"பெயிண்டிங்… கலம்காரி வொர்க்…" அவள் பேசிக் கொண்டே இருந்தாலும் இயல்பாக மனுகுட்டியிடம் விளையாடிக் கொண்டே இருந்தாள். அவளுடைய கவனம் முழுவதும் மனுவிடமே இருந்தது என்பது புரிந்தது.மனுவும் ரேச்சலிடம் கொஞ்சு மொழி பேசிக் கொண்டிருந்தது.
இருவரையும் தொந்தரவு செய்யாமல் மற்ற இருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
சற்று பொறுத்து… "ரேச்சல் என்ன சாப்பிடறமா"என்று விஜயா கேட்க… சுயநினைவு வந்தவள்போல திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
"அடடா… டைம் ஆயிடுச்சு. இன்னிக்கு மயில்பாறையில கேம்ப் இருக்கு. அம்மா காலையிலேயே போயிட்டாங்க. நான் உடனே கிளம்பணும்… தேங்கஸ் ஆன்ட்டி. நான் வர்றேன்" என்று பரபரப்புடன் கிளம்ப… மனுகுட்டி அவளை இறுக்கி பிடித்தது.
அவளை முத்தமிட்டு "வந்திடறேன் செல்லம்" என்று சொல்லி கிளம்பினாள்.
வெளியே வந்தவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு மயில்பாறை நோக்கி விரைந்தாள். அங்கே அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். நாள் முழுவதும் அவளுக்கு அங்கே வேலைகள் இருந்தாலும் மனுகுட்டியுடன் கொஞ்சியது அவளுக்கு இடையிடையே நினைவு வந்தது. மனுவை பற்றிய நினைவுகள் வரும் பொழுது நெஞ்சம் நிறைவதை உணர்ந்தாள். நாள்முழுவதும் அந்த நினைவிலேயே உதட்டில் புன்னகை உறைந்திருந்தது. அதை ஷீலாவும் கவனித்தார்.
"டேச்சல் அக்கா உங்களத்தான் நான் காலைல இருந்து தேடிட்டு இருக்கேன் நீங்க எங்கே இந்தீங்க?" என்ற குரல் கேட்டு பார்த்தாள். அங்கே எடி நின்று கொண்டு இருந்தான்.
எட்வர்டிற்கு எட்டு வயது இருக்கும். அவன் சிறு வயதிலேயே சர்ச்சை சேர்ந்த அன்பு இல்லத்தில் வந்துவிட்டான். பெற்றோர்களை இழந்ததால் அவனை வளர்க்கும் பொறுப்பை சர்ச்சை நிர்வாகமே ஏற்றுக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் ரேச்சல் சர்ச்சுக்கு செல்கிறாளோ அப்பொழுதெல்லாம் எடியுடன் விளையாடி விட்டுதான் வருவாள். அவனும் இதுவரை தனித்திருந்திருப்பான் போல... இரண்டு மாதங்களாக ரேச்சல் உடனான சினேகம் அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது. அதனால் அவளைத் தேடிக் கொண்டே இருப்பான்.
"ஏய் எடி… டேச்சல் இல்லடா.. ரேச்சல்" என்று திருத்தினாள்.
"அதுதான் வாயில வரலியே"
"சரி விடு. நாம ஒரு ரவுண்ட் போலாமா?"
"ஜாலிக்கா" குதூகலித்தவனை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்.