தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்
பொழுது விடிந்தது...
வேகமாக கிளம்பிய குயிலி பத்திரப்படுத்தி வைத்த பழைய செய்திகளை எடுத்துக் கொண்டு மீண்டும் ராகவ்வை பார்க்க சென்றாள்.
அவளைப் பார்த்ததும் வாட்ச்மேன் அவளை உள்ளே விட மறுத்தான் நேற்று உங்களால் வீட்டிற்குள் பெரிய பிரச்சினையே நடந்து விட்டது. அதனால் இன்று உங்களை என்னால் உள்ளே அனுப்ப முடியாது. தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று அவன் எவ்வளவோ கூறி பார்த்தான்.
ஆனால் குயிலி கேட்பதாக தெரியவில்லை. வாசலில் நின்று ராகவ்.. நான் உன்னை பார்க்க வேண்டும். தயவு செய்து வெளியே வா வெளியே வா... என்று கத்திக்கொண்டே இருந்தாள். அவள் கத்திய சத்தம் வீட்டிற்குள்ளே கேட்டது.
அவளது சத்தத்தை கேட்ட ராகவ் வாட்ச்மேனுக்கு அழைத்து அவளை உள்ளே விடுமாறு கூறினான்.
உள்ளே வந்த குயிலி ராகவ்விடம் உண்மையை எடுத்துக் கூற எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவனோ எதையும் புரிந்து கொள்ளவும் இல்லை. அவளை பேச அனுமதிக்கவும் இல்லை.
இப்பொழுது எதற்காக வந்தாய். உன்னிடம் பேசி என் நேரத்தை நான் செலவழிக்க விரும்பவில்லை என்று தன் அறைக்குள்ளே சென்று விட்டான் ராகவ்.
ஒரே ஒரு நிமிடம் இந்த செய்தித்தாளை மட்டும் பார்... உனக்கு உண்மைகள் புரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது உனக்கு புரியும். தயவுசெய்து இந்த ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் பார் என்று அவள் கத்திக் கொண்டே இருக்க அவனும் தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான். அதை பார்த்த புஷ்பா குயிலியை பார்த்து முறைத்தாள்.
என் பையன் தான் உன்னிடம் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டானே.. மீண்டும் மீண்டும் எதற்காக வந்து அவனைத் தொந்தரவு செய்கிறாய். அதுதான் உனது லட்சியமா. இங்கிருந்து சென்று விடு. இனி அவனது வாழ்வில் நான் உன்னை பார்த்தேன் என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என் மகன் வாழ்வில் யாரும் வருவதை நான் விரும்பவில்லை. என் மகன் நன்றாக வாழ வேண்டும். முதலில் இங்கிருந்து வெளியே சென்று விடு என்று புஷ்பா கோபத்துடன் பேச குயிலியும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். புஷ்பா ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு முறை என் பையன் ராகவ் என்று கூற மறக்கவில்லை. புஷ்பா பேசியது உள்ளே இருக்கும் ராகவ்விற்கு தெளிவாக கேட்டது.