தொடர்கதை - வாழ்வே மாயம்! - 11 - ரவை
" அக்கா! நீ சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மை! நம்ம தம்பி, ஒரே தம்பி, கூடப்பிறந்தவன், ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாகிய நம்மிலே ஒருத்தன், கெட்டவனாகவே இருந்தால்கூட, அதைப் பெரிதாக நினைத்து, அவனை ஒதுக்கிவிடக் கூடாது, அப்படி செய்தால், அவன் திருந்தவே மாட்டான்.
பதிலாக, முடிந்தால் அவனை திருத்தப் பார்க்கணும், இல்லைன்னா, கடவுளை 'அவனை சீக்கிரமே திருத்து'ன்னு வேண்டிக்கணுமே தவிர, ஒதுக்கப் படாது!"
" நிர்மலா சொல்றதுக்கு, புராணங்களிலே ஆதாரமிருக்கு! கொள்ளையடிப்பதையே தொழிலாக செய்தவன், வால்மீகி முனிவராகலையா, ராமாயணம் எழுதலையா?
காமுகனா இருந்தவர்தானே, பிற்காலத்தில் அருணகிரிநாதர் ஆனார்!"
" அக்கா! நிர்மலா சொல்றதை நான் ஏத்துக்கிறேன், அவன் நம்மைப் பெற்ற தாய் வயிற்றில் பிறந்தவன், நம் ஒரே தம்பி, அவனை நம்மால் முடிந்தால் திருத்தணும், முடியலேன்னா, கடவுளிடத்திலே அந்த பொறுப்பை விடணுமே தவிர, அவனை ஒழிக்க நினைக்கக்கூடாது!"
" சரி, சரி, அவனை கண்டுபிடிக்க டிடெக்டிவ் அவர் வழியிலே செய்யட்டும், ரஞ்சித்திடமும் நான் சொல்றேன், அக்கா! நீ வேற ஏதோ சொல்லவந்தே, அதை மறந்துட்டியே!"
"ஆமாம், வத்சலா! தேங்க்ஸ், ஞாபகப்படுத்தினதுக்கு!
தம்பி ரௌடியா இருந்து குடும்பத்துக்கு கெட்டபெயர் வாங்கிக் கொடுத்தது, தப்பு, குற்றம்னா, நாம செய்தது, செய்துகொண்டிருப்பது, அதைவிட கொடியது, மகாபாபம்! ஈரேழு பிறவிக்கும் தொடரும்.......!"
தொடரமுடியாமல் அழுகை தடுத்தது, அவள் பேச்சை!
அவளுடன், காரணம் தெரியாமலேயே, தங்கைகளும் கண் கலங்கினர்.
" சொல்றேன், சொல்லத்தானே கூப்பிட்டேன்!
என் பிள்ளை சண்முகம் ஞாபகப்படுத்தியபிறகு தான், எனக்கே நினைவு வந்தது, இன்னிக்கி, நம்மைப் பெற்ற தாயோட பிறந்தநாள்!
பங்குனி மாசம், உத்திர நட்சத்திரம், பங்குனி - உத்திரம், முருகப் பெருமானுக்கு விசேஷமான நாள்!
என் பிள்ளை சொன்னான், 'அம்மா! எனக்கு சண்முகம்னு பெயர் வைத்ததே, பாட்டிதான் நீ சொல்லியிருக்கே! அப்படி பேரக்குழந்தைகள் வரை, எல்லாரையும் உயிருக்குயிரா நேசித்து வளர்த்த பெற்றவ, எங்கே இருக்கா, எப்படி இருக்கான்னு கூட தெரிஞ்சிக்காம, நீயும் உன்கூடப் பிறந்தவங்களும், பணமே குறியா வாழறீங்களே, வயசான பெற்றவங்க சாப்பிட்டாங்களா, கொரோனா வியாதி வராம இருக்காங்களா,ன்னு கொஞ்சமும் கவலைப்படாம இருக்கீங்களே,