அப்படி என்றால் சரியான இடத்தில் தான் நான் நிற்கிறேன். அப்படி என்றால் வழி எங்கே இருக்கும் என்று யோசிக்க அந்த குறிப்பு ஓவியத்தின் கீழே இருந்த வாக்கியம் அவள் கண்களில் பட்டது.
துணையை நீக்கி விடு என்று வாசகத்தை பார்த்தாள். மீண்டும் யோசித்தவள் அந்த இடத்தில் மீண்டும் தேட ஆரம்பித்தாள்.
அந்த புத்த சிலையை ஒட்டியது போல இருந்த பாறையில் புத்த விகாரம் என்ற சொல் வண்ணக் கலவைகள் கொண்டு எழுதப்பட்டு இருந்தது. அங்கு இருந்த ஓவியங்களில் காணப்படும் பெயிண்ட் பளிச்சென்று இருக்க இந்த புத்த விகாரம் என்ற சொல்லில் இருந்த வண்ணக்கலவை மட்டும் சற்றுமங்கலாக தெரிந்தது.
யோசித்தவளுக்கு சற்று புரிந்தது போல் இருந்தது. தாத்தா உருவாக்கி இருந்த கல்லறையின் பாதுகாப்பு பெட்டி நினைவிற்கு வந்தது. இந்த குறிப்பை வைத்து தான் தாத்தாவும் அப்படி ஒரு குறிப்பு கொடுத்திருப்பார் போல என்று யோசித்தவள் புத்த விகாரம் என்ற வார்த்தையை தடவிப் பார்த்தாள். ஆனால் அதில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.விகாரம் என்பதில் வரும் "கா"வில் துணை எழுத்து இருக்கிறதே என்று யோசித்தவள் தன் பேக்கை திறந்து சிறிய கத்தியை எடுத்து கா என்ற வார்த்தையின் துணையெழுத்தின் நடுவில் வெட்டுவது போல ஒரு கோடு வரைய அவள் எதிர்பார்க்காத விதமாக அந்தப் பாதை திறந்து கொண்டது. அது ஒரு சுரங்கப்பாதை என்பதைப் புரிந்து கொண்டவன் கீழே இறங்கி நடக்க வழி எங்கும் புத்த சிலைகள் காணப் பட்டது.
சுரங்கம் ஒரு இடத்தில் முடிவுக்கு வர வழி இல்லாமல் அங்கு இருந்த ஒவ்வொரு புத்தர் சிலைகளையும் மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி பார்த்தாள். ஒவ்வொரு சிலைகளையும் கூர்ந்து கவனிக்க அதில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக தோன்ற அந்த சிலையை தொட்டு பார்த்தாள்.
பின்பு அந்த சிலையில் இருந்த வித்தியாசத்தை கவனித்தாள். அனைத்து சிலைகளும் கண்மூடி தியான நிலையில் இருக்க அந்த சிலையின் கண்கள் மட்டும் திறந்து இருந்தது.
அந்த திறந்த கண்களைத் தொட்டு பார்க்க அதன் இமைகள் அசைந்தது. அசைந்த இமைகளை கைகளால் பிடித்து இழுக்க அந்த சிலை திறந்து அங்கே ஒரு வழி தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் அந்த சிலை மீண்டும் மூடிக் கொண்டது. அந்த வழி மூடிக் கொண்டதால் ஏற்பட்ட பெரும் சத்தத்தில் தானாக அச்சம் வந்து அவளுக்குள் ஒட்டிக்கொண்டது.
ஐயோ... இனி என்ன செய்வது... எப்படி வெளியேறுவது என்று சிலையை நகர்த்த முயற்சிக்க அந்த வழி திறந்து கொள்வது போல தெரியவில்லை. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.