என்று பிச்சைக்காரனை விரட்டினான்.
சகாதேவன், கூர்க்காவை சமாதானப்படுத்தி, பேசினார்.
" சரி, நானும் வெளியிலேயே நிற்கிறேன்! இவரு கேட்கறதையெல்லாம் உள்ளேயிருந்து எடுத்து வந்து கொடு, எவ்வளவு பணம்னு சொல்லு, இந்தா பணம்!"
கூர்க்கா சகாதேவனுக்கு சலாம் அடித்துவிட்டு, கேட்டதை செய்து கொடுத்தான், இனாமும் பெற்றுக்கொண்டான்.
ஏப்பம் விட்டுக்கொண்டே, பிச்சைக்காரன் திரும்பிப் பார்க்காமலேயே நடையைக் கட்டினான்!
பிச்சைக்காரன்கள் பேராசைக்காரன்கள் அல்ல, அடுத்து எப்போது பசிக்கிறதோ, அதுவரையில் நிம்மதியாக உறங்குவார்கள்!
அவர்கள்தான் உண்மையிலேயே, அந்தந்த வினாடியிலே வாழ்பவர்கள்!
சகாதேவன் தனக்குள் சிரித்துக்கொண்டே நடந்தார், கால்போன போக்கிலே!
'கால்போன போக்கிலே, மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே கால் போகலாமா?'
சினிமா பாட்டு காதில் விழுந்தது!
சகாதேவன், 'சரி, கால்போன போக்கிலும் போகலே, மனம்போன போக்கிலும் போகலே, நின்னுட்டேன், இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்லு!'
" ஐயா!" என்றொரு அபயக்குரல் கேட்டது!
சகாதேவன் திரும்பிப் பார்த்தார்.
ஒரு தம்பதி நின்றுகொண்டு அவரை நோக்கி கரங் கூப்பியது!
சகாதேவனும் கரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு, "என்ன வேண்டும்?" எனக் கேட்டார்.
" பக்கத்திலேதான் எங்க வீடு! எங்களுக்கொரு பிரச்னை! என்ன செய்வதுன்னு புரியலே, இங்கே பேசமுடியாது, கொஞ்சம் எங்க வீட்டுக்கு வந்துவிட்டுப் போறீங்களா?"
சகாதேவன் மௌனமாக அவர்களுடன் நடந்தார்!
மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பெரியவர், பதறிக்கொண்டே,"புள்ளைக்கு காய்ச்சலும் இருமலும் அதிகமாயிருக்கு, நிச்சயமா இது அதுதான், யோசிக்காம உடனே புள்ளையை ஆஸ்பத்திரியிலே சேர்க்கலேன்னா, புள்ளெயை காப்பாத்தவே முடியாது!"என துடித்தார்.
" ஐயா! இந்த ரெண்டு வயசு புள்ளெ, எங்க புள்ளெதான்! அதோ நிக்கறானே அஞ்சு வயசு புள்ளெ அவனும் எங்க புள்ளெதான்! பெரியவர் என் அப்பா!