சில நிமிடங்கள் அணுகு அமைதி நிலவ, அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் "விக்கி, நந்து நீங்க ரெண்டு பேரும் போலாம். இனி ஆக வேண்டியதை நான் பார்த்துக்கறேன்" எனவும் இருவரும் தலையசைப்புடன் வெளியே வந்தனர்.
"என்ன விக்கி அப்பா அமைதியா இருக்காரு" நந்து கேட்க, "அவரோட அமைதி புயலுக்கு முன்னால் வர அமைதி. வீச போற புயலுடைய அழிவு என்னனு நாளைக்கு பார்ப்ப..." என்ற விக்கி மனதிற்குள் நினைத்து கொண்டான் "அவர்கள் இருவருக்கும் காதல் இல்லாமலே இருந்தாலும் அப்படி ஒன்று நடக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் போக வேண்டும்" என.
நேரம் ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது. கல்லூரி பேருந்தில் இருந்து அந்த ரெஜிஸ்திரார் ஆபீஸ் வளாகத்தின் முன் இறங்கினாள் தமிழ்செல்வி. அவளுக்கு மனதிற்குள் ஒரு பயம் காலையில் இருந்தே இருந்தது. முதல் முதலில் இது போன்றதொரு காரியம் செய்வதால் இருக்கும் என்று சமாதானப்படுத்தி கொண்டவள் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தாள். இன்னும் அலுவலக பணி நேரம் தொடங்கவில்லை என்பதால் ஆட்கள் கூட்டம் குறைவாக இருந்தது. கண்களால் அந்த இடத்தை துளாவியபடியே நடக்க ஒரு மரத்தின் பின்னல் இருந்து அவளை நோக்கி கையசைத்தபடி வந்தான் மாறன் கைகளில் இரண்டு மாலையுடன்.
தமிழ்செல்வி அவனை கண்டதும் முகம் மலர புன்னகையுடன் அவனுக்கு பதில் சொல்லும் விதமாக கையசைத்தபடி அவனை நோக்கி சென்றாள். இருவருக்கும் இடையே ஒரு நூறு அடி தொலைவிருக்க அவனை நோக்கி சென்றவள் கண் முன்னே இமைக்கும் நொடிகளில் நான்கு பேர் கையில் அரிவாளுடன் தமிழ்மாறனை சுற்றி வளைக்க, என்ன நடந்தது என்று உணரும் முன்னே ரத்த வெள்ளத்தில் மாறன் சரிந்தான். அவனை சுற்றி இருந்த அந்த நால்வரும் அடுத்த நொடி அந்த இடத்தை விட்டு ஓடியிருக்க, "மாறா " என்ற அலறலுடன் தளரும் கால்களை பலமாக பிடித்து இழுத்தபடி அவனிடம் ஓடியவள் அவனை எடுத்து மடியில் கிடத்தினாள்.
"ஐயோ...மாறா...மாறா..." அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. கண்களில் கண்ணீர் கரை புரள அவள் இரண்டு கைகளை வைத்து ரத்தம் வெளியேறும் பகுதிகளை அமுக்கி ரத்தத்தை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள்.
"தமிழ்..." அவன் குரல் பலவீனமாக ஒலித்தது.
"மாறா ஒன்னும் ஆகாது பயப்படாத" என்றவள், "யாராச்சும் அம்புலன்சுக்கு கால் பண்ணுங்க ப்ளீஸ்" என்றாள் அங்கே சுற்றி இருந்த ஒண்டிரண்டு பேரை பார்த்து.
"த...தமிழ், அம்மா தங்கச்சி...." மாறன் குரல் இன்னும் பலவீனமாக ஒலிக்க, "மாறா மாறா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ பயப்படாத. என்னை பாரு. என்கூட பேசிட்டே இரு.