“அச்சோ முதல் முறையா பொண்ணு வெளிநாடு கிளம்பும்போது இப்படி ஆகிடுச்சே....”, கண்ணன் வருத்தப்பட அப்பொழுதுதான் மைத்தி மறுநாள் லண்டன் செல்ல டெல்லி கிளம்ப வேண்டும் என்ற நியாபகமே அனைவருக்கும் வந்தது....
“கண்ணன் மாமா இந்த மேட்ச் விளையாட நான் லண்டன் போகலை...”, மைத்தி கூற அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்....
“என்ன சொல்ற மைத்ரேயி.... உனக்கு பைத்தியம் ஏதானும் பிடிச்சு போச்சா... இந்த வாய்ப்பு வாங்க நான் எத்தனை தூரம் போராடினேன்னு தெரியுமா.... சாதாரணமாவே நம்ம ஆளுங்களுக்கு இந்திய அளவுல வாய்ப்பு குறைவு... இதுல நீயும் துளசியும் குறைந்த அனுபவம் உள்ளவங்க.... அப்படியும் உங்க திறமை மேல இருக்கற நம்பிக்கைல நீங்க நல்லபடியா விளையாடுவீங்கன்னு சொல்லி போராடி நானும், தமிழ்நாடு டீம் கோச்சும் சேர்ந்து வாங்கி இருக்கோம்.... இப்போ போக மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்....”
“நீங்க சொல்றது சரிதான் கோச்.... உங்களுக்கே தெரியும் எனக்கு கிரிக்கெட் எத்தனை முக்கியம்ன்னு.... ஆனா அதைவிட எங்கப்பா எனக்கு முக்கியம் கோச்... அவருக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கற நிலைல நான் எப்படி விளையாட முடியும்....”
“நீ என்ன பக்கத்து ஸ்கூல்கூட விளையாடற மேட்ச்சுன்னு நினைச்சியா மைத்ரேயி ... உன்னோட இஷ்டத்துக்கு வர மாட்டேன்னு சொல்ல... இது வேறு ஒரு நாட்டோட நடக்கப் போற போட்டி.... உன் ஒருத்திக்காக எத்தனை செலவு பண்ணி இருக்காங்கன்னு தெரியுமா....”
“கோச் அதுக்காக இப்படி ஒரு இக்கட்டான நிலைல என்னால போக முடியும்...”
“உன்னோட நிலைமை புரியுது மைத்ரேயி.... ஆனா நீ நினைக்கற மாதிரி அத்தனை சுலபமா வர முடியாதுன்னு சொல்ல முடியாது... உங்களுக்கு விசா வாங்க முன்னாடியே ஏகப்பட்ட forms-ல கையெழுத்து வாங்கி இருப்பாங்க.... அவங்களோட கண்டிஷன்களுக்கு நீ ஒத்துக்கறேன்னு சொல்லித்தான் உன் சார்பா உங்கப்பா கையெழுத்து போட்டிருப்பார்.... நீ இப்போ வரமாட்டேன்னு பின் வாங்கினா அவங்க உனக்காக செலவு பண்ணின பணத்தை திரும்ப கொடுக்கணும்.... அதுவும் தவிர இது உன்னோட முதல் இந்திய அளவிலான போட்டி... முதல் போட்டிலையே விளையாட முடியாதுன்னு நீ பின் வாங்கினா மற்ற போட்டிகள்ல விளையாட வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகம்தான்...”
“கோச் எங்கப்பாக்கு இந்த மாதிரி நிலைமைன்னு சொன்னாக்கூடவா புரிஞ்சுக்க மாட்டாங்க....”
“அவங்களுக்கு நீ ஒரு வீராங்கனை அவ்வளவுதான் மைத்ரேயி.... நீ வர மாட்டேன்னு சொன்னா அடுத்து அவங்க இன்னொரு ஆள் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு விசா கிடைச்சு அனுப்பி வைக்க எத்தனை நாள் ஆகும் யோசி... இந்த கஷ்டம்லாம் எதுக்குன்னுதான் யோசிப்பாங்க....