தமிழ்செல்வி அவளது வீட்டை நோக்கி செல்ல, மாறனும் எழுந்து அவுட் ஹௌசை நோக்கி சென்றான். இருவரது உருவமும் மறையும் வரை காத்திருந்த நந்தாவும் விக்கியும் அந்த செடியின் மறைவில் இருந்து வெளியே வந்தனர்.
விக்னேஷின் முகம் கோபத்தில் இறுகி கிடந்தது. அவனது முகத்தை கண்ட நந்தா "விக்கி மாமா இப்போ என்ன பண்றது? இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை பார்த்தா...."நந்தா தயக்கத்துடன் இழுக்க, தன்னுடைய கையில் இருந்த மொபைலை காண்பித்தான் விக்னேஷ்.
"மாமா ரெகார்ட் பண்ணிட்டிங்களா? " நந்தா கேட்கவும் "ஆமா இதை நான் மாமா கிட்ட கொடுக்க போறேன். அதுக்கப்பறம் என்ன பண்ணணுமோ அதை அவரு பண்ணிடுவாரு" விக்னேஷ் அதே கோபத்துடன் சொல்ல "ஆனா அவங்க முழுசா என்ன பேசுனாங்கனு தெரியாதே. ஒருவேளை நம்ம பாதி கேட்டு எதுவும் தப்பா புரிஞ்சிகிட்டு இருந்தா? உங்களுக்கே அப்பாவை பத்தி தெரியும். கண்டிப்பா மாறனை கொன்னே போடுவார்" நந்தாவிற்கு உள்ளுக்குள் சிறு உதறல் எடுத்தது. அவன் பயந்து பம்முவதை கண்ட விக்கி, "ரெஜிஸ்டெஷன் ஆபீஸ் கல்யாணம் கையெழுத்து இதுக்கெல்லாம் வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்? நீ ஜஸ்ட் என் கூட நின்னா போதும் மத்ததை நான் பார்த்துக்கறேன்" விக்னேஷ் ஒருவழியாக நந்தாவை சம்மதிக்க வைத்தான்.
அந்த போனையும் எடுத்து கொண்டு இருவரும் ராமநாதனின் அலுவலக அறையை நோக்கி சென்றனர்.
"விக்கி..." விக்னேஷை அடிக்க கையை உயர்த்தியபடி கோபத்துடன் நின்றிருந்த ராமநாதனை கண்ட நந்துவுக்கு பயத்தில் தொண்டை உலர்ந்து போனது. ஆனால் அந்த கோபத்திற்கு எல்லாம் அசராமல் நின்றிருந்தான் விக்னேஷ்.
"அங்கிள் கோபப்படாதிங்க. நம்ம தமிழை பத்தி தப்பா நான் பேசுவேனா? எல்லாம் அந்த மாறன் தான். நம்ம தமிழுடைய நல்ல மனசை யூஸ் பண்ணி அவளை கல்யாணம் பண்ணி பெரிய வீட்டு மருமகனாக பிளான் பண்ணிருக்கான். இதோ அதுக்கான ப்ரூப் ஓட தான் வந்துருக்கேன்" என்றவன் அந்த ஒலிப்பதிவை ஓடவிட்டான். அது பேசி முடிக்கவும் அதிர்ந்து போனார் ராமநாதன்.
"நந்து தமிழை கூப்பிடு" அவர் இறுகிய முகத்துடன் உறும, "மாமா நீங்க அவளை கூப்டு கேட்டாலும் இல்லைனு தான சொல்லுவா? உங்களை பத்தி அவளுக்கு தெரியாதா? உங்களால அவனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு தான் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பா. கல்யாணம் பண்ணிட்டு வந்தா எப்படியும் சேர்த்துக்குவோம்னு அவளை தூண்டி விட்டு இருப்பான் மாமா" விக்னேஷ் ராமநாதனின் கோபத்தில் எண்ணெய் ஊற்ற, கோபம் கண்களையும் புத்தியையும் மறைத்தது ராமநாதனுக்கு.