பக்கத்து வீட்டில் கார் கிளம்பி செல்லும் ஓசை கேட்கவும் படக்கென்று எழுந்தாள்.
"அப்பாடா அவங்க கிளம்பிட்டாங்க போல.." என்று பீரோவிலிருந்த அவளுடைய புதிய டெடி பொம்மையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
நந்தினியின் வீட்டிற்கும் செல்லவுமே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் வீடு அமைதியாக இருந்தது. அங்கு நடு கூடத்திலேயே நந்தினி, விஜயாம்மா, மனு குட்டி அனைவரும் இருந்தனர்.
"ஹலோ நந்தினி காலை வணக்கம்" என்று உற்சாகமாக சொல்லியபடியே அவள் முன் நின்றாள். அவளை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி ஆச்சரியமாக பார்த்தாள்.
" உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க."
" என்ன விஷயம் நந்தினி. அம்மாகிட்ட ஏதும் சொல்லனுமா"
"இல்லை… செல்லக்குட்டிதான் வாசலை பார்த்து கொண்டே இருந்தாள். உங்களை தேடிக் கொண்டிருக்கிறது போல தெரிந்தது" என்று அவள் சொல்லும் பொழுதே மனு குட்டி 'கையா முயா' என்று கத்திக்கொண்டு ரேச்சலிடம் தாவியது.
'பாத்தீங்களா… நான் கரெக்டாதான் கண்டுபிடித்திருக்கேன். நேத்து நீங்க அவகிட்ட பேசிட்டு வாசல் பக்கமா போனீங்களா.. அதிலிருந்து அவள் வாசலை பார்த்துக்கிட்டே இருந்தாள். உங்கள்தான் தேடிட்டு இருக்கான்னு நான் நினைச்சேன். என்ன ஒரு பிரியம்!. என்னால நம்பவே முடியல. புதுசா யாரை பார்த்தாலும் ஓடி போய் விடுவாள். இல்லன்னா ஓடி ஒளிஞ்சுக்குவாள்.. உங்ககிட்டதான் இவ்வளவு அட்டாச்டா இருக்காள்." என்று நந்தினி மூச்சுவிடாமல் பேசினாள்.
"சவுண்ட்ஸ் குட்.. நான் எப்பவுமே குட்டீஸ் பெஸ்ட்டீதான்.." பெருமையாக சொல்லியபடி கையிலிருந்த டெடி பொம்மையை மனுவிடம் தந்தாள்.
"அச்சோ.. இதெல்லாம் எதுக்குமா?.அவள்ட்ட நிறைய பொம்மை இருக்கு" என்று விஜயா சொல்ல…
"ஆன்ட்டி இது நானே செஞ்சது. துணியில செஞ்சதால டஸ்ட் இருக்காது. குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. இந்த கலர்ஸ் கூட வெஜிடபிள்ல செஞ்சதுதான்."
"அட… என்னோட மருமகள்கூட இப்படி செய்வாள். பீட்ரூட் . மாதுளம் தோல்… வெங்கயத்தோல் இதெல்லாம் யூஸ் பண்ணுவாள்"
"கரெக்ட்.. இன்னும் சில இருக்கு.நான் இங்க ஒரு ஸ்கூல்ல க்ராஃப்ட் க்ளாஸ் எடுக்கறேன். சனிக்கிழமை மட்டும் எடுப்பேன். அதுக்காக கத்துகிட்டேன்."
"அப்புறம் வேற என்ன செய்வீங்க"