துடித்துப் போகமாட்டார்களா?
வயதான காலத்தில், அந்த துடிப்பினால், அவர்களுக்கு விபரீதமான முடிவு ஏற்பட்டுவிட்டால்......?
வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
எத்தனையோ பிறவிகள்! அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பெற்றோர், உடன்பிறந்தோர்!
அவர்களையெல்லாம் மறந்து புதிதாக வாழ்வதுபோல, இவர்களையும் மறந்து ஒதுங்கி வாழ்வதே, அவர்களுக்கும் நல்லது, தனக்கும் நல்லது!
என முடிவெடுத்து, சகாதேவன் எழுந்தபோது, பக்கத்தில் வைத்திருந்த கைப்பையை காணவில்லை!
அதில் வேறு மதிப்புள்ளது எதுவுமில்லை, ஒரு ஜோடி வேட்டி, சட்டைதான்!
' பாவம்! எவனோ பசியால் வாடுபவன், அந்தப் பையில் சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்ற நைப்பாசையில்தான், அதை எடுத்திருக்கவேண்டும்.
'என்னை மன்னித்துவிடு, ஐயா! நானும் உன்னைப்போல் ஆண்டிதான்'
வாய்விட்டு சொன்னான், சகாதேவன்!
எடுத்தவன் காதிலே விழுந்திருக்குமா என கவலைப்படவில்லை!
ஆனால், விழுந்ததே!
சகாதேவன் முகத்தில் அந்தப் பை!
திடுக்கிட்டு, எதிரே பார்த்தான், ஒரு பிச்சைக்காரன்!
" என்னமோ பெரிய மனுஷன் மாதிரி தெரியறே! பையிலே ஒரு காசுமில்லே, பொருளுமில்லே, நீயும் என்னைப்போல வெற்று ஆள்தானா?"
சகாதேவன் அவனை அருகில் அழைத்து, அவன் காதில் ரகசியமாகச் சொன்னான்.
" உன் பசி தீர, உணவு வாங்கித் தரேன், ஏதாவது ஒரு ஓட்டல் திறந்திருக்கிறதான்னு பார்த்துச் சொல்லு!"
பிச்சைக்காரன் சகாதேவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
" இருக்குய்யா, பக்கத்து வீதியிலே! வாய்யா, காட்டறேன்!"
இருவரும் வேகமாக நடந்து, அந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.
வாயிலில் நின்றிருந்த கூர்க்கா, இருவரையும் வழி மறித்து நிறுத்தினான்.
" சாப்! நீங்க போங்க உள்ளே! இந்தப் பிச்சைக்காரனை உள்ளே விடமாட்டேன், எந்தக் காலத்திலுமே, அதுவும் இப்ப கொரோனா வேற! இவன் எங்கெங்கோ திரியறவன், ஏய்! ஜாவ்ரே, ஜாவ்!"