தன்னுடைய மகளின் நிலையை எண்ணி வேதனை படுவதா என புரியவில்லை அவருக்கு.
கிட்டத்தட்ட ஒரு மாத மருத்துவமனை வாசத்திற்கு பின் வீட்டிற்கு வந்தாலும் தமிழ்செல்வியால் மீண்டும் கல்லூரிக்கு செல்ல இயலவில்லை. அடிக்கடி கல்லூரியில் மயங்கி சரிந்தாள். மீண்டும் மருத்துவரிடம் காட்டியபோது அவளுக்கு ரத்தத்தை கண்டு பயப்படும் ஹீமோபோபியா இருப்பதாக சொன்னார்கள்.
தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். அவள் கண் முன்னால் மாறன் துடித்தது இன்னும் கண் முன்னே இருந்தது. ஏதோ ரவுடி கும்பல் தவறாக அவனை வெட்டியதாக கூறி போலீசில் சரணடைந்ததாக கேள்வி பட்டபோது உடைந்து அழுதாள்.
அவனும் அவளும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை கையில் வைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தவளுக்கு அவன் அவளிடம் அவனின் அம்மாவையும் தங்கைகளையும் பார்த்து கொள்ள சொல்லி சத்தியம் வாங்கியது நினைவிற்கு வந்தது.
தன்னாலேயே இந்த துக்கத்தை கடந்து வர இயலவில்லையே அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று புரிந்தது தமிழ்செல்விக்கு.
கண்களை துடைத்தவள் முகத்தை கழுவி கொண்டு தன்னுடைய அறையை விட்டு கீழே வருவதற்காக மாடிப்படிகளில் இறங்க ராமநாதனின் அறைக்குள் இருந்து நந்துவின் சத்தம் கேட்டது.
"முட்டாள் உன்னால என்ன நடந்துச்சு பார்த்தியா? இப்போ வந்து மாறனுடைய பிரெண்டுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் அங்க போனாங்கனு சொல்ற..." நந்துவை ராமநாதன் அடிக்க செல்ல "ஐயோ வேண்டாம் அடிக்காதிங்க" என அவரை தடுக்க முயன்றார் அவனின் அம்மா.
"எவ்ளோ பெரிய தவறை செய்துட்டேன்..."என்று தன்னை தானே திட்டியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவர் "நீங்க ரெண்டு பேரும் சென்னைல இருக்கற மாறனுடைய வீட்டுக்கு நேரா போய் அவங்க அம்மா கிட்ட நான் கொடுத்ததா சொல்லி இருபத்தி அஞ்சு லட்சம் கைல கொடுத்துட்டு வாங்க. அந்த குடும்பம் அதை வெச்சு பிழைச்சுக்கட்டும். போ என் கண் முன்னாடி நிக்காம இந்த காரியத்தையாச்சும் உருப்படியா பண்ணு" ராமநாதனின் உருமலில் நந்துவும் அவன் அம்மாவும் அந்த அறையை விட்டு வெளியே செல்ல கதவை திறக்க, எதிரே நின்றிருந்த தமிழ்செல்வியை கண்டு உறைந்து போயினர்.
"கு...குட்டிமா..." ராமநாதன் அதிர்ச்சியுடன் எழுந்திருக்க, அவரின் அருகே வந்தவள் "அ...அப்பா, மாறனுக்கு எப்படி அபப்டி ஆச்சுப்பா?" கண்களில் கண்ணீர் குளம் போல கட்டி நிற்க, விரல்களை இறுக மடித்து உதட்டை கடித்து கண்ணீர் வெளியேறாமல் கட்டு படுத்தியபடி கேட்டாள் தமிழ்செல்வி.