நிச்சயம் அவனுக்காக ஒரு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டியிருந்திருக்கும்.
கோபத்தில் அவளது சிவந்த முகம் மேலும் சிவப்பாகித் தகித்தது. கண்கள் தீக்கங்குகளாய் மிளிர்ந்தன. கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட பெண் புலி எப்படி உறுமிக் கொண்டே அங்குமிங்கும் நடக்குமோ அதுபோல் அர்ச்சனாவும் அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
பார்வதி எதுவும் பேச இயலாமல் விழிகளை விரித்துக் கொண்டு அவளைப் பார்த்தபடியே நிற்க,
“ஏம்மா...அந்த மடையன்தான் அப்படிக் கேட்கறான்னா...நீயும் என்னமோ “அவன் சொல்வது சரி!”ங்கற மாதிரியல்ல பேசறே?...என்னதான் நெனச்சிட்டிருக்கே உன் மனசுல?...அவன் ஆசைப்படியே என்னைய அவனுக்குத் தாரை வார்த்திடலாம்னு நெனச்சிட்டிருக்கியா?...அப்படியொரு எண்ணமிருந்தா அதை இப்பவே சுத்தமா அழிச்சிடு!...ஒரு வேளை என்னையும் மீறி நீங்க ஏதாவது செஞ்சு உங்க எண்ணத்தைச் செயல் படுத்த நினைச்சீங்கன்னா...அவன் கை என் கழுத்துக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி என் கை அவன் கழுத்தில் கீறல் போட்டுடும்!...ஜாக்கிரதை!”
சரவெடி போல் அவள் தொடர்ந்து பேசிக் கொண்டே போக, இடையில் புகுந்து அவளைக் கையமர்த்தினாள் பார்வதி, “என்னடி...என்னடி தப்பு அதுல?....மனசுக்கு யாரைப் பிடிக்குதோ அவங்களைத்தானே கல்யாணம் பண்ணிக்க முடியும்?...அப்பத்தானே காலம் பூராவும் சந்தோஷமா குடும்பம் நடத்த முடியும்?...உலக நியதியே அதுதானே?...என்னமோ பெரிசா பேச வந்திட்டா?...நீ மட்டும் உனக்குப் பிடிக்காதவனையா கட்டிக்குவே?...பிடிச்சவனைத்தானே கட்டிக்குவே?...அதைத்தானே அவனும் சொல்றான்?”
“த பாரும்மா... “திருமணம்” ங்கறது ரெண்டு மனசு சம்மந்தப்பட்ட விஷயம்...அவன் ஒருத்தனுக்கு மட்டும் பிடிச்சா போதாது!...எனக்கும் அவனைப் பிடிக்கணும்!..அப்பத்தான் வாழ்க்கைல சந்தோஷம் தெரியும்!...இல்லேன்னா சந்தோஷம் தெரியாது...கோர்ட்டும் கேஸும்தான் தெரியும்!”
“ஏய்...ரொம்பத்தான் துள்ளாதடி!...கடைசியா...இப்ப என்னதாண்டி சொல்றே?” ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டாள் பார்வதி.
“அவனோட அந்தக் கனவு பலிக்கவே பலிக்காதுன்னு சொல்லி அனுப்பிடுங்க...அவ்வளவுதான்!...இதுக்கு மேலே இதைப் பத்தி யாரும் பேசாதீங்க!...பேசுனீங்க....?” அர்ச்சனாவும் பற்களை “நற...நற”வென்று கடித்துக் கொண்டு பதிலுக்கு ஆட்காட்டி விரலை நீட்டிச் சொன்னாள்.
“ஓஹோ....உனக்கு உடம்புல அத்தனை திமிர் ஏறிப் போச்சா?...உன்னை அடக்க ஆளில்லைன்னு நெனச்சிட்டு ஆடறியா?”