தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 19 - சாகம்பரி குமார்
"ம்மா…! இன்னிக்கு நான் சமைக்கிறேன். நீங்க சாப்பிடுங்க" என்ற ரேச்சல் ஷீலாவிடம் கொஞ்சிக் கொண்டு இருந்தாள்.
"ஏன் மேரி இல்லையா?" என்று கேட்டார்.
"இருக்காங்க. ஆனா என்னோட அம்மாவுக்கு நான் சமைத்து தர வேணும் அப்படின்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு" என்று குழந்தை போல தலையை ஆட்டிக் கொண்டு சொன்னாள்.
"அதுக்கு என்ன இப்ப அவசியம் வந்தது?"
" எல்லாம் ஒரு பாசம் தான்மா" என்று சொல்ல... இருவரும் சிரித்தனர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
" ஜெமி வந்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறது" ஷீலா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெமி கையில் பெட்டியுடன் உள்ளே வந்தான்.
ஷீலாவை பார்க்கவும்,
" குட் மார்னிங் ஆன்ட்டி" என்றான்.
" நல்லபடியா முடிச்சதாப்பா" என்று கேட்டார்.
" ஒரு அளவுக்கு எல்லாம் முடிந்து விட்டது."
"ஜெமிக்கு காபி போட்டு வர்றேன்மா" என்று சொல்லி சமையலறைக்கு விரைந்தாள்.
" ரொம்பவும் சோர்வாக தெரிகிறாய். ஏதாவது சிக்கலா?" என்று கேட்க,
"இல்லை ஆண்ட்டி. எனக்கு பாஸ்வேர்டு கிடைச்சிருச்சு. அதேபோல ஷேர் சர்டிபிகேட் கொஞ்சம் இருந்தது. எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கேன். அங்கிள் பேரில் இருக்கிற ஷேர் சர்டிபிகேட் எல்லாவற்றையும் உங்க பேருக்கு மாத்தணும்."
"என் பேருக்கு எதுக்கு… ரேச்சல் பேருக்கு மாத்திடு."
"இல்லை ஆன்ட்டி… உங்களைத்தான் அங்கிள் நாமினியா போட்டிருக்கார்."
"என்னையா… நான் அவரோட வாழ்ந்த வாழ்க்கைக்கு கைமாறா?" என்று அலுப்பாக கூறினார். தொடர்ந்து…
"என் வாழ்க்கையிலேயே எனக்கு நிறைவை தர்றது ரேச்சல்தான். என்னோட உயிர் அவள்… அவளுக்கு இல்லாமல் எனக்கு எதுக்கு மாத்தனும்."
"அது… அதை பற்றி பிறகு பார்க்கலாம் ஆன்ட்டி… நான் போலீஸ் ஸ்டேஷன் போய் அங்கிளோட டெத் சர்டிபிகேட் வாங்க அனுமதி வாங்கணும்."
"இருப்பா… இப்பதானே வந்தே… கொஞ்சம் பொறு…" அவர் சொல்லும்போது ரேச்சல் கையில் காபி ட்ரேவுடன் வந்தாள்.
"ஹாய்… என் கையால போட்ட காபியை சூடாக குடிங்கப்பா… சுறுசுறுப்பாயிடலாம்"