தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 16 - ஜெபமலர்
திரும்பி போவது எப்படி என்று யோசிப்பதை விட்டு விட்டு எப்படி முன்னேறி செல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
செங்குத்தான பாறைகளைக் கூர்ந்து பார்த்தாள். இன்னும் சிறிது கீழே இறங்கி சென்றால் இரு மலைகளும் ஒரு இடத்தில் பட்டும் படாமலும் இணைவது தெரிந்தது. அதை பார்க்கும் பொழுது பட்டும் படாமலும் இதழ் ஒற்றி எடுக்கும் காதலர்களின் நினைவு வர அவளுக்கு ராகவ் நினைவு வந்தது. அவன் இப்போது அருகில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்ற எல்லா எண்ணங்களையும் அதோடு அச்சத்தை விலக்கிவிட்டு தைரியத்தை எடுத்துக் கொண்டு ஒரு வேகத்துடன் கவனமாக செயல்பட்டாள்.
ஒரு அடி பிசகினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தாள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பாறையின் உறுதித்தன்மையை உறுதி செய்து கொண்டாள்.
கடின உழைப்பிற்குப் பிறகு ஓவியம் இருக்கும் குன்றின் முனையை தொட்டு இருந்தாள். கவனமாக இந்த பாறையில் இருந்து அடுத்த பாறைக்கு சென்றவள் மெதுவாக மேலே ஏற தொடங்கினாள்.
பாறையின் இடுக்கில் ஆங்காங்கே சிறு சிறு செடிகள் வளர்ந்து இருக்க அவளுக்கு இடையூறாக இருந்தது. இந்த பாறையின் இன்னொரு பக்கத்தில் நிச்சயம் நீர்வீழ்ச்சி இருக்க வேண்டும். அதனால்தான் இந்தப் பாறையின் இடுக்கில் நிறைய செடிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே ஏறுவதற்கான பாறையைக் பிடிக்க அந்தப் பாறையை சுற்றிக்கொண்டிருந்த செடியின் கொடி அவள் மீது விழுந்தது.
விழுந்த அடுத்த நொடி அரிப்பு எடுக்க தொடங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் மற்றொரு பாறையை பிடிக்க அந்த பாறை சரிந்து விழுந்தது.
நல்லவேளை.... மேலே விழாமல் உரசி சென்றதால் சிறு சிராய்ப்புகள் மட்டுமே மீண்டும் ஏற்பட்டது.
ஒருவேளை நம் மேல் விழுந்து இருந்தால் நாமும் பாதாளத்தில் விழுந்து இருக்க வேண்டியதுதான். நல்ல வேளை தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டாள். ஆனால் அவள் இதயத் துடிப்பு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல இடைவெளி தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தது.
ஒரு நொடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் பற்றியிருந்த பாறையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கீழே விழுந்த பாறை துண்டின் இடுக்குக்குள் செல்ல முயன்றாள். அதற்கு சற்று சிரமமாக இருக்க மற்றொரு பாறையை வேகமாக உருட்டி விட்டவள் இடைவெளி