று ஷீலா சிரித்து கொண்டு கேட்க…
"குரங்குக்கு சேட்டை செய்யறதுதானே பழக்கம். இன்னொரு முறை அப்படி செஞ்சதுனா பிடிச்சு ஜூவிற்கு அனுப்பிடணும்" என்று அவளை பார்த்தபடி சொல்லி சென்றான்.
ரேச்சல் நறநறத்தாள். பிறகுதான் முழு செங்கலை தேட ஆரம்பித்தாள். அது என்னவோ தெரியவில்வலை… அவளுடைய மனம் எதிர்பார்க்கும் அளவிற்கு வெயிட்டான செங்கல் கிடைக்கவேயில்லை! .
தேனி செங்கல் ரொம்ப ஸ்டராங்கா இருக்குமாமே?
தொடரும்
Next episode will be published on 30th June. This series is updated weekly on Tuesday evenings.