"நம்முடைய மூளை நினைவுகளை பதிய வைக்கும் எந்திரம் மட்டுமல்ல… அவற்றை நமக்கு தேவைப்படும்போது எடுத்து தர சில விதிமுறைகளையும் வைத்திருக்கிறது. உங்களுடைய மனதை ஆழமாக பாதிக்கக் கூடிய விஷயத்தை மறைத்து வைத்து விடும். சில மனிதர்கள்… சில சம்பவங்கள்… போன்றவற்றை நமக்கு நினைவூட்டாது. அதேபோல அம்னீசியாவில் இருக்கும்போது நம்முடைய மூளையின் சில நினைவு பகுதிகளை பயன்படுத்த விடாது. நான் யார்… என்ன செய்து கொண்டு இருக்கிறேன்… இது போன்ற விஷயங்களை மறக்கடித்து விடும். ஆனால் அவை மூளையின் நினைவகத்தில்தான் இருக்கும்.. எப்போதாவது அவை நமக்கு நினைவிற்கு வரலாம்… "
"இப்போது மீராவிற்கு அப்படித்தான் நடந்திருக்கிறதா?"
"அவருக்கு அந்த அம்னீசியா விபத்தில் தலையில் அடிபட்டு வந்திருந்தால் அந்த காயம் ஆறியபின் பழைய நினைவுகள் மீளும். ஒரு அதிர்ச்சியின் காரணமாக அம்னீசியா வந்திருந்தால் தானாகவே சரியாகி விடும். அவர் அம்னீசியாவில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சிகள்கூட அவருக்கு நினைவில் இருக்கும். முந்தைய நினைவுகளும் தற்போதைய நினைவுகளும் ஒருமித்து ரிட்ரைவ் ஆகும்போது அவருடைய மூளைக்கு ஓய்வு தேவைபடுகிறது. அதுத்தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்"
"ஓ… அவளுக்கு உயிருக்கு ஆபத்து இல்லாமல் போனால் போதும் டாக்டர்."
"அது பிரச்சினை இல்லை. ஆனால் அவருக்கு பழைய நினைவுகள் வந்து விட்டதா அல்லது இப்போதைய நினைவுகளும் மறந்து விட்டதா என்பதை இனிமேல்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போது அவர் கண் விழிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்று சொல்லி விட்டு சென்றார்.
"அவர் என்ன சொல்றார்…" ஜெமி கேட்டான்.
"தான் மீரா என்பது நினைவிற்கு வந்திருக்கலாம்.. அல்லது ரேச்சலாகவே கண் விழிக்கலாம்… இரண்டும் இல்லாமலும் இருக்கலாம்… இரண்டும் சேர்ந்தும் இருக்கலாம்…" ரஞ்சன் சொல்ல…
"ப்ரோ… நீங்க வானிலை அறிக்கை சொல்ற மாதிரி இருக்கு…"
"ப்ச்… எனக்கே தெளிவாக இல்லை. மீராவாக வரலாம்… அல்லது ரேச்சலாக மட்டும் இருக்கலாம். அல்லது மீராவும் இல்லை ரேச்சலும் இல்லை வேறு புது அவதாரம் எடுக்கலாம்…."
"ஒருவேளை மீராவாக மாறினாலும் ஷீலா ஆன்ட்டியை அம்மானு கூப்பிடவும் செய்யலாம். சரியா ப்ரோ…"
"கரெக்ட்… அதுவரை காத்திருப்போம்."